நிறுவனர்:நிலாமகள். Powered by Blogger.

பறத்தல் - பறத்தல் நிமித்தம்

வகையினம் >


தான் பிடிக்கும் கரப்பானை
மசாலா கூட்டுவதுமில்லை;
வறுப்பதுமில்லை; வேக வைப்பதுமில்லை...
உடனே தின்றுவிடுவதுமில்லை புஜ்ஜி.

கவ்வலிலிருந்து விடுவிக்கும்
எதிர்பாரா சுதந்திரத்தில் திகைத்து
இலக்கின்றி ஓடும் கரப்பான்
ஓரெல்லை வரை அனுமதித்து
சட்டென்று கரப்பான் ஓட்டத்தை தன்
முன்னிரு கைகளால்
தடுத்தாட்கொள்ளும்.

உள்ளங்கையடியில் அதன் நெளிவின் குறுகுறுப்பை
ரசித்து அனுபவிக்கும்.
பெரிய மனசுக்காரிபோல் மறுபடியும் ஓட விடும்.
தட்டுத் தடுமாறி பூச்சி ஓடும்.
மறுபடி மறுபடி பிடித்தும் விட்டும் விளையாடி
அலுத்துப் போகும் போது பூச்சியின்
ஆயுள் முடியும். 

Share on:



       ஒரு துணிக்கடை. பண்டிகைக்கு இன்னும் ஒருமாதம் இருக்கும் நேரம். இலேசான கூட்டம் கடையில்.  வெள்ளை கோட் தேடி வந்த மூவர், கடை சிப்பந்தி காண்பித்தவை திருப்தி படாததால் வெளியேறுகின்றனர். வழிமறித்த கடை முதலாளி என்ன தேடி வந்தீங்க? ஏன் எதுவும் வாங்காமல் போறீங்க? என்றார்.
“வெள்ளை கோட்...”
“இருக்கே... ஏ... சரவணா... காட்டுப்பா இவங்களுக்கு...”
“பார்த்தோம்...”
“அப்புறம்?”
“சைஸ் சரியில்லை. அதான்...”
“எல்லா சைசிலும் நம்ம கிட்ட இருக்கே. சொல்லப்போனா இந்த ஊரிலேயே நம்ம கடையில் மட்டும் தான் இதெல்லாம் கிடைக்கும். நீங்க என்னடான்னா... விளம்பரத்துக்கு மயங்கி எங்கியோ போய் காசை கொட்டிட்டு வர்றீங்க”
அவர்கள் கையிலிருந்த பைகளை பார்த்து அவரே ஒரு முடிவுக்கு வந்து விட்டார் போல.
“ஐயோ.. இதுல துணியில்லைங்க. வீட்டிலிருந்து எடுத்து வந்தது. மற்ற பொருட்கள் வாங்கி எடுத்துப் போக.”
“அதெல்லாம் கிடையாது. அங்கே போயிருக்கீங்க, இங்கே போயிருக்கீங்க, எங்க கடையில் வாங்க மட்டும் யோசிக்கிறீங்க. நீங்க எங்க வேணுமானாலும் போய் கேட்டுப் பாருங்க. இருக்காது. கோட்டுக்கு நம்ம கடைக்கு தான் வந்தாகணும்.”
“இரண்டு பைகளிலும் வேறு பொருட்கள் தான் இருக்கு. நாங்களே முதல் வருடம் உங்க கடையில் தான் கோட் வாங்கினோம். எப்பவும் உங்க கடையில் எடுக்கறவங்க தான். இப்ப இருக்கறது அளவு சரியில்லை அதான் போறோம்.”
அருகில் வந்த கடை சிப்பந்தியும் இருந்தவை எல்லாம் காட்டியாயிற்று என்று சொல்ல, சமாளித்துக் கொண்ட முதலாளி, “உங்க சைஸ் என்ன சொல்லுங்க, அடுத்த வாரம் வந்தா ரெடி பண்ணி வைக்கிறோம்.” முட்டுச் சந்தில் முட்டி நின்றது அவரது கோபம்.
அவரின் ஆவேசம் தன் வியாபாரத்தை அதிகரிக்கவா? தன்னிலும் வெற்றியடைந்த பிற வியாபாரி மேல் பொறாமை போர்த்திய ஆணவமா?
வேறு கடையின் பெயர் தாங்கிய பையை தன் கடையினுள் பார்க்கவும் சகிக்காத அவரின் மனப்பாங்கை என்ன சொல்லலாம்? நிமிண்டிக் கொண்டேயிருந்த மனசை சுமந்தலைந்தேன்.
பிறகு, ஜெயமோகனின் ‘விதி சமைப்பவர்கள்' நூலை வாசித்த போது, ஐந்தாவது அத்தியாயம் ‘ஒரு மரம் மூன்று உயிர்கள்'. அதில் சில வரிகள் துணிக்கடைக்காரரை அடையாளம் காட்டியது.
“அகப்பட்ட வாழ்க்கையை முட்டிமோதி வாழ்ந்து முடிப்பவர்கள் தான் பலர். அதில் வெற்றி கொள்ளும் போது அவர்கள் அகங்காரம் கொண்டு எக்களிக்கிறார்கள். பொதுவாகவே கொஞ்சம் காசு சேர்ந்ததும் அந்த எக்களிப்பு வந்து விடுகிறது. நான் இதில் இரு வகையினரைக் காண்கிறேன்...
ரயில்களில் முதல் வகுப்பில் வரும் புதுப் பணக்காரர்கள் ஒருவகை. இவர்கள் ரயில்களில் பிறரைச் சந்தித்ததுமே அவர்களின் பொருளாதாரப் பின்னணியை விசாரித்துவிட்டு, தன் பணம், சமூகத் தொடர்புகளை நேரடியாகவோ மறைமுகமாகவோ சொல்லும் சுயததும்பல்களோடு இருப்பார்கள்.
நட்சத்திர விடுதிகளில் சந்திக்க நேரும் நெடுங்காலப் பணக்காரர்கள் இரண்டாம் வகை. நாங்கள் தேவர்கள் என்ற பாவனையில் மிதப்பாக இருப்பார்கள். 
இந்த இருசாரர்களுக்கும் நரகம் என்ற ஒன்று அவர்களின் அருகேயே உள்ளது. அது, அவர்களை விடப் பெரியவர்களைக் காணும் அனுபவம் தான். அவர்கள் அந்த நரகத்தை ஒருகணமேனும் மறக்க முடியாது. இவர்களின் இன்பம் என்பது ஒருவகை அகங்கார நிறைவு மட்டுமே. அந்த நிறைவு சில கணங்கள் கூட நீடிக்காதபடி அவர்களின் அகங்காரம் அடிபட்டுக் கொண்டுமிருக்கும். அவன் எந்தப் புலனின்பத்தையும் அகங்காரம் குறுக்கிடாமல் அனுபவிக்க முடியாது. நல்ல உணவு சாப்பிட்டால் மட்டும் போதாது அவனுக்கு. அது பிறர் எவருக்கும் கிடைக்காத உணவாகவும் இருக்க வேண்டும். 
தன்னைச் சுற்றி முழுமையை உணர்ந்து அதில் தன்னை இழந்திருக்கும் சிலதருணங்களே முழுமையான இன்பம் தரவல்லது. அந்தத் தருணங்களை அடைய  இந்த மனிதர்களுக்கு அவர்களின் கையில் சுமந்தும் அக்குளில் இடுக்கியும் தலையில் சுருட்டியும் வைத்திருக்கும் சுமைகளே பெரும் தடைகளாகின்றன.”
மன உளைச்சல் தீர்ந்தது ஜெயமோகனை வாசித்ததில்.



Share on:


மகிழ்வாயிருக்க
பெரும்பணம் வேண்டியிருக்கு
‘போதுமென்ற மன'மற்ற நமக்கு
சக மனிதர்களுள்
புலம்பிக் கொள்ள
இருப்பதைத் தாண்டி எவ்வளவோ உண்டு
எட்டாத உயரம் ...
இல்லாத வசதி,  இத்யாதி, இத்யாதி.

கிடைத்ததைக் கொண்டு மகிழும் கலையை
புஜ்ஜி போதிக்கிறது
தன் விளையாட்டுப் பொருட்களால்.

பழசாகிப் போன ஹேண்ட் மசாஜ் பால்
நுனி பிய்ந்த இன்ச் டேப்
தீர்ந்து போன செலோடேப் உருளை
சின்னச் சின்ன காகிதத் துண்டுகள்
காய்ந்து போன பசை டப்பா
பார்சல் பிரித்த பேக்கிங் நாடா
தேவை தீர்ந்த கழுத்துப் பட்டை
குச்சிகளற்ற தீப்பெட்டி
இன்னும் இன்னும் நீளும் பட்டியல்
புஜ்ஜியின் பெரிய மனசைக் காட்டும்.






Share on:


       இந்த தடவை அதிரசத்துக்கு பாகு வைக்கும் போது  உடனிருந்த மகளிடம் பிசுக்கு பதம், கம்பி பதம், ரெண்டு கம்பி பதம்  எல்லாம் காட்டி, எது எதற்கு எப்படி பாகு வைக்க வேண்டுமென்று விளக்கம் சொன்னேன்.
     தோழி தொலைபேசியில் தொடர்பு கொண்டு கடையில் வாங்கிய அதிரச மாவு கெட்டியாக இருப்பதாகவும் எளிதாக தட்ட என்ன செய்யலாமென்றார்.             கொஞ்சம்  பால் தெளித்து பிசைந்து தட்டிப்  பாருங்க சரியா வரலைன்னா தோசை மாவு பதத்துக்கு கரைச்சு குழி பணியார சட்டியில் ஊற்றி அப்பம் போல் எடுத்திடலாம் என யோசனை சொன்னேன்.
      மறுநாள் பேசிய போது சொன்னார்...
     அதிரசமாவே தட்டிட்டேன்.
     ஆனா ... பதம் புரிபடும் போது மாவு தீர்ந்துடுச்சு.
அவ்வளவு தான் என்றார்.
      அதிரசம் செய்யப் பழக  இன்னொரு பாக்கெட் மாவு கிடைக்கும். நம் அந்திமத்தில் புரிபடும் வாழ்வை நீட்டிக்க ....?!





Share on:



வீட்டினர் அனைவரிடமும்
சமத்துவம் கொண்டாடும்  புஜ்ஜிக்கு
கட்சியுமில்லை கூட்டணியுமில்லை
வெறுப்பவரையும் சலிப்பவரையும்
தன் பளபளக்கும் கண்களால்
அண்ணாந்து  பார்த்து கருணை சம்பாதித்துவிடும்.
எல்லோர்  மனசிலும்
தனக்கான கனிவை சுரக்கச் செய்யும்
வலிமை பெற்ற ஈர விழிகள்!

திட்டினாலும் விரட்டினாலும்
உடனுக்குடன் மறந்து
குழையவும் இழையவும் முடிகிறது புஜ்ஜியால்
அவமதிப்போ சுடுசொல்லோ
வைத்து மறுக மனமற்றது.

எதிரியைக் கடித்துக் குதறவும்
அன்பை அறிவிக்க நம்மைக் கவ்வவுமாக
பற்களையும் நகங்களையும்
கையாளும் சாதுர்யம் 
படைப்பின் விந்தை !

Share on:

எங்கள் குடும்ப அட்டையில்
பெயர் சேர்க்கப்படாமல்
ஆதார் அடையாளம் தேவையற்று
குட்டிப்பூனை
வந்த மறுநாள் பெயர் சூட்டு வைபவம்

கூப்பிட வசதியா பெயரொன்னு சொல்லும்மா
என்றான் சிபி.
‘ஜுஜு'என்றேன் குத்துமதிப்பாக
அரை மனசாய் ஏற்றான்

மறுநாள் இவரிடம்
‘பெயரொன்னு சொல்லுங்க இதுக்கு' என்றேன்
‘புஸ்ஸி' என்றிருக்கட்டுமா? என்றார்.

கும்பகோணத்தை ‘கும்மோணம்' என்றும்
விருத்தாசலத்தை ‘விருத்தாலம்' என்றும்
சிதம்பரத்தை ‘சேம்பரம்' என்றும்
புவனகிரியை ‘போனேரி' என்றும்
வாய் வசதிக்கு மாற்றியதுபோல்
செல்ல விளிப்பில் அதை புஜ்ஜி ஆக்கினேன்.

ஏகமனதாய் எல்லோரும் ஏற்க
பாட்டி மட்டும் ‘குட்டி' என்பார்.
புஜ்ஜி என்றழைத்தால் ‘ம்ம்ம்...' எனவும்
புஜ்ஜி... புஜ்ஜி... என்று கூவினால்
எங்கிருந்தாலும் வந்து நிற்கவும்
புரிந்தது அதற்கு.

வீட்டுக்கு விருந்தினருடன் வந்த சிறுபையன்
பூனைக்குட்டியின் பெயர் புஜ்ஜி என்றறிந்ததும்
‘டோரா புஜ்ஜி!' என்றான்.

மனிதப் பெயர்களோடு
செல்லப் பிராணிகள் திரியும் காலத்தில்
ஒரு குரங்குக் கதாபாத்திரத்தின் பெயர்
எங்க பூனைக்குட்டிக்கு இருக்கட்டுமே...!



Share on:
      கடந்த திங்கள் மாலை மகளின் விருப்பத்துக்காக 'மகளீர் மட்டும்' சென்றோம். அரங்கில் கீழ்த் தளம் (இரண்டாம் வகுப்பு) காற்றோட, மேல்தளம் (முதல் வகுப்பு) நிறைந்து வழிந்தது வியப்பு. இந்த செப்டம்பரிலும் குளிர்சாதன வசதியின்றி ஒரு மூன்று மணி நேரம் படம் பார்க்க முடியாத சொகுசுக்காரர்களாகி விட்டோம்!

     தொடக்கத்தில் ஊர்வசியின் மலரும் நினைவுகளின் நடிப்பின் வீர்யம்,  நாளை முதல் வேலையாக தொடர்பறுந்த சினேகிதங்களை உயிர்ப்பிக்க வேண்டுமென்ற சங்கல்பம் தந்தது மனசில். இதோ அதோ என்று நாட்களுடன் தேய்ந்தது அதுவும். நிமிர்த்த முடியாத  நாய் வால் ஒத்தது நம் புத்தி என நிரூபித்த படி.  படத்துக்கான விமர்சனமல்ல இப்பதிவு. அது பற்றிய எனக்குள்ளான ஒரு தாக்கத்தின் பதிவே இது.

      பல இடங்களில் நான் சிரித்து, ரசித்து, கசிந்து, மகிழ்ந்ததாக மகள் சொன்னாள். இவள் படத்தைப் பார்க்க வந்தாளா, அல்லது என்னையா?  உடன் வந்த தன்  பாட்டியிடமும் படம் பற்றிய கருத்தை விசாரித்தாள்.

     கடத்தப்பட்ட பானுப்பிரியாவிடம்  போனில் பேசும் பேத்தி , 'நீ இனி  இங்க வரமாட்டியா? தப்பிச்சுட்டதா அம்மா சொல்றாங்க...' என்ற போது, உரத்து சிரித்தது மட்டும் நினைவிருக்கிறது.

          தப்பிக்குமளவு படுத்துகிறதா இல்லறம்... இன்னும் பல பெண்களுக்கு?! யோசித்தால், பாட்டி தப்பிச்சுட்டதா சொன்ன அம்மாவும் தப்பிக்க முடியாது, பேசும் பேத்தியும்  நாளை தப்பிக்கப் போவதில்லை...

     அழ வேண்டிய இடமல்லவா... சிரித்து தான் ஆற்றுகிறோமோ சிலதை....!


Share on:

அவரவர் கவலை
அவரவர் படட்டும்
நமக்கெதற்கு?
கிடைத்த வாழ்வை அனுபவி மனசே...

அவரவர் சிக்கல் தீர்க்க
அவரவர்க்கு விரலிருக்கு
நமக்கென்ன?
உள்நுழைந்து மாட்டாமல்
ஒதுங்கியிரு மனசே...

அவரவர் வருத்தம்
அவரவர் தாண்டட்டும்
கைதூக்குவதாய் நினைத்து
குட்டையில் விழலாமா
முட்டாள் மனசே...

அவரவர் பிரச்சினை
அவரவர் தலைவலி
நம் தலை பத்திரம்
நகர்ந்திடு மனசே...

அவரவர் பொறுப்பை
அவரவர் உணரட்டும்
நமக்கானதைப் பார்த்திட
நகரும் பொழுதைப் பிடித்திடு மனசே...

அவரவர் வலிகள்
அவரவர் வினைவழி
கூட்டவும் வேண்டாம்; குறைக்கவும் வேண்டாம்
மரம்போலிருக்கப் பழகிடு மனசே.

Share on:


         கடந்த இரு நாட்களாக சிபியிடம் அடைக்கலமாகி இருக்கிறது பிறந்து ஒருவாரம் கூட ஆகாத பூனைக்குட்டி ஒன்று.
அதற்கும் இரு நாட்கள் முன்பிருந்தே கொல்லைப்புற சன் ஷேடில் விடாமல் கத்திக் கொண்டிருந்த குட்டிக்கு இரக்கப்பட எல்லோராலும் முடிந்தது. அம்மா பூனை வந்து தூக்கிச் சென்று விடுமென்று அலட்சியமாக இருந்தோம்.
இவன் வந்ததிலிருந்து பாவம் அம்மா, பசி போலிருக்கு... கீழே எடுத்து பால் தரலாம் என்றபடியே இருந்தான். நடைமுறை சிக்கல்கள் தானே தடுக்கிறது...
பத்து நாட்கள் கழித்து நாத்தனார் வீட்டு திருமணத்துக்கு சென்றால் வர மூன்று நான்கு நாட்களாகும்.
இதெல்லாம் நாளடைவில் உபத்திரவமாகி விடும்.
பொதுவாகவே எனக்கு பூனை பிடிக்காது.
        இரக்கப்பட்டு இவர்கள் ஸ்தாபிதம் செய்து விட்டு அவரவர் வேலைக்குப் போன பின் பராமரிக்க வேண்டிய பொறுப்பு எனதாகிவிடுமே...
நீண்ட நாட்களாகவே சிபிக்கு நாய் அல்லது பூனை வளர்க்கப் பேராவல். நான் தான் தட்டிக்கழித்துக் கொண்டிருந்தேன். இணைகுருவிகள் வளர்த்து அவற்றை இழந்த சோகம் போல் இன்னொரு தடவை எதிர்கொள்ள இடம் கொடாத மனசோடு.
நான் குளிக்கச் சென்றிருந்த சிறுபொழுதில் யார் வீட்டு செல்லப் பிராணிகளையும் வெகு சுலபமாக வசப்படுத்திவிடும் அப்பாவும் பிள்ளையுமாக பூனைக் குட்டியை இறக்கியாயிற்று.
அதன் உருட்டி விழிக்கும் பளிங்கு கண்களோடு குட்டி குட்டி கைகளும் கால்களும் வாலும் பட்டு உடம்பும் விடாத சத்தமுமாக வசீகரமாகத்தான் இருக்கிறது. அப்பாவும் பிள்ளையும் தான் அவ்வப்போது பால் எடுத்து வைப்பது, தூக்கி கொஞ்சுவது, கதகதப்புக்கு துண்டு விரிப்பது, வெளியே அழைத்துச் சென்று வருவது என ஒரே கோலாகலம் தான் போங்கள்!
வெளியில் போனால் கூட போன் செய்து அதற்கு பால் வைத்தீர்களா என்று கேட்கிறான் சிபி.
டப்பாவில் ஊற்றும் பாலில் அது நிறைவடைவதில்லை. கூரிய பற்களால் கிடைப்பதையெல்லாம் கடித்துப் பார்க்கிறது. இவர்களின் கால்களைப் பிறாண்டுவதோடு பாதத்துக்கு பக்கமாக படுத்து பரபரவென அடிப்பாதத்தில் தன் அம்மாவைத் தேடுகிறது. பார்க்கும் நமக்கு உணர முடிகிறது அதன் தேவையை.
        கடவுளே, இந்தக் குட்டி தன் அம்மாவோடு சேர கொஞ்சம் கருணை காட்டேன் என இறைஞ்சுகிறது மனசு. இரை தேடச் சென்ற அதன் அம்மா, விரைவில் திரும்பி வந்து தன் குட்டிக்கு பாலூட்டும் அழகைப் பார்க்கத் தவிக்கிறது பாழ்மனசு.

Share on:
     பொறுமை என்னும் அருங்குணம் ஓர் இறைநம்பிக்கையாளன் வாழ்வில் அடித்தளம் எனலாம்.  இதுவே  ஒவ்வொரு நம்பிக்கையாளனின் இம்மை, மறுமை எனப்படும் ஈருலக வாழ்விலும் வெற்றியைப் பெற்றுத் தருகிறது. அதனால், இறைநம்பிக்கையாளர்கள் தனது வாழ்வை முன்னெடுத்துச் செல்ல உதவும் நம்பிக்கை விளக்காக பொறுமையை எடுத்துக் கொள்ள வேண்டும். 
      வாழ்வின் கணம்தோறும் எதிர்ப்படும் பிரச்சினைகளில் சில நேரம் வெல்லலாம். பல நேரம் தோல்வியுறலாம். அந்தத் தோல்விகளை வெற்றிகளாக்க பொறுமை எனும் அருங்குணத்தால் தான் அவற்றை எதிர்கொள்ள வேண்டும். அதனால், எல்லா விதமான கஷ்டங்களையும் இழப்புகளையும் சகித்துக் கொள்ள இறை நம்பிக்கையாளர் கற்றுக் கொள்ள வேண்டும். ஒருக்காலும் பொறுமையை இழந்து அவரவர் மரணக்குழியை அவரவர் கரங்களாலேயே பறித்துக் கொள்ளக் கூ டாது. 
      பொறுப்புகளை எதிர்கொண்டு அவற்றை நிறைவேற்றுவதில் தயக்கம்,
     வாழ்வியல் யதார்த்தங்களை உள்வாங்குவதில்  ஏற்படும் குழப்பம்,
     தோல்வியைக் கண்டு மனதில் ஏற்படும் அச்சம்...
இவை எக்காரணம் கொண்டும் பொறுமையை இழக்கச் செய்து ஓர் இறைநம்பிக்கையாளனை வன்முறைப் பக்கம் திசை திருப்பக்  கூடாது. 
     பொறுமை எனப்படும் பெரும்பண்பு, சோதனைகள் மற்றும்  இறைநம்பிக்கையின் ஆழமான வெளிப்பாடு என்னும் இரண்டு தூண்கள் மீது நிலை கொண்டுள்ளது.
     இந்தஉலகியல் அமைப்பு வெறும் ஆனந்தமும் நிம்மதியும் கொண்டதாக மட்டும் படைக்கப் படவில்லை. சோதனைகள் நிரம்பிய களமாகவே  உள்ளது.
     எவன் இறைவனுக்கு நன்றி செலுத்துகிறானோ அவன் தனக்கே நன்மை செய்து கொள்கிறான். எவன் நன்றி மறக்கிறானோ அவன் தனக்கே தீங்கு தேடிக் கொள்கிறான்.
     வாழ்வியல் சோதனைகள் என்னும் முதல் தூண்  நிலைகொள்ள இறைதொடர்புகள் எனும் இரண்டாவது தூண்  மிகவும் இன்றியமையாதது. 
     பொறுமையை முறைப்படுத்திக் கொள்பவனுக்கு இறைவன் பொறுமையை வழங்குகிறான். இந்தப் பொறுமை வழங்கப் பெற்றவரைவிட ஆகச் சிறந்த வெகுமானம் பெற்றவர் வேறு யாருமில்லை!

நன்றி: இக்வான் அமீர்,   'தி இந்து ' தமிழ் நாளிதழ்  

Share on:
அம்பையின் ‘சிறகுகள் முறியும்’ மற்றும் ‘வெளிப்பாடு’ பற்றிய வாசிப்பனுபவம்...
      கதைகளோ காவியமோ புனைவு எனும் வகைப்பாட்டில் கொண்டாலும் படைத்தவருக்கும் படிப்பவருக்கும் இடைப்பட்ட ஒரு நட்பை, ஒரு உறவை ஏற்படுத்தும் வண்ணம் அமைகிறது. வாழ்வியலின் பாதையெங்கும் அறத்தின் சாரம் நிறைந்துள்ளதால் எந்தவொரு கதைசொல்லியும்  தன் கதைமாந்தர்களின் பேச்சாலும் செயலாலும் ஏதோவோர் அறத்தை நிறுவவே தலைப்படுகிறார். கண்டுகொள்ளாமல் விடப்பட்ட, கண்டும் காணாமல் போய்க்கொண்டிருக்கும் பலதரப்பட்ட சமூகச் சீர்கேடுகளின் ஆரம்பப் புள்ளி தேடிப் பயணித்தால், அங்கு ஒரு தனிமனிதனின் அலட்சியமும் அத்துமீறலும் காணக் கிடைக்கிறது.      
          தான் சார்ந்த சமூகத்தை மேம்படுத்தவும் தன் படைப்பை வாசிப்பவர் மனதைப் பண்படுத்தவும் விழையும் நோக்கும், மாற்றங்களை, மறுமலர்ச்சிகளை, தெளிவுகளையும் புரிதல்களையும் கொண்டிருக்கும் எழுத்தின் வீச்சும் கொண்டிருப்பதே படைப்பாளியின் ஆகச் சிறந்த பேராற்றல்.
Share on:
      


               துளையிடப்பட்ட முத்து மணிகளை மாலையாக்கி மதிப்பு கூட்டுவது போல், கவிஞர் கிருஷ்ணப்ரியா, அவ்வப்போது கதைமொழியில் வெளிப்பட்ட தம் அனுபவங்களை அவற்றின் உணர்வுகளை வாசகருக்குக் கடத்தும் வகையில் 'நானும் என்னைப் போன்ற அவளும்' என்ற ஒரு தொகுப்பு நூலாக்கியது சிறப்பு. முன்னெடுத்த ஈழவாணிக்கும் (பூவரசி பப்ளிகேஷன்ஸ்) நன்றி சொல்லியாக வேண்டும் நாம்!
கிருஷ்ணப்ரியா & ஈழவாணி 

               அலங்காரம் தேவையற்ற, பிறந்த குழந்தையின் கண் உறுத்தாத நிர்வாணம் போன்ற புனைவற்ற யதார்த்த அழகுக் கதைகள்!
               புத்தகத்தைப் புரட்டி முதலில் படித்தது முன்னுரையான ‘மகிழ்ச்சியுடன் எழுதுகிறேன்' தான்!
               விளக்கின் பிரகாசம் அருகிருப்போரையும் வெளிச்சப் படுத்துவதைப் போல என்னையும் தொற்றிக்கொண்டது மகிழ்ச்சி!
               சக பயணிகளின் உணர்வுகளைப் பின் தொடர்வதால் கிடைக்கப் பெற்ற சில கதைக் களங்கள். எளிதாக நம்மைக் கைபிடித்து அழைத்துச் சென்று நமக்குள் செலுத்திய அதே உணர்வுகள்! மின்கடத்தி போல இங்கே ஒரு உணர்கடத்தியாக கதாசிரியர்!
              
               ஒரு குடும்பத்தலைவியாக பணியேற்று ஊதியம் பெறும் பணிக்கும் செல்ல வேண்டிய கட்டாயத்திலிருக்கும் எழுத்தாளிப் பெண்ணின் நேர வறுமையும் அலைச்சல்களும் அதற்குள் தேடிக் கண்டுபிடிக்கும் சின்னச் சின்ன சந்தோஷங்களும் பிறவி சுபாவமான சக உயிர்களை நேசிக்கும் பண்பும் நேர்த்தியாக வெளிப்படுகிறது  ‘நானும் என்னைப் போன்ற அவளும்' தலைப்புக் கதையில்.
Share on:
நன்றி:
http://venkatnagaraj.blogspot.com/2017/02/blog-post.html

விதவிதமான வினாயகர் உருவங்கள்
சிரிக்கும் புத்தர் சிலைகள்
குபேர பொம்மைகள்
கொஞ்சும் சதங்கைகள்
வண்ணவண்ண மணித்திரள்கள்
இலைகள், பூக்கள், கனிக்கூட்டங்கள்
உலகின் ஒட்டுமொத்த
போன்சாய் உருவங்களாக
சாவிக்கொத்துகளின் ஆதிக்கங்கள்.

கோர்க்கப்படும் சாவிகளுக்கு
அணைவாய் இருக்க போட்டா போட்டிகள்
ஒவ்வொருவர் கையிருப்பிலும்
அவரவர் ஆளுகைக்கு உட்பட்டவற்றின்
பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு அரணாய்
விதவிதமான பூட்டுகளின் திறப்பான்கள்

ஒரே வளையதிலிருப்பினும்
வெவ்வேறு மதிப்புகள் ஒவ்வொன்றுக்கும்
வீட்டுக்கு ஒரு பூட்டு
ஒவ்வொரு அறைக்கதவுக்கும் ஒவ்வொன்று
வாகனங்களுக்குத் தனித்தனி
சொந்த வியாபாரத் தலங்களுக்கும் அப்படியே
வேலையிடத்தின் பதவிக்குத் தக்கன
வங்கிகளில் வாயில்காப்போனிடம்
வாசல் கதவுக்கென்றால்
மேலதிகாரிக்கு அலுவலக மேசை மற்றும்
பெட்டக அறைத் திறப்பான்...

எல்லா சாவிகளுக்கும் போலிகள் உண்டு
உரிமையாளரிடம் மட்டுமல்ல
கண்ணி வைத்து திருடும் கயவர்களிடமும்.
கணினியுகத்தில் பாஸ்வேர்டுகளும்
அதையுடைக்கும் எத்தர்களும் ...

அடுத்தவன் பொருளுக்கு ஆசைப்படாதவராக
அனைவருமிருந்தால் பூட்டுதானெதற்கு?
சாவியுமெதற்கு??

பிரபஞ்சத்தின் ஐந்தறிவு வரை ஜீவராசிகளுக்கு
பூட்டுமில்லை; சாவியுமில்லை; சாவிக்கொத்துகளுமில்லை!
Share on:
நன்றி: http://venkatnagaraj.blogspot.com/2017/02/blog-post.html


தட்டுசுற்றா உடுத்தியிருக்கும்  செல்லம்மா-உன்
தலைச்சுமையா இருப்பதுவும் என்னம்மா
கோணக் கொண்டைக்காரி
கொள்ளைச் சிரிப்புக்காரி
கைவளை கலகலக்க
கட்டுடல் பளபளக்க
என் கண்ணைப் பறிக்குறடி கண்ணம்மா
உன் காலுக்கு செருப்பா நான் வரட்டுமா?

முதல் குண்டு கூழ்ப்பானை
அதுக்கு மேல மோர்ப்பானை
மூணாவதா நெல்லுச்சோறு
நெத்திலிக் குழம்பு அடுத்ததில
மிச்சத்துல வகையான வெஞ்சனம்
தலைக்கு மேல சுமக்கறது சொல்லிட்டேன்
மனசுக்குள்ள இருக்குறத சொல்லட்டா?

உச்சியில ஏறி உள்ளங்காலைக் கொதிப்பேத்தும்
ஒத்தைக் கண்ணன் சாயட்டும் மேற்கே
உழவும் பறம்படியும் முடிஞ்சிடும் அங்கே
பொழுதடங்க வந்துடுவோம் நாங்க
புடிச்சிருந்தா பொண்ணு கேட்டு
வீடுதேடி வாங்க
இப்ப வழிய விட்டு ஓரமாப் போங்க.
Share on:


விரிந்த தன் இலைகளில் பச்சையம் வற்றி
செம்மைதூக்கலான
மஞ்சள் நிறமடர்ந்த
வாதாம் மரத்தின் திலக வடிவ இலைகள்
தடக் தடக் என
இரவும் பகலும் உதிர்ந்தபடி இருக்க
மரத்தடியில்
கிளைபடர்ந்த தூரம் வரை
மண்மூடிக் கிடக்கும் இலைமெத்தையில்
ஒய்யாரமாய் அமர்ந்து
விருந்தாகிறாய்
என் புகைப்படக் கருவிக்கு.
வெற்றுக் கிளைகளின் இடைவெளியில்
எட்டிப்பார்க்கும் கதிரவனால்
ஒளி பிரகாசிக்கும் உன் வதனம்
இனி துளிர்த்துப் பூத்துக் காய்த்துக் கனியாகும்
வாதாம் பழ நிறத்தை நினைவூட்டி
வனப்புடையதாக்கியது புகைப்படத்தை.




Share on:
பட உதவி: http://venkatnagaraj.blogspot.com/
நூறுநாள் வேலையில் தூர்வாரிய ஏரி இது
கிடக்கும் சொற்ப நீரை
இயந்திரம் கொண்டு உறிஞ்சியே
கருகும் பயிரைக் காப்பாற்றப் பார்க்கிறோம்

அப்பன் பாட்டன் காலத்தில்
முப்போக வெள்ளாமை.
வண்டிமாடுகள் ஓய்ச்சலின்றி
வீட்டுக்கும் வயலுக்குமாக
நடைபோட்டபடி இருந்தன

வாய்க்கால் பாசனமற்று வானமும் கருமியானதில்
பஞ்சம் தலைமீற ஏர்மாடுகள் விற்று உயிர்வாழ்ந்தோம்
அப்புறம் வண்டியிழுக்கும் காளைகளும்விலைபோயின

எஞ்சிய வண்டியிது
தம் பயண அனுபவங்களை
சக்கரங்கள் கடையாணிகளுடன் கதைத்துப் பொழுதோட்டும்.
உளுத்துப் போகும்முன் அடுப்புக்கு விறகாகும்.

கஞ்சிக்கு வழியற்றும்
கெளரவம் பார்த்து
ஏதோவொரு விதையை பூமியில் விசிறிவிட்டு
சாவு வரும் பாதை தேடி
தவிக்கும் உழவன் வாழ்வை
பாழும் தெய்வமும் பார்த்து இரங்கவில்லை
ஆளும் அரசுக்கும் ஆயிரம் சொந்தவேலை. 
Share on:
பட உதவி: வெங்கட் நாகராஜ் 
உடைக்குப் பொருத்தமாய்
வளையல், நகப்பூச்சு, கொண்டையூசி
எல்லாம் அழகுதான்.
உன் வெள்ளைப் பல்லிலும்
பஞ்சு முட்டாய் தின்று படிந்த
பக்கி ரோஸ் கலர் பிரமாதமென்றேன்
நாணிக் கவிழ்கிறாய் தோழியின் தோளில்.  


Share on:


எங்க பாட்டி சொல்வாங்க, (ஆமாப்பா... நமக்கும் வயசாகிப் போச்சு)‘அஞ்சும் மூணும் சரியா இருந்தா அறியாப் பிள்ளையும் கறி சமைக்கும்'.

சொலவடைகளும் பழமொழிகளும் சரளமாக பேச்சிடையே சொல்வது அவரது பழக்கம். பலவற்றுக்கு விளக்கம் கிடைக்கும்.

‘அப்படீன்னா?' அறியாப் பருவக் கேள்வி.

‘போடறத போட்டு செய்யற விதமா செஞ்சா தான் சமையல் மணக்கும்; ருசிக்கும்.'

‘அது சரி. அந்த அஞ்சும் மூணும் என்னென்ன?'
Share on:
  • ← Previous post
  • Next Post →

  • கால்களை சிறகுகளாக்கும் எத்தனங்கள்.
  • உதிரும் சிறகுகளை சேகரிக்கும் குழந்தைமை.
நிலாமகள்

நிலாமகள்

View My Complete Profile
Facebook Gplus RSS

Followers


Labels
  • அசை (16)
  • அறிந்தும் / அறியாமலும் (10)
  • கவிதை (61)
  • சிறுகதை (9)
  • சுவையான குறிப்புகள் (1)
  • செல்லத்தின் செல்லம் (6)
  • தாய் மடி (2)
  • திருக்குறள் நினைவாற்றல் வழிகாட்டி (4)
  • தொடர் பதிவு (1)
  • நூல் மதிப்புரை (1)
  • நேர்காணல் (3)
  • பகிர்தல் (51)
  • படித்ததில் பிடித்தது (63)
  • மரம் வளர்த்த மனிதனின் கதை... (4)
  • மருத்துவம் (12)
  • வாழ்த்து (14)

Popular Posts

  • வில்வம் ...மருத்துவ குணங்கள்:(பகுதி - 3)
             வில்வம் பற்றிய அறிமுகம்:(அறியாதவர்கள் அடையாளம் காண)         இலையுதிர் மரவகையைச் சார்ந்த வில்வம் எல்லா இடங்களிலும் வளரும் ...
  • பல் வலியா ?
    நம் உடம்பில் ஒன்றுக்கு இரண்டாக கண், காது, கை, கால், சிறுநீரகம், சினைப்பை அல்லது விதைப்பை போன்றவை இருக்க பல்லை மட்டும் 32 ஆக படைத்ததன் ...
  • மலை வேம்பு -சில தகவல்கள்
    மலைவேம்பு (melia dubia)        மலைவேம்பு மிக வேகமாக வளரும் விலை மதிப்பு மிக்க பன்முகப் பலன் தரும் அரிய மரவகைகளில் ஒன்று. ப்ளைவுட்,ரெடிமேட்...
  • அம்மை... சில தகவல்கள்
              பேரச்சம் விளைவித்த அம்மை நோய்க்கு எதிரான ஒரு தடுப்பு நடவடிக்கையாக அம்மை குத்தும் முறையைக் கண்டுபிடித்து உலகெங்கும் பரப்பிய ஆங்கி...
  • சாகசங்கள் மீதான பேராவல்
                 குழந்தைகளை தூங்கச் செய்வது என்பது எந்த நாட்டிலும் பெரும்பான்மையும் அம்மாக்களின் பிரதான கடமையாகவே இருக்கும். பிறந்து சில ம...
  • மரம் வளர்த்த மனிதனின் கதை ... இறுதிப் பகுதி
    தொடக்கம்:  http://nilaamagal.blogspot.in/2013/10/blog-post_29.html பகுதி-1:  http://nilaamagal.blogspot.in/2013/10/1.html பகுதி-2:  htt...
  • பொடுகு எவ்விதம் உருவாகிறது?
           நம் மண்டையில் அன்றாடம் இறக்கும் செல்கள் தோலின் மேற்புறத்தில் உள்ள எபிடெர்மிஸின் (Epidermis) ஆழ் அடுக்கிலிருந்து இடைவிடாது வெளித்தள்ள...
  • ஞிமிறென இன்புறு
           'அந்த காலமெல்லாம்...' என்று பெருமூச்சு விடத்தொடங்கினாலே வயசானவங்க லிஸ்ட்ல சேர்த்துடறாங்க இன்றைய இளைஞர்கள். தன்  குழந்...
  • மரங்களின் மக(ரு)த்துவம்-2 (வேப்பமரம்)
    வேம்பு:  சிவன் கோயில் வில்வ மரம் போல் அம்மன் கோயில்களில் அவசியமிருக்கும் மரம் வேப்பமரம். இயற்கையின் வரப்பிரசாதமான இம்மரத்தின் வேர், பட்டை,...

Blog Archive

  • ►  2020 (1)
    • ►  March (1)
  • ►  2019 (1)
    • ►  August (1)
  • ►  2018 (9)
    • ►  June (2)
    • ►  May (1)
    • ►  March (2)
    • ►  February (1)
    • ►  January (3)
  • ▼  2017 (18)
    • ▼  November (2)
      • உயிர் விளையாட்டு
      • அறிதலின் இன்பம்
    • ►  October (4)
      • ‘புதியன விரும்பு'
      • பதம்
      • கசியும் விழிகள்
      • பெயர் பிறந்த கதை
    • ►  September (2)
      • தூரத்து வெளிச்சம்
      • ஆறு; தேறு; மாறு!
    • ►  August (2)
      • வெள்ளை நிறத்தொரு பூனை ...
      • இறைக்கொடை
    • ►  July (1)
      • "பொம்பளைங்க பத்தி எளுத என்ன இருக்கு?!"
    • ►  March (1)
      • கிருஷ்ணப்ரியா எனுமொரு எழுத்தாளி....
    • ►  February (6)
      • ஆறாம் அறிவின் பாதகம்
      • சிருங்காரி
      • பழமாகிறாய் நீ ... மரமாகிறேன் நான்!
      • பேசி மாளாப் பொழுது
      • முகிலில் மறைந்த நிலா
      • அஞ்சும் மூணும் ...
  • ►  2016 (9)
    • ►  December (1)
    • ►  November (2)
    • ►  July (3)
    • ►  April (3)
  • ►  2015 (21)
    • ►  October (1)
    • ►  September (2)
    • ►  August (4)
    • ►  July (1)
    • ►  June (2)
    • ►  May (2)
    • ►  April (4)
    • ►  March (2)
    • ►  February (1)
    • ►  January (2)
  • ►  2014 (24)
    • ►  December (3)
    • ►  November (5)
    • ►  October (1)
    • ►  September (3)
    • ►  August (2)
    • ►  May (1)
    • ►  April (2)
    • ►  March (3)
    • ►  February (2)
    • ►  January (2)
  • ►  2013 (36)
    • ►  December (3)
    • ►  November (2)
    • ►  October (4)
    • ►  September (3)
    • ►  August (2)
    • ►  July (7)
    • ►  June (3)
    • ►  May (3)
    • ►  April (4)
    • ►  March (1)
    • ►  February (2)
    • ►  January (2)
  • ►  2012 (35)
    • ►  December (3)
    • ►  November (1)
    • ►  October (3)
    • ►  September (3)
    • ►  August (5)
    • ►  July (2)
    • ►  June (3)
    • ►  May (3)
    • ►  April (2)
    • ►  March (2)
    • ►  February (4)
    • ►  January (4)
  • ►  2011 (49)
    • ►  December (4)
    • ►  November (3)
    • ►  October (4)
    • ►  September (1)
    • ►  August (3)
    • ►  July (8)
    • ►  June (6)
    • ►  May (5)
    • ►  April (5)
    • ►  March (5)
    • ►  February (3)
    • ►  January (2)
  • ►  2010 (37)
    • ►  December (7)
    • ►  November (6)
    • ►  October (6)
    • ►  September (6)
    • ►  August (4)
    • ►  July (5)
    • ►  June (3)

வலைப்பூ உலகில் எங்க குடும்பம்

  • பாரதிக்குமார்
  • மதுமிதா
  • சிபிக்குமார்

போக...வர...

  • கீதமஞ்சரி
    தித்திக்குதே (3) இலுப்பை
    1 day ago
  • அக்ஷ்ய பாத்ரம்
    இலையுதிர்காலத்து வண்ணங்கள்
    2 weeks ago
  • திண்டுக்கல் தனபாலன்
    அதிகார எழுத்துக்கள் அனைத்தும் குறில் / நெடில் - பகுதி 2
    3 months ago
  • முத்துச்சிதறல்
    குளோபல் வில்லேஜ்-2023-2024!!!
    6 months ago
  • ஹரணி பக்கங்கள்.......
    1 year ago
  • சமவெளி
    டில்லி தமிழ்ச் சங்கம் - 23-02-2017
    5 years ago
  • VAI. GOPALAKRISHNAN
    நினைக்கத் தெரிந்த மனமே ... உனக்கு மறக்கத் தெரியாதா?
    5 years ago
  • CrUcifiXioN
    பூச்சிக்கடி -ஹோமியோபதியில் 100% தீர்வு ! Worm trouble
    5 years ago
  • சிவகுமாரன் கவிதைகள்
    (அ)நீதி அரங்கம்
    5 years ago
  • Thanjai Kavithai
    7 years ago
  • வண்ணதாசன்
    இயல்பிலே இருக்கிறேன்
    7 years ago
  • அழியாச் சுடர்கள்
    மௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்
    7 years ago
  • வானவில் மனிதன்
    கவிக்கோ அப்துல் ரகுமான்- ஒரு அஞ்சலி
    7 years ago
  • ஊமைக்கனவுகள்
    அட! இப்படியும் எழுதலாமா?
    8 years ago
  • கோவை2தில்லி
    வண்ணங்களின் சங்கமம்!
    8 years ago
  • செம்மை வனம் | 'காட்டுக்குள் மான் தேடிப் போனால், மான் தெரியும். மான் மட்டுமே தெரியும்’ -பழங்குடிப் பழமொழி
    சிறுவர்களின் காய்ச்சல் மற்றும் தோல்நோய் குறித்து!
    8 years ago
  • ரிஷபன்
    பிச்சி
    8 years ago
  • அடர் கருப்பு
    யார் இந்த அயோத்திதாசர் ? 1845-1914
    9 years ago
  • சைக்கிள்
    இருள் வெளிச்சம்
    9 years ago
  • வட்டங்களில் சுழலுது வாழ்க்கை
    இந்திய வாகனப் பதிவெண் இரகசியம்
    9 years ago
  • ∞கைகள் அள்ளிய நீர்∞
    முந்நூறு ஒட்டகங்களும், ஒரு நாயும்.
    11 years ago
  • கலர் சட்டை நாத்திகன்
    கலர் சட்டை: 1
    12 years ago
  • நசிகேத வெண்பா
    நூற்பயன், நன்றி
    13 years ago
  • இன்னுமொரு கோணம்
    எதுக்கு இவ்வளவு Build Up?
    14 years ago
  • வந்தேமாதரம்
தீதும் நன்றும் பிறர்தர வாரா!
புறநானூறு-192

கணியன் பூங்குன்றனார்

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்
குறள்:314 | அறத்துப்பால் | இன்னா செய்யாமை

திருவள்ளுவர்

அண்டத்தி னுள்ளே அளப்பரி தானவள்
பிண்டத்தி னுள்ளே பெருவெளி கண்டவள்
குண்டத்தி னுள்ளே குணம்பல காணினும்
கண்டத்தி னுள்ளே கலப்பறி யார்களே
திருமந்திரப்பாடல்

திருமூலர்

Facebook Gplus

பறத்தல் - பறத்தல் நிமித்தம்

Created By SoraTemplates | Customized By Sibhi Kumar | Distributed By Gooyaabi Templates