பையில் போட வேண்டியதை மனசிலும்
மனசில் போட வேண்டியதை பையிலும்
போடுவது தான்
உங்க பிரச்னையே சுவாமி
பத்திரமாக இருக்க பையில் போடுங்கள்
சித்திரமாக ரசிக்க மனசில் வையுங்கள்
அன்பு காதல் பாசம் பரிவு
இதையெல்லாம்
பையில் வைத்திருக்காதீர் ஓய்!
இதெல்லாம் மனசில் வைக்க வேண்டிய பண்டங்கள்
பணம் புகழ் பசி காமம்
எல்லாவற்றையும் தூக்கி
பையில் போடுங்காணும்!
பையை சீக்கிரம் காலி செய்யச்செய்ய
மனசு நிரம்பிக் கொண்டே இருக்கும்.
பையையே எறியும் பக்குவம் வந்தால்
மனசு நிறைந்து மானுடம் தழைக்கும்.
- தஞ்சாவூர் கவிராயர் .
கவிராயரின் கவிதைகள் அமுத ரசம் நிரம்பியவை என்பதை நாமறிவோம் .
நாளை தனது இதய அறுவை சிகிச்சைக்காக மருத்துவ மனையில் சேர இருக்கும் அவருக்கு நமது பிரார்த்தனைகளை காணிக்கை ஆக்குவோம் வாருங்கள் தோழர்களே...
நம் விசாரிப்புக்களை அவர் உடனிருக்கும் நம் சுந்தர்ஜி அவர்களிடம் பகிர்ந்து கொள்வோம் . கவிராயர் பூரண நலம் பெற்றவுடன் அவரிடம் நம் மகிழ்வான விசாரிப்புக்களை பகிரலாம்.
பிரார்த்தனையில் நம்பிக்கை இல்லாதவர்களின் நல்லெண்ணமும் நேர்மறை சிந்தனைகளும் கூட அவரது ஆரோக்கியத்தை மேம்படுத்தும் அல்லவா...!!
நாளையும் நாளை மறுநாளும் (29.8.2012, 30.8.2012) நம் சிந்தனையில் அவரது மேன்மைகள் நிறைந்திருக்கட்டும்!
தன் குழந்தை வயிறு நிறைக்க
ஒரு தாய்க்கு
விளையாட்டு பொம்மையாய்...
மோகித்தவளின் முகம் பொருத்தி
சிலாகிக்கும் காதல் பித்தனை
தெளிவிக்கும் மருந்தாய்...
மின் தடை இரவிலும்
தெருப்பிள்ளைகளின்
விளையாட்டுத் தடையறாமல்
இயற்கையின் வெளிச்சமாய்...
இரவோடிரவாய்
உறவறுத்து வெளியேறும்
அபலையின் வழித்துணையாய்...
வாழ்வின் மூர்க்கத்தில்
கொதிப்பேறிக் கிடப்பவனைத்
தணிவிக்கும் தண்ணொளியாய்...
மினுக்கும் உடுக்களிடையே
கம்பீரமாய் அரசோச்சி
ஜொலிக்கும் பெரு நட்சத்திரமாய்...
நிலவுக்கும் உண்டு...
அரிதாரம் தேவையற்ற
பல அவதாரங்கள்...!
நன்றி: நீலநிலா.. செப். 2012
“உலக இலக்கியம் படித்தவர்களுக்குச் சொல்ல என்னிடம் ஏதுமில்லை” என்று தன் கவிதைநூலின் முன்னுரையில் பிரகடனம் செய்யும் துணிவோடு திரு.செளரிராஜன் அவர்கள் வழுவழுக்கும் ஆர்ட் பேப்பரில் நம் கைகளில் தன் கவிதைநூலை தவழச் செய்திருக்கிறார். அவரது மகன் செள.ராஜேஷ் அவர்கள் முகமன் கூறி வரவேற்கிறார் முதல் பக்கத்தில்! கவிஞரின் 66-வது பிறந்தநாள் வெளியீடாக வரும் இந்நூல் செறிவோடும் அழகோடும் நம்மை நிறைக்கிறது.
ஸ்ரீரங்கம் கோவிந்தராஜ் கவிஞரை நேர்கண்டது நூலின் பின் நான்கு பக்கங்களில் நமக்கு பலவற்றை தெளிவுபடுத்திச் செல்கிறது.
கவிதையென்பது என்ன? எனும் கேள்விக்கு கவிஞர், “என்ன விளக்கினாலும் முழுமை பெறாமலிருக்கும் ஒரு வடிவமே கவிதை” என்கிறார்.
கதையம்சம் கவிதைக்கு விலங்கா? சிறகா? எனும் கேள்விக்கு, “ ஒரு சம்பவம் கவிதைக்கான கருப்பொருளாக அமையும் போது கதைத் தன்மை தோன்றலாம். எதன்மீதும் இது கவிதைக்கானது இல்லை என்று முத்திரை குத்த முடியாது. எனவே கதைத் தன்மை ஒரு கவிதைக்கு விலங்காகாது. இயல்பேயாகும்” என்கிறார் கவிஞர்.
“செளரியின் கவிதைகளில் முதலில் நம்மை வசீகரிப்பது அவற்றின் இருண்மையற்ற எளிமைதான். முதல்வாசிப்பில் அவரது கவிதைகள் லேசாகத் தோன்றினாலும் பிரித்துப் பல பொருள் கூறுமளவுக்கு அவற்றில் பல அடுக்குகள் ஒளிந்துள்ளன. சாதாரண சொற்களைக் கொண்டே அசாதாரண அழுத்தத்தை ஏற்படுத்தி விடுகிறார். அரிதான படிமங்களின் பயன்பாடு, அற்புதமான பதச் சேர்க்கைகள், மற்றும் காட்சிப்படுத்துதல் இவை இணைந்து இவரது கவிதைகளுக்கு அழுத்தம் கொடுக்கின்றன.” இது பெரியார் ஈ.வெ.ரா.கல்லூரியின் தமிழ்த்துறையிலிருக்கும் வ.நாராயண நம்பியின் அணிந்துரை.
வங்காளம்: பக்கிம் சந்திர சட்டோபாத்யாயர்
தமிழில் : மகாகவி பாரதி
நளிர்மணி நீரும், நயம்படு கனிகளும்
குளிர்பூந் தென்றலும் கொழும்பொழிற் பசுமையும்
வாய்ந்துநன் கிலகுவை வாழிய அன்னை!
வந்தே மாதரம்!
தெண்ணில வதனிற் சிலிர்த்திடு மிரவும்
தண்ணியல் விரிமலர் தாங்கிய தருக்களும்
புன்னகை யொளியும் தேமொழிப் பொலிவும்
வாய்ந்தனை யின்பமும் வரங்களு நல்குவை.
வந்தே மாதரம்!
கோடி கோடி குரல்க ளொலிக்கவும்
கோடி கோடி புயத்துணை கொற்றமார்
நீடு பல்படை தாங்கிமுன் னிற்கவும்
கூடு திண்மை குறைந்தனை யென்பதேன்?
ஆற்றலின் மிகுந்தனை அரும்பதங் கூட்டுவை
மாற்றலர் கொணர்ந்த வன்படை யோட்டுவை
வந்தே மாதரம்!
அறிவுநீ தருமநீ உள்ளநீ அதனிடை
மருமநீ உடற்கண் வாழ்ந்திடு முயிர்நீ
தோளிடை வன்புநீ நெஞ்சகத் தன்புநீ
ஆலயந் தோறும் அணிபெற விளங்கும்
தெய்வச் சிலையெலாந் தேவியிங் குனதே.
வந்தே மாதரம்!
பத்துப் படைகொளும் பார்வதி தேவியும்
கமலத் திதழ்களிற் களித்திடும் கமலையும்
அறிவினை யருளும் வாணியும் அன்னைநீ!
வந்தே மாதரம்!
திருநிறைந்தனை தன்னிக ரொன்றிலை!
தீது தீர்ந்தனை நீர்வளஞ் சார்ந்தனை
மருவு செய்களின் நற்பயன் மல்குவை
வளனின் வந்ததோர் பைந்நிறம் வாய்ந்தனை
பெருகு மின்ப முடையை குறுநகை
பெற்றொ ளிர்ந்தனை பல்பணி பூண்டனை
இருநி லத்துவந் தெம்முயிர் தாங்குவை
எங்கள் தாய்நின் பதங்களி றைஞ்சுவாம்.
வந்தே மாதரம்! வந்தே மாதரம்!!
இம்முறை கோடைக்கானல் பயணத் திட்டமான நான்கு நாள்கள் திட்டமிட்டபடி செம்மையாகவே எல்லாம் அமைந்தது. ஊருக்கு திரும்ப வேண்டிய முதல் நாள் இரவு தொடங்கிய மழையிலும் அதன் காரணமான மின் தடையிலும் எங்களுக்கான சோதனை ஆரம்பமானது.
தங்கியிருந்த இடத்தில் எடுத்துச் சென்றிருந்த மெழுகு வர்த்திகள் மற்றும் டார்ச் லைட் துணையிருக்க தூக்கம் தழுவிய நேரம். பெரிய நாத்தனார் மகள் எழுந்து போய் பாத்ரூமில் வாந்தி எடுத்தாள். அடுத்த அரை மணியில் மறுபடியும். கையிலிருந்த முதலுதவி மருந்துகள் பலனளிக்கவில்லை. மணி 12.30