நிறுவனர்:நிலாமகள். Powered by Blogger.

பறத்தல் - பறத்தல் நிமித்தம்

வகையினம் >






















முதற்பதிப்பு: நவம்பர் 2013,
பக்கம்: 80
விலை: 65/-

கோடுகளில் ஓடுவதில் அமைதி கிடைத்ததினால்
கோடுகள் சிலதைக் காட்டி மகிழ்வித்ததினால்
கோடுகளைக் கொண்டு அடைய முடிந்ததினால்
கோடுகளில் உணர்ந்து
கோடுகளால் உணர்த்த முடிந்ததினால்
கோடுகளால் அல்லது
கோடுகளோடு வாழவும் முடிந்ததினால்
கோடுகளும் கலை எனப்பட்டதினால்
எல்லாவற்றையும் கோடுகளில் ஓடவிட்டு
கோடுகளைச் சேகரித்துக் கொண்டிருக்கிறேன்

என்ற தன்னைப் பற்றிய  அறிமுகப்படுத்தலோடு தனது இரண்டாவது கவிதைத் தொகுப்பான ‘மனிதர்களைக் கற்றுக் கொண்டு போகிறவன்' நூலை சுவைபடத் துவக்குகிறார் செந்தில்பாலா.

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த நெகனூர் புதூர் என்ற சிற்றூரைச் சேர்ந்த இவர், அரசுப் பள்ளியொன்றில் ஆசிரியராகப் பணியாற்றுகிறார். கதை, கவிதை, ஓவியம், குறும்படம், நாடகம் எனப் பலதளங்களில் வெளிப்படத் துடிக்கும் இவரது முதல் கவிதைத் தொகுப்பு ‘கதைகள் தீர்ந்த போது அம்மா சொன்ன கதைகள்' (2007)  முகனூல் பக்கத்தில் தெளிவோடும் திறனோடும் இயங்கிக் கொண்டிருக்கிறார். https://www.facebook.com/senthilbala.bala
    “ஒற்றைக் கோட்டில் உருவெடுக்கும் பாலாவின் ஓவியங்கள் அலாதியானவை; பிரமிப்பூட்டுபவை. அவற்றிற்கு இணையான பாதையில் பல்வேறு தரிசனங்களோடு இருட்டும் வெளிச்சமுமாய் பிரவகிப்பவை அவரது கவிதைகள்” -இது அவரது ஆத்ம நண்பர் நறுமுகை ஜெ.ராமகிருஷ்ணனின் அறிமுகச் சொற்கள்.
Share on:
       நம் மண்டையில் அன்றாடம் இறக்கும் செல்கள் தோலின் மேற்புறத்தில் உள்ள எபிடெர்மிஸின் (Epidermis) ஆழ் அடுக்கிலிருந்து இடைவிடாது வெளித்தள்ளப் படுகின்றன. அவை தோலின் மேற்புறத்துக்கு வந்து படிப்படியாக மாள்கின்றன. ஆனால், இந்த இறந்த எபிடெர்மிஸ் மண்டை செல்கள் பெரிய அளவான கட்டிகளாகப் பரவிக் காணப்படும்.
      இவையே பொடுகு எனப்படுகின்றன.

பொடுகு வரக் காரணங்கள்:
Share on:


    பனிக்காலம் வந்தாலே சிலருக்கு தோல் வறண்டு தலையில் பொடுகுத் தொல்லையும் வந்துவிடும். வைத்தியரிடம் தருவதை வாணியரிடம் தந்து ஆரோக்கியமாக வாழ்ந்த நம் முன்னோரெல்லாம் நிழற்படங்களினுள்ளிருந்து நம்மைப் பார்த்து நமட்டு சிரிப்பு சிரிக்கின்றனர்.
    நம் வாழ்விடத்தின் தட்பவெப்பத்துக்கும் நமது உடல்வாகுக்கும் ஏற்றதாய் உணவும் பழக்கவழக்கங்களும் கொண்டிருந்த அவர்களெல்லாம் பழமைவாதிகளாகி விட்டனர், மேலைநாகரீக மோகத்தில் மூழ்கிய இன்றைய தலைமுறையினருக்கு...!
    தலையில் எண்ணெய் தடவிய கையோடு கைகால்களை வருடிக்கொண்ட(கைகுவித்து எண்ணெய் ஊற்றி தலையில் தேய்த்தவர்கள் அவர்கள்) அந்நாளைய ஆசாமிகள் பற்றிப் பேசினால் கேலிப்பொருளாகிறோம் நாம். எண்ணெயை ஸ்ப்ரே செய்து கொள்ளும் காலத்திலல்லவா வாழ்கிறோம்!

பொடுகு+முடி உதிர்தல்=வழுக்கை:



    தலைக்கு மேல் சுழலும் மின்விசிறியடியில் பலமணி நேரம் அமர்ந்து பணி புரியும் பெரும்பாலோருக்கு இன்றைய பெரும் பிரச்சினை இது. எத்தனை இளைஞர்களின் திருமணம் இதனால் பாதிக்கப் பட்டிருக்கிறது தெரியுமா?  வீண் செய்த இயற்கையை எத்தனை பிரயாசைப்பட்டும் எத்தனை செலவழித்தும்...
Share on:
       நவம்பர் மாத மழை,  ஈரப் படுத்திக் கொண்டிருக்கிறது அப்பாவின் நினைவுகளை . தீராத்  துயரமாய் ஆண்டுக்காண்டு பொங்கிப் பெருகும்படியாக அவரது நினைவு நாள் நெருங்குகிறது. நம்மோடு இல்லை எனினும் நம்முள் நிறைந்திருக்கிறார் என அறிவுமனம் உணர்வுமனத்தை ஆற்றுவிக்கிறது. தோழமைக் கவிஞர் கண்மணி ராசா இராஜபாளையத்தில் இருந்து அனுப்பித் தந்த இந்த கவிதை ஒவ்வொரு அப்பாவின் மேன்மையையும் உரக்கப்  பறைசாற்றுகிறது. அப்பாவுக்கு மாற்றாய் வாழ்வில் பந்தப் பட்ட மாமனாரும் மற்றொரு நவம்பரில் தான் உயிர் துறந்தார் என்பதும் நவம்பரை கனப்படுத்துகிறது.

அப்பா

அப்பாவைப் போலொரு
அழகான வனத்தை
எப்போதும் கண்டதில்லை...
இப்போது நினைத்தாலும்
நிறைக்கிறார் மனத்தை
என்னுள்ளே காட்டு முல்லை.

காட்டாற்று வெள்ளம் தான்
அப்பாவின்ன் கால்கள்
எப்போதும் ஓய்ந்ததில்லை...
கரைகொண்ட மரம்தான்
அப்பாவின் தேகம்
எப்போதும் சாய்ந்ததில்லை...

உறைந்த நதிதான்
அப்பாவின் பாசம்
கண்களில் பட்டதில்லை...
ஒழுகும் வெயில்தான்
அப்பாவின் கோபம்
ஒருபோதும் சுட்டதில்லை...

ஊமத்தம் பூதான்
அப்பாவின் துயரம்
வெளியே மணத்ததில்லை...
ஒற்றை இதழ்தான்
அப்பாவின் ஆசை
சற்றேனும் கனத்ததில்லை...

உதிர்ந்த இலைதான்
அப்பாவின் மரணம்
ஒருபோதும் அழிவில்லை...
மண்ணோடு ஒன்றாய்
கலந்திருப்பார்...
மறுபடி எங்கோ
மலர்ந்திருப்பார்!

           -இராசை.கண்மணி ராசா
            இராஜபாளையம்.

Share on:
தொடக்கம்: http://nilaamagal.blogspot.in/2013/10/blog-post_29.html

பகுதி-1: http://nilaamagal.blogspot.in/2013/10/1.html

பகுதி-2: http://nilaamagal.blogspot.in/2013/10/2.html

மரம் வளர்த்த மனிதனின் கதை ... இறுதிப் பகுதி

அந்த இடையர் தற்போது 20 கி.மீ.க்களுக்கு அப்பால் கடுமையாக உழைத்துக் கொண்டிருந்தார். அவர் மரம் நட்டிருந்த பகுதிகள் நிலமேம்பாடு பற்றி ஆராய்ச்சி செய்வதற்கான பகுதியாக இருந்தது.
என் நண்பர் தான் பார்த்ததையெல்லாம் பாராட்டிக் கொண்டே வந்தார். இடையில் சிறிது உணவு இடைவேளைக்காகத் தங்கினோம். நான் கொண்டு வந்த அவித்த முட்டைகளை அவருடன் பகிர்ந்து கொண்டேன்.
பலமணி நேரங்கள் பேச்சின்றி அந்தக் காட்டைப் பார்த்தபடி கழித்தோம்.
நாங்கள் மேலேறிச் சென்ற மலை முகடுகளில் இருந்த மரங்கள் எங்களை விட 4 மடங்கு உயரத்தில் இருந்தன.
1913-ல் நான் உணர்ந்த தனிமை; ஆனால் அமைதி. தொடர்ச்சியான உழைப்பு, மலை உச்சியில் வீசும் சில்லென்ற குளிர்க்காற்று, ரம்யமான சூழல். அமைதியான சிந்தனை. எளிமையான வாழ்க்கை.  இதெல்லாம் சேர்ந்து தான் இவரை இங்கு கொண்டு வந்து நிறுத்தியுள்ளது.

        இவர்தான் கடவுளின் தூதர்களில் ஒருவர்!

        இன்னும் எத்தனை மலை முகடுகள் பசுமையால் போர்த்தப் பட வேண்டும்!
நான் வியந்து நின்றென்.
நாங்கள் கிளம்பும் போது என் நண்பர் அந்த இடையரிடம் எந்த மண்ணுக்கு என்ன மரங்களை நட வேண்டும் என்று கேட்டார். ஆனால் வலியுறுத்தி நிறைய விபரங்களைக் கேட்கவில்லை.
காரணம் அவர் சொன்னார். இந்த மனிதர் என்னை விட மரங்களைப் பற்றி, பல்லுயிர் பெருக்கம் பற்றி நிறைய விபரங்களை விரல் நுனியில் வைத்திருக்கிறார். அது அவரது மூளையை ஆக்கிரமித்திருக்க வேண்டும்.
அப்போது ஒரு மணி நேரம் கடந்திருக்கும். நாங்கள் இன்னும் நடந்து கொண்டிருந்தோம்.
இந்த உலகில் பிற காரியங்களுக்கு மதிப்பளிக்காமல் மகிழ்ச்சியோடு வாழ்வதற்குரிய சரியான வழியை அவர் கண்டுபிடித்திருக்கிறார்.
அதன்படி செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். அந்தக் காட்டிலாகா நண்பருக்கு நன்றி! காடுமட்டுமல்ல, எல்சியர்டு பூபியரின் மகிழ்ச்சியும் நம்பிக்கையும் காப்பாற்றப் பட்டது.
ஆனால், அது ரொம்ப நாட்களுக்கு நீடிக்கவில்லை.

        மீண்டும் இரண்டாம் உலகப் போர் மூலம் தீய விளைவுகள் உற்பத்தி செய்யப் பட்டன. மரங்களை வெட்டி மரக்கரித் துண்டுகளை எரித்து இயந்திரங்கள் இயக்கப் பட்டன.
மரக்கரி உற்பத்திக்கு விறகு தொடர்ந்து கிடைக்கவில்லை. 1910-ம் ஆண்டில் நடப்பட்ட ஓக் மரங்கள் வெட்டப்பட்டன. ஆனால், அவை சாலைகளைத் தாண்டி வெகு தூரத்தில் இருந்ததால் திட்டம் கைவிடப்பட்டது.
இடையருக்கு இவை எதுவும் தெரியாது. தற்போது 30 கி.மீ. அப்பால் வழக்கமான தனது வேலையில் ஈடுபட்டிருந்தார்.
முதலாம் உலகப் போரை அலட்சியம் செய்தது போலவே இரண்டாம் உலகப் போரையும் அவர் மனதளவில் ஒதுக்கித் தள்ளியிருந்தார்.
நான் இறுதியாக அவரை 1945 சூன் மாதத்தில் ஒருநாள் சந்தித்தேன்.
அப்போது அவருக்கு வயது 87. இப்போது எல்லா மலை முகட்களுக்கும் ‘டியுன்ஸ்' பள்ளத்தாக்கிலிருந்து ஒரு பேருந்து போய் வருகிறது.
நான் ஏற்கனவே வந்த அந்த மலையடிவார பொட்டல் வெளிக்கு பேருந்து வந்து நின்றது.
என் நடை உலா மூலம் கண்டறிந்து சென்ற பாதைகள் தற்போது காணாமல் போயிருந்தன. ஒவ்வொரு கிராமத்திற்கும் சாலைகளில் பெயர்ப்பலகைகள் நின்றன.
நான் வந்திருப்பது சரியான இடம் தானா என்று தீர்மானிப்பதற்குள் பேருந்து வேகமாக அந்தப் பகுதியை வந்தடைந்தது. ‘வெர்கான்ஸ்' என்ற சாலை முகட்டில் இறக்கி விடப்பட்டேன்.
1913-ம் வருடம் சிதிலமடைந்திருந்த அந்த 12 வீடுகளில் இப்போது 3 வீடுகளில் மட்டும் யாருமில்லை.
அப்போது நம்பிக்கையற்ற மனிதர்கள் வாழ்ந்தனர். அங்கு காட்டு விலங்குகளைப் போல் வெறுப்பை உமிழ்ந்து கொண்டிருந்த மனிதர்கள் பல்வேறு தடுப்புகளை தங்களுக்குள் அமைத்துக் கொண்டு வாழ்ந்தனர்.
இப்போது எல்லாமே மாறிப்போயிருந்தது. வீசும் காற்றில் கூட வேறுபாடு. மெல்லிய வாசம் வீசும் பூங்காற்று. எங்கும் ரம்மியம்.
மலை உச்சியிலிருந்து நீர் தவழ்ந்து வரும் ஓசை. மென் காற்று இலைகளை உரசிக்கொண்டு இனிமையாய் சடசடக்கும் சப்தம்.
அதோடு ஆச்சர்யமாக இன்னொரு காரியம். அதுவும் தெளிந்த ஊற்று நீரின் சலசலக்கும் ஓசைதான்! இப்போது அந்தப் பகுதிவாழ் மக்களே சேர்ந்து உருவாக்கியுள்ள செயற்கை நீரூற்று. அதிலிருந்து நீர் வெளியேறி குதித்துக் குதித்து ஓடும் காட்சி!
அதற்கருகில் என் மனதை மிகவும் பாதித்த காட்சி. அந்த ஊற்றின் அருகில் யார்ரோ ஒருவர் ‘லிண்டென்' மரத்தை நட்டிருந்தார்கள்.
மறுபிறப்பின் சரியான அடையாளம் அது. மேலும் ‘வெர்கான்ஸ்' மனிதர்க்கள் உழைப்பின் பலனை உற்சாகமூட்டும் பயனை வெளிப்படுத்தியிருந்தார்கள்.
ஆம். நம்பிக்கை மீட்கப் பட்டிருந்தது. இடிபாடுகள் சீர்செய்யப் பட்டிருந்தன. சிதிலமடைந்திருந்த சுவர்கள் கட்டியெழுப்பப் பட்டிருந்தன. புதிய வீடுகள் மெருகு குலையாமல் சமையலறைத் தோட்டங்களோடு காட்சியளித்தன. பூக்களும் காய்கறிகளும் தனித்தனியாக ஒழுங்கமைவுடன் செழித்து வளர்ந்திருந்தன.
ரோஜாக்கள், முட்டைகோசுகள், ஸ்னாப் டிராகன்ஸ், லீக்ஸ், செலரி, அனிமோன்கள் எல்லாம் செழித்து வளர்ந்திருந்தன.
அந்தப் பகுதி எவரும் வந்து வாழ ஆசைப்படும் இடமாக மாறியிருந்தது.
அந்த இடத்திலிருந்து தான் நான் நடக்கத் தொடங்கினேன். இரண்டாம் உலகப் போரின் பேரழிவிலிருந்த் நாடு இன்னும் மீளவில்லை. முழுமையான நிறைவை எய்தவில்லை. ஆனால் லாசர் கல்லறையிலிருந்து எழுந்து விட்டார் போன்ற அற்புதம் இங்கே நடந்தேறியிருந்தது.
மலை முகட்டிலிருந்து மலைச் சரிவுகளைப் பார்க்கும் போது சின்னச்சின்ன வயல் புறங்களில் பார்லியும், ரையும் பயிரிடப் பட்டிருந்தன. இன்னும் கீழே குறுகிய பள்ளத்தாக்குகளும் புல்வெளிகளும் பசுமையாய்ப் பிரகாசிக்கின்றன. இவையெல்லாம் எட்டு ஆண்டுகளில் நடந்தேறிவிட்டன.
1913-ல் இடிபாடுகளையும் பேரழிவுகளையும் பார்த்திருந்த நான் தற்போது தூய்மையான சீரமைக்கப்பட்ட அழகான பண்ணை வீடுகளைப்  பார்க்கிறேன்.
நிறைவான வாழ்க்கையும் மகிழ்வின் சாட்சியங்களும் உலவுகின்றன. காய்ந்து கிடந்த ஊற்றுகளில் பனியும் மழையும் நிரம்பியுள்ளன. காடுகளில் சேமிக்கப் பட்ட நீர் இதோ வழிந்தோடுகிறது.
மலைச்சரிவுகளும் முகடுகளும் பச்சைப் போர்வைகளால் போர்த்தப் பட்டுள்ளன. பகுதி பகுதியாய் கிராமங்கள் புனரமைக்கப் பட்டுவிட்டன. மலைப்பகுதியிலிருந்து மக்கள் சமவெளிக்கு குடியேற வருகின்றனர்.
நிலங்களின் விலை அதிகமாகி வருகிறது. அவர்கள் வாழ்வின் இளமையையும் மகிழ்ச்சியான வாழ்வையும் சாதித்த உணர்வையும் கொண்டு வருகிறார்கள். சாலைகளில் ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது அன்யோன்யமும் ஆரோக்கியமும் வெளிப்படுகிறது. இளைஞர்களும் யுவதிகளும் மகிழ்வுடன் தங்கள் இளமைக் காலத்தைக் கொண்டாடுகின்றனர்.
ஏற்கனவே இங்கு வாழ்ந்தவர்கள் தங்களின் சுற்றுப் புறச்சூழல் முற்றிலும் மாற்¢யிருப்பதை உணர்கிறார்கள். புதிதாகக் குடியேறுபவர்களுக்கும் அவ்விடம் சொர்க்கலோகம் போல் கனவுலகமாகத் தெரிகிறது.
கிட்டதட்ட 10,000 பேருக்கு மேல் அந்தப் பகுதிக்கு வந்து இடையரைச் சந்தித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
ஒரு தனிமனிதன்...
ஒரு உடல்... ஒரு ஆன்மா மட்டுமே.
மனிதக் குறுக்கீடுகளால் பாலைவனமாக்கப் பட்ட இந்தப் பகுதியைச் சோலையாக்கிட முடியுமென்பதை உணர்கிறேன்.
அதே சமயம் அந்த மனிதனின் நம்பிக்கையான கனவு, தொடர்ச்சியான உழைப்பு, இடைவிடா முயற்சி எனக்கு பெருவியப்பாய் இருந்தது.
ஆனால், அந்த அமைதியான உறுதி, தோற்றுவிடாத இலட்சியப் பிடிப்பு, மனத்தின்மை தான் இந்த வரலாற்றுக்கு வெற்றி வாங்கித் தந்திருக்கிறது.
இதுதான் யாருக்கும் அறிமுகமில்லாத அந்த முதுமையான மரம் வளர்த்த மனிதனின் மீது  மதிப்பும் மரியாதையும் கூட்டுகிறது.

(எல்சியர் பூபியர் 1947-ம் ஆண்டு ‘பனான்' என்ற ஊரில் இயற்கை எய்தினார்.
ஒரு பெரிய வேலைத்திட்டத்தை, கடவுளோடு ஒப்பிடக் கூடிய ஒரு படைப்புப் பணியை...
சுற்றுச்சூழல் காப்புச்செயலை மிகச் சரியாக நிறைவேற்றியவரை நினைத்து நினைத்து மனது கொஞ்சம் நெகிழ்கிறது. உங்களுக்கும் அப்படித்தானே...)

நூல் பெயர்: மரம் வளர்த்த  மனிதனின் கதை
பிரெஞ்சு மூலம்: ழான் கியானோ
பிரெஞ்சிலிருந்து ஆங்கிலத்துக்கு: ழான் ராபர்ட்ஸ்
ஆங்கில வழி தமிழில்: இதயசீலன், ஆண்ட்டோ
வெளியீடு: ஹாரிசன் மீடியா, 4/1320, காந்தி நகர், தும்பல் (அஞ்சல்),
சேலம்-636 114.
மின்னஞ்சல்: anto_slm@yahoo.com
தொடர்பு எண்: 9787143550
Share on:
தொடக்கம்: http://nilaamagal.blogspot.in/2013/10/blog-post_29.html

பகுதி-1: http://nilaamagal.blogspot.in/2013/10/1.html

         அந்த கிராமம் அப்படியொன்றும் பெரியதாய் மாறியிருக்கவில்லை. எனினும், கைவிடப்பட்ட அந்த கிராமத்திற்கு அப்பால் தொலைதூரத்தில் ஒரு மலைமுகட்டின் மேல் சாம்பல் பூசிய மூடுபனியைப் போன்ற ஒன்று போர்வையாய் மூடியிருந்தது.
அப்போதுதான் மரங்களை நட்ட அந்த இடையரின் நினைவு எனக்கு வந்தது.
இத்தனை நாட்கள் கழித்து நேற்றுதான் அந்த 10,000 ஓக் மரங்கள் பற்றி ஞாபகம் வந்தது. அவைகள் இன்றைய நாள் வரை வளர்ந்திருந்தால் நிறைய இடத்தை அடைத்துக் கொண்டிருக்கும்.
கடந்த ஐந்தாண்டுகளில் ஏராளமான மனிதர்கள் இறந்து போய் விட்டார்கள். அந்த ஆட்டுக்காரர் ‘எல்சியர்டு பூபியர்' கூட ஒருவேளை இறந்திருக்கலாம்.
குறிப்பாக நமக்கு 20 வயதாகும் போது 50 வயது மனிதர்களைப் பழமைவாதிகள் என்று சொல்லி விடுகிறோம். என்ன செய்வது... அதற்கு மேல் சாக வேண்டியதுதான். ஆனால் அவர் சாகவில்லை!
தன் பழைய தொழிலை மாற்றிக் கொண்டுவிட்டார். தற்போது அவரது கிடையில் வெறும் நான்கே நான்கு ஆடுகள் தான் இருக்கின்றன. ஆனால், 100 தேனீக் கூடுகள் வைத்திருக்கிறார். தற்போது ஆடுகள் மேய்க்கும் வேலையை விட்டுவிட்டார். ஏனென்றால், ஆடுகள் இளம் ஓக் கன்றுகளின் வளர்ச்சியைப் பாதித்தன.
நடந்து முடிந்த உலகப் போர் அவருக்கு இடையூறாய் இருக்கவில்லை. ஆனாலும் அவர் தன்னுடைய மரம் நடும் பணியைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார்.
1910-ம் வருடம் நட்ட ஓக் கன்றுகளுக்கு இப்போது பத்து வயதாகிவிட்டது. என்னை விட அவை உயரமாக நிற்கின்றன. என்ன ஒரு அருமையான காட்சி!
என்னிடம் ஒரு வார்த்தை கூட அவர் பேசவில்லை. அவர் வளர்த்த காட்டின் ஊடாக அந்த நாள் முழுவதும் நடந்து கொண்டிருந்தோம். 11 கி.மீ. நீளத்துக்கு 3 பாத்தி வரிசைகளில் ஓக் மரங்கள் வளர்ந்திருந்தன. அவை 3 கி.மீ. தூரம் பரவி இருந்தன. எனக்கு ஞாபகமிருக்கிறது.  இவ்வளவு பெரிய வேலை ஒரு தனிமனிதனின் உழைப்பு. ஆத்மார்த்தமான அர்ப்பணிப்பு. எந்த எந்திர உதவியும் இல்லாத உழைப்பு.
மனிதர்கள் தெய்வமாக மாற முடியும் என்பதை அன்று உணர்ந்தேன்.
கடும் உழைப்பு; அழிவுக்கு எதிரான உழைப்பு.
அவர் கண்ட கனவை அவரே நனவாக்கினார்.
புங்க மரங்கள் என் தோள் உயரத்திற்கு வளர்ந்திருந்தன. என் கண்களுக்கு எட்டும் தூரம் வரை பசுமையாக ஓக் மரங்கள் உறுதியாய் தலைநிமிர்ந்து நின்றிருந்தன.
இவைகளே சாட்சிகள்!
இவைகள் வளர எலிகளின், வேர்க் கரையான்களின், இயற்கையின் கருணையும் ஒரு காரணமல்லவா?
இயற்கையைப் பொறுத்தவரை இந்த அரிய வளத்தை இம்மனிதனின் சாதனையை முறியடிக்க சுழன்றடிக்கும் ஒரு சூறாவளி போதுமானது.
பின்னர் அவர் என்னிடம் ஐந்து சிறிய சோலைகளைக் காட்டினார். அவை 1915-ல் பயிரிடப்பட்டவை என்றார். அந்த ஆண்டு நான் ‘வெர்டூன்' பகுதியில் போரில் ஈடுபட்டிருந்தேன்.
பள்ளமான எல்லா இடங்களிலும் அவர் விதைகள் போட்டிருந்தார். அவர் நினைத்தபடியே மண்படுகையின் அடியில் ஈரம் இருந்திருக்கவேண்டும்.
அந்த சோலைகள் குழந்தைகளைப் போல் இளமையுடன் மிருதுவாக காற்றில் அசைந்தாடிக் கொண்டிருந்தன. உறுதியாக நின்றன. இயல்பாக வளர்ந்ததைப் போல் அவை தோற்றமளித்தன.
அவர் சஞ்சலமற்ற தனது இடைவிடாத உழைப்பால் தன் இலக்குகளின் உச்சத்தை அடைந்து கொண்டிருந்தார். 
நான் கிராமத்தை விட்டுக் கீழிறங்கி நடந்த போது ஓடைகள் நிரம்பிய நீரோடு ஓடி வருவதைப் பார்த்தேன்.
எப்போதும் காய்ந்து கிடந்த அந்த மண்ணின் ஈரப்பதத்தின் அற்புத உயிரோட்டம்.
இதுதான் இயற்கையின் இயல்பான சுழற்சியில் வெளிப்படும் அதிசயம். இந்த அதிசயத்தை நான் பார்த்ததேயில்லை. நீண்ட காலத்துக்குப் பின் நீர்த் தாங்கல்கள் நிரம்பியுள்ளன. கைவிடப்பட்ட கிராமங்களாயிருந்தவைகளில் இப்போது சிலர் ரோமானிய சாயலில் வீடுகள் கட்டுகிறார்கள்.
தொல்லியல் ஆய்வாளர்கள் இங்கிருந்து மீன்பிடி தூண்டில்களைத் தோண்டி எடுத்து இருந்தார்கள். அவை 20 ம் நூற்றாண்டில் உள்ளதைப் போலவே இருந்ததாம்.
அந்தக் கிராமத்தில் குடிநீர் மற்றும் நீர்ப்பாசனம் குழாய் இணைப்புகளின் மூலமாக நடைபெறுகிறது. வேகமாக வீசும் காற்று மரத்திலிருந்த முற்றிய விதைகளை உதிர்த்து விடுகிறது. ஆங்காங்கே விழுந்த விதைகள் மீண்டும் முளைக்கத் தொடங்கி விடுகின்றன.
வில்லோ மரங்கள், நாணல் புதர்கள், பசும் புல்வெளிகள், பூக்கள் வளர்கின்றன. வாழ்வுக்கான அர்த்தம் தான் என்ன என்பது இவ்வாறு வெளிப்படுகிறது. இவையெல்லாம் மெதுவாக நடந்தேறின. ஆனால் அவை உடனே பயன்பாட்டுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
முயல் அல்லது காட்டுப் பன்றிகளை வேட்டையாட வருபவர்கள் மலைகளின் முகடுகளுக்கு வரும்போது காட்டில் உள்ள சிறுமரங்களைப் பார்த்து ஏதோ இயற்கையின் கொடை என்று அதிசயிக்கின்றனர்.
அதனால் தானோ என்னவோ இடையரின் கடின உழைப்பிற்கு ஒருவரும் அங்கீகாரம் கொடுக்கவில்லை.
நல்லவேளை யாராவது ஒரு மனிதருக்கு சந்தேகம் வந்திருந்தாலும் இன்னொருவர் அதனைத் தடுத்து நிறுத்தியிருப்பார்.
ஆனால், யார் தான் அவரைப் பற்றி நினைப்பது?
அந்தக் கிராமங்களின் மனிதர்கள் அல்லது அந்தப் பகுதி அதிகாரிகள் யாராவது இடையரின் தொடர்ந்த உன்னதமான இலட்சிய உழைப்பை கற்பனை செய்து பார்த்திருப்பார்களா?
1920 முதல் ஒவ்வொரு ஆண்டும் நான் அவரைப் பார்க்க வருவேன். அவர் எப்போதும் போலவே இருந்தார்.
சோர்வடையாத மனம், இளகாத விடாமுயற்சி, கடவுளுக்குத் தான் தெரியும். சொர்க்கமே இவருக்கு எதிராக இருக்கிறதென்று.
அவருடைய மனப்போராட்டங்கள் வேதனைகள் குறித்து நான் கற்பனை செய்தது கூட இல்லை.
இத்தகைய சாதனைகளுக்காக அவர் நிறைய இடையூறுகளைச் சந்தித்திருக்கக் கூடும். இந்த அமைதிப் புரட்சிக்காக அவர் ஏராளமான இன்னல்களைத் தாங்கி அவநம்பிக்கையை எதிர்கொண்டும் வெற்றி பெற்றிருக்கக் கூடும். இந்த அசாதாரண மனிதன் இந்தச் சாதனையைச் சாதிக்க முழுமனதோடு தன்னந்தனியாக உழைத்தார். தன் வாழ்வின் இறுதி வரை உழைத்தார். இதற்காகப் பேச்சையே துறந்தார். ஏனெனில் உழைக்கும் அவருக்குப் பேச்சு தேவையற்றதாய் இருந்தது.
ரொம்ப நாள் கழித்து 1933-ல் காட்டிலாகா அதிகாரி ஒருவர் அவரைச் சந்தித்தார். வனப்பகுதியில் குப்பையை எரித்தல் தடைசெய்யப் பட்டுள்ளது என்று அறிவுறுத்தினார். அந்தத் தீ இயற்கையாய் உருவான காட்டை அழித்துவிடக் கூடியதாம். இயற்கையாகவே உருவான இது போன்றதொரு அற்புதமான காட்டை என் வாழ்வில் தான் பார்த்ததே இல்லை என்றார்.
1935-ல் இயற்கைக் காட்டைப் பார்க்க அரசு அதிகாரிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள், இயற்கை ஆர்வலர்கள் அங்கு வந்தார்கள்.
அவர்கள் உரையாடல் முழுவதும் அந்த இயற்கைக் காட்டைப் பற்றியே இருந்தது. ஏதாவது செய்யப்பட வேண்டும் என்று தீர்மானித்தனர். ஆனால், ஒன்றும் நடக்கவில்லை. ஒரே ஒரு நல்ல தீர்மானம் போட்டார்கள். யாரோ உருவாக்கிய காட்டை அரசின் பாதுகாப்பில் ஒப்படைத்தார்கள்.
அப்போதுதான் மரக்கரித் துண்டுகள் உற்பத்தி செய்வது தடைசெய்யப் பட்டது. இது போல் ஒரு காடு இயற்கையாக உருவாகியிருக்க முடியாது. யாரோ ஒருவரின் கடின உழைப்பு என்று சொல்லக் கூட காட்டிலாகா அதிகாரி யாருக்கும் அங்கு வந்த பாராளுமன்ற உறுப்பினர்களிடம் சொல்லத் தோன்றவில்லை.
அந்த உயர்மட்ட காட்டிலாகா அதிகாரிகளின் குழுவில் என் நண்பர் ஒருவர் இருந்தார். என் நண்பருக்கு எல்லாம் சரியாகப் புலப்பட்டது. இந்த அதிசயத்திற்கான இரகசியத்தை அவரிடம் எடுத்துக் கூறினேன். 
பின்பு, ஒருநாள் அவரும் நானும் ‘எல்சியர்டு பூபியரை' பார்க்கச் சென்றோம்.
 
-மேலும் வளரும்....


...இந்தக் கவிதை எழுதுகிறவன்
பீங்கான் கழிப்பறைகளில்
பிளாஸ்டிக் குவளைகளில் 
கொட்டிய தண்ணீரில்
கோடியில் ஒரு பங்காவது
ஊற்றியிருப்பானா 
ஒரே ஒரு செடி 
வேரடி மண்ணில்.
       - கல்யாண்ஜி 

நிறமில்லாத இரத்தம்


இன்றோடு
அறுந்து தரை வீழ்கிறது
உன் தாய்மையின் தலை

இன்றுதான்
சிதறியுடைந்து பாழாகிப்போனது
கிளைகள் நீட்டி
இலைகளை வேய்ந்து
நீ கட்டிய அந்த பிரம்மாண்ட வீடு

நேற்றுவரை
புழு பூச்சி பறவைகளின்
பிரசவம் நிகழ்ந்த
இலவச மகப்பேறு மருத்துவமனையாயிருந்தது
உன் மனை

பிராணிகளின் பிராண வாயு
சுதந்திரம் என்பதால்
அவை
தாவி ஓடி விளையாடும்
தடகளப்போட்டி மைதானமாயிருந்தன
உன் தோள்கள்

சுவற்றில் சிறு கீறல் விழுந்தாலே
அலறும்
வீட்டு உரிமையாளர்கள் மத்தியில்
வாடகையேதும் வாங்காமல்
குருவிகளையும் காக்கைகளையும்
குடிவைத்தவள் நீ

உன் தேகமெங்கும்
நாங்கள்
ஆணிகளால் அறைந்தோம்
கூரான ஆயுதம் கொண்டு
காதலரின் பெயர்கள் வரைந்தோம்

ரணமானதே மேனியென்று
ரௌத்திரம் கொள்ளாமல்
கனமான உன் சோகங்களை
எங்களுக்கு
காட்டாமல் மறைத்த
கண்ணியக்காரி நீ

நாங்கள்
உழைத்துக்களைத்து
உன் மடி தேடி வந்தால்
வெயிலை வடித்துவிட்டு
நிழல் தேனீர் தந்தாய்

பசி பொறுக்காமல் உன்
புகலிடம் தேடி வந்தாலோ
உயிரைக்கனியாக்கி
உண்ணக்கொடுத்தாய்

இறுதியாய்,

நீ மரித்து வீழ்ந்த பின்புதான்
மிச்சமான உன் எலும்புகள்
எங்கள் வீட்டின்
மேஜை நாற்காலிகளாயின

மனிதர்கள் எங்களை நீ
மன்னித்துவிடு

வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம்
என்று சூளுரைத்தோம்
பின்பு
எங்கள் பேருந்துகள் பயணிக்க
சாலைகளில்
நாங்களே
உன்னை வேரோடு அறுத்தோம்

ஆம்..

ஈன்ற அன்னையருக்கே
முதியோர் இல்லத்தில்
கல்லறை தயாரிக்கும் நாங்கள்
அறியவில்லை

வாள் கொண்டு கிழித்தபோது
வழிந்த
நிறமே இல்லாத உன் ரத்தம் பற்றி

காற்று மொத்தமும் நிறையும்படி
பெருங்குரலெடுத்து அழுத
உன்
சத்தம் பற்றி..

-ப. தியாகு (http://pa-thiyagu.blogspot.in/)
Share on:
 (முதல் பகுதி: http://nilaamagal.blogspot.in/2013/10/blog-post_29.html )

      விதைகள் அதனுள் இருந்தன. அவற்றை ஒவ்வொன்றாக எடுத்துப் பரிசோதித்தார். நல்லவற்றைத் தனியாகவும் சொத்தைகளைத் தனியாகவும் வைத்தார்.
       நான் என் பைப்பில் புகைத்தபடி அமர்ந்திருந்தேன். நான் கொஞ்சம் உதவட்டுமா என்று கேட்டேன். அது தன் வேலை என்றார். அந்த வேலையை மிகுந்த கவனத்தோடு அவர் செய்வதைக் கவனித்தேன்.
        அப்போதுதான் நாங்கள் முதலும் கடைசியுமாகப் பேசிக்கொண்டோம்.
        பின், அவர் தேவையான ஓக் விதைகளை பரிசோதித்தபின் பத்து பத்தாகப் பிரித்தார். அவற்றிலும் சிறியவைகளையும் கீறல் விழுந்தவைகளையும் ஒதுக்கி வைத்தார்.
         இப்போது மீண்டும் அவைகளை துல்ல்¢யமாகப் பரிசோதித்து இறுதியாக அவர் மேசையில் 100 ஓக் விதைகல் சேர்ந்ததும் வேலையை நிறுத்தி விட்டார்.
         நாங்கள் படுக்கைக்குச் சென்றோம். அவரோடு கூட இருந்த கணங்கள் எனக்கு நிறைவான மன அமைதியைத் தந்தது.
        அடுத்த நாள் காலை இன்னும் ஒருநாள் நான் அங்கே தங்கிவிட்டுப் போகலாமா என்று கேட்டேன். நான் கேட்டது அவருக்கு இயல்பாகத் தோன்றியிருக்கலாம். எனக்கு அவரோடு தங்கியிருக்க வேண்டும் போலிருந்தது.
        அப்படிக் கேட்டதால் அவரை எதுவும் பாதித்ததாக எனக்குத் தெரியவில்லை. அடுத்தநாள் எனக்கு ஓய்வு தேவைப்படவில்லை.
        அவரைப் பற்றி நிறைய தெரிந்து கொள்ள விரும்பினேன். அவர் பட்டியிலிருந்த ஆடுகளை விடுவித்து மேய்ச்சலுக்கு புறப்பட்டார்.
         அதற்கு முன் அவர் ‘ஓக்' விதைகள் இருந்த பையை நீர் இருந்த கிண்ணத்தில் ஊறப்போட்டார். அவர் ஆடு விரட்டும் தடிக்குப் பதிலாக ஒரு இரும்புக் கம்பியை எடுத்துவருவதை நான் கவனித்தேன். என் கட்டை விரலளவு தடிமனாகவும் என் தோள்பட்டை உயரத்திலும் அது இருந்தது.
        நான் அங்குமிங்கும் உலாவுவதைப் போல் அவரைப் பின் தொடர்ந்தேன். ஒரு குறிப்பிட்ட தொலைவில் அவர் போகும் பாதைக்கு இணையான பாதையொன்றில் நானும் நடந்தேன்.
       அவரது ஆடுகள் பள்ளத்தாக்கிலிருந்த புல்வெளியில் மேயத் தொடங்கின. ஆடுகளுக்கு நாயைக் காவலுக்கு விட்டுவிட்டு நான் நின்றிருந்த மலை முகட்டுக்கு ஏறத்தொடங்கினார். என்னைக் கடிந்து கொள்ளத்தான் வருகிறார் என்று நினைத்து சற்று பயந்தேன்.
       ஆனால், நான் நின்றிருந்த இடத்தைத் தாண்டி மேலே அவர் சென்று கொண்டிருந்தார். எனக்கு வேறு வேலை எதுவுமில்லை என்றால், என்னையும் தன்னோடு வரும்படி அழைத்தார். அவருடைய இலக்கை நாங்கள் அடைந்ததும் அந்த இரும்புத் தடியால் குழியெடுக்கத் தொடங்கினார்.
         ஒவ்வொரு குழியிலும் ஒரு ஓக் விதையைப் போட்டு மண்ணை மூடினார். 
        இந்த மலைப்பரப்பு உங்களுடையதா என்று கேட்டேன். இல்லையென்று சொன்னார்.
         இந்த நிலம் யாருடையதென்று கேட்டேன். அதுவும் தெரியவில்லை என்றார். அது பொது நிலம். கோயில் சொத்தாக இருக்கலாமென்றார். இல்லையெனில் இந்த இடத்தைப் பற்றிக் கவலைப்படாத யாரோ ஒருவருடையதாகவும் இருக்கலாம் என்றார். அதுபற்றி அவருக்குக் கவலையில்லை.
         அப்படியாக தொடர்ச்சியான அக்கறையோடு தான் கொண்டு வந்த 100 ஓக்  விதைகளையும் விதைத்தார்.
       மதிய உணவிற்குப் பின் தான் ஏற்கனவே நட்ட ஓக் செடிகளைப் பார்வையிடத் தொடங்கினார்.
          கடந்த மூன்று வருடங்களாக அவர் இந்தத் தரிசு நிலத்தில் மரங்களை நடத் தொடங்கியுள்ளார்.
      கிட்டதட்ட 10,000 விதைகள் விதைத்துள்ளார். அவற்றிலிருந்து 2,000 இளஞ்செடிகளே வெளிவந்துள்ளன. இவற்றில் பாதியையும் இழந்து விடுவேன் என்றார். வேர்க்கரையானோ, எலிகளோ, இயற்கை சீற்றமோ இளஞ்செடிகளின் அழிவை மேலும் அதிகரிக்கலாம்; யாருக்குத் தெரியும் என்றார்.
      அந்த 10,000 ஓக் கன்றுகளைத் தவிர இதற்கு முன் அங்கே எதுவுமே இருந்திருக்கவில்லை.
       அவருடைய வயதைக் கேட்டேன். அவர் சொன்னதை விட அவருக்குக் கூடுதலாக இருக்கலாம் போல் இருந்தார்.
        பின்னர் அவர் பெயர் கேட்டென். அவர் பெயர் ‘எல்சியர்டு பூபியர்' என்றார். பள்ளத்தாக்குப் பகுதியில் அவர் ஒரு பண்ணை வைத்திருக்கிறார்.  அங்குதான் அவர் வாழ்வு சிறந்திருந்தது. 
       கொடிய நோய்த் தாக்குதலினால் முதலில் அவரது ஒரே மகனையும் அடுத்து அவரது மனைவியையும் இழந்திருக்கிறார். பின்பு தான் ஏகாந்தமான இந்த இடத்துக்கு வந்திருக்கிறார்.
        தன்னுடைய ஆடுகளோடும், நாயோடும் வாழ்வதே அவருக்கு மனதுக்கு நிறைவாய் இருந்திருக்கிறது.
    இந்த நிலப்பகுதி மரங்கள் இல்லாமல் பாலைநிலமாய் மாறிக் கொண்டிருக்கிறது. தனக்கென்று குறிப்பாக எந்த வேலையும் இல்லாததால் இந்தப் பகுதியில் மரங்களை நடும் வேலையைத் தேர்ந்தெடுத்தேன் என்று கூறினார்.
       அவருடைய பகிர்வு எனக்கு மிகவும் பிடித்திருந்தது. நான் இளைஞன் ஆதலால் என் எதிர்காலம் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தேன். நான் சொன்னேன்: இன்னும் 30 ஆண்டுகளில் 10,000 ஓக் மரங்கள் மிக அருமையாக வளர்ந்திருக்குமென்று. அதற்கு அவர் சொன்னார்: “கடவுள் என்னைப் பிழைக்க வைத்திருந்தால் இந்த 30 ஆண்டுகளில்...”
       இன்னும் ஏராளமான விதைகளை விதைத்திருப்பார். இந்த 10,000 ஓக் மரங்கள் கடலில் விழுந்த ஒரு துளி நீர் போல தான். ஏற்கனவே அவர் புங்கன் மரங்களை வளர்ப்பது பற்றிய நுட்பத்தைத் தெரிந்து வைத்திருந்தார். அதோடு கூட புங்கன் விதைகளை நட்டு நாற்றங்காலில் இளம் செடிகளை வைத்திருந்தார். அந்த புங்கன் செடிகள் வளர்ந்திருந்த பாத்தி மிக அழகாக இருந்தது.
     மேலும் அவர் பள்ளத்தாக்குகளில் மரம் வளர்க்க வேறு வகையான விதைகளையும் வைத்திருந்தார்.
     அவர் சொன்னார்: இந்த மண் படுகைக்கடியில் ஈரப்பதம் இருக்கிறது. கண்டிப்பாய் நட்ட விதைகள் மரங்களாகும்.
        அடுத்தநாள் நான் என் பயணத்தைத் தொடங்கினேன். அப்போதுதான் முதல் உலகப்போர் மூண்டது.
     தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் நான் இராணுவச் சேவையில் ஈடுபட்டிருந்தேன். ஒரு போர் வீரன் மரங்களைப் பற்றித் தெரிந்து வைத்திருப்பது இயல்பான செயலல்ல. போர் நிறுத்தத்துக்குப் பிறகு எங்கள் படை கலைக்கப் பட்டது. எனக்கு இராணுவச் சேவைக்கான கணிசமான ஒரு தொகை ஊதியமாகக் கிடைத்தது.
               நான் மீண்டும் பயணப்பட்டு அந்த மலை முகட்டுக்கு வந்தேன்.
                                                          -வளரும்...

இவற்றையும் வாசிக்கலாம்...

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=1539:2009-12-06-11-10-50&catid=955:09&Itemid=206

http://www.dinamalar.com/news_detail.asp?id=778052

http://www.thulikal.com/?p=7797

http://tamilpoongga.blogspot.in/2012/09/blog-post.html
Share on:
மரம் வளர்த்த மனிதனின் கதை

French cover


         ழான் கியானோ எழுதிய இந்த பிரெஞ்சு சிறுகதை (நூல் வெளியீடு: 1953) அனிமேஷன் படமாக்கப் பட்டு உலகெங்கும் பார்க்கப் படுகிறது. 


 இந்த படத்தின் நாயகர் எல்சியர்டு பூபியர். ஒருவேளை கற்பனையாகப் படைக்கப்பட்ட பாத்திரமாகவுமிருக்கலாம். ஆனாலும் ஒரு உயிரோட்டமுள்ள பாத்திரப்படைப்பாக உருத்தெரிந்தது மரம் நட்டு வளர்ப்பதையே தம் வாழ்நாள் லட்சியமாகக் கொண்டதால் தான். கனடியன் ஒலிபரப்புக் கழகம் ‘சொசைட்டி ரேடியோ கனடா' என்ற அமைப்பின் கீழ் 1987-ம் ஆண்டு 30 நிமிடங்கள் ஓடத்தக்க அனிமேஷன் படமாக (The Man who Planted Trees) வெளியிட்டது. 

       வாசிப்பவர்களை யோசிக்கச் செய்யத் தக்க மனதுக்கு நெருக்கமான வார்த்தைகளுடன் இச்சிறுகதையை பிரெஞ்சிலிருந்து ஆங்கிலத்தில்-ழான் ராபர்ட்ஸ் மொழிபெயர்க்க,  ஆங்கிலத்திலிருந்து தமிழில் 


மரம் வளர்த்த மனிதனின் கதை 

என்ற தலைப்பில் நூலாக வெளியிடும் ஹாரிசன் மீடியா (4/1320, காந்தி நகர், தும்பல் (அஞ்சல்), சேலம்-636 114, தொடர்பு எண்: 9787143550, மின்னஞ்சல்: anto_slm@yahoo.com) பாராட்டுக்குரியது.


 தமிழில் மொழிபெயர்த்த 

திரு.இதயசீலன்  மற்றும் 

திரு.ஆண்ட்டோ 


போற்றுதலுக்குரியோர்.

 இனி கதை...

பல ஆண்டுகளுக்கு முன் ஒருமுறை ஆல்ப்ஸ் மலையில் சுற்றுலாப் பயணிகளுக்கு எந்த அறிமுகமுமில்லாத ஒரு சிகரத்தில் நடையுலா சென்றேன். பழமையான சிகரங்கள் சரிந்து இறங்கும் பாறைகள் கொண்ட மலைப்பகுதிகள் அது.

         கடல் மட்டத்திலிருந்து சுமார் 1200 முதல் 1300 மீட்டர்கள் உயரமுள்ளது. நீண்ட அடர்த்தியாக மானாவாரியாக வாசனைமிகு லாவண்டர் செடிகள் வளர்ந்து கிடந்த பகுதியது.

         மூன்று நாள் மலையேற்றத்தின் பின் நான் ஒரு தரிசு நிலப் பகுதியில் நின்றேன். நான் நடந்து சென்ற அந்தப் பாதை மலைமேல் விரிந்து பர்ந்து கிடந்த ஒரு நிலப் பரப்பை நோக்கிச் சென்றது. வார்த்தைகளால் விவரிக்க முடியாத நிலப்பகுதி அது.

          அன்றைய இரவைக் கழிக்க நான் அங்கு கூடாரமிட்டுத் தங்கினேன். அதற்கு பக்கத்தில் தான் ஆள் அரவமற்ற கிராமமொன்று இருந்தது.

         அன்றைய தினத்துக்கு முந்தைய நாள் என்னிடமிருந்த குடிநீர் தீர்ந்து போயிருந்தது. கொத்து கொத்தாக வீடுகள் இடிந்து போயிருந்தன. அவை பழைய குளவிக்கூட்டின் சாயலை ஒத்திருந்தன. அந்தப் பகுதியில் எங்காவது ஒரு நீரூற்றோ கிணறோ இருக்குமென்று நம்பினேன். நான் நினைத்தது போல் அங்கு ஒரு ஊற்று இருந்தது. ஆனால் நீர் தான் இல்லை.

        கூரையில்லாத வீடுகள் காற்றாலும் மழையாலும் அழிக்கப்பட்டிருந்தன. மாதாக்கோயிலும் மணிக்கூண்டும் சிதிலமடைந்து கிடந்தன. அந்தப் பகுதி ஒரு காலத்தில் மனிதர்கள் வாழ்ந்த பகுதியாகக் காட்சியளித்தது. ஆனால் தற்போது உயிர் நடமாட்டம் ஏதுமில்லாமலிருந்தது.

அது ஒரு ஜுன் மாதத்தின் மேகமற்ற வெப்பமான நாள். உயர்ந்த காலியான அந்த மேட்டு நிலங்களில் தடையற்ற வேகமான காற்று காலியான வீடுகளின் உள் நுழைந்து, கடும் உறுமலுடன் வெளிவந்தது.
தான் வேட்டையாடிய உணவை தின்று கொண்டிருக்கையில் மற்றொரு மிருகம் பங்கு கேட்க வந்தால் எப்படி உறுமுமோ அப்படி உறுமியது காற்று. இதனால் என் கூடாரத்தை வேறிடத்துக்கு மாற்ற வேண்டியதாயிற்று.

         மீண்டும் ஐந்து மணி நேரம் தொடர்ந்து நடந்தேன். இன்னும் குடிநீர் கிடைக்கவில்லை. எங்காவது கிடைக்கும் என்ற நம்பிக்கையுமில்லை. சென்ற எல்லா இடங்களிலும் அதே வறட்சி... தகிப்பு!
காய்ந்து சருகாகிப் போன புற்களும் புதர்களும் எங்கும் காணப்பட்டன.

        அங்கு தொலைதூரத்தில் ஏதோ ஒன்று கண்ணில் தென்பட்டது. மெல்லியதான கருமையான மரக்குச்சி போல் ஒரு உருவம் நின்று கொண்டிருந்தது. அந்த உருவத்தை நெருங்கிச் சென்றேன். ஒரு இடையர் அவர்.

      அவருக்கருகில் 30 செம்மறியாடுகள் வெக்கையான அந்த வெட்டவெளியில் படுத்துக் கிடந்தன. அவரை நெருங்கியதும் தன்னிடமிருந்த நீர்க்குடுவையை எனக்குக் குடிக்கக் கொடுத்தார். பின், தனது ஆட்டுப்பட்டிக்கு என்னை அழைத்துச் சென்றார்.

          இயற்கையாக தோண்டப்பட்ட அங்கிருந்த கிணற்றிலிருந்து எனக்கும், ஆடுகளுக்கும் நீரை இறைத்துக் கொடுத்தார். அருமையான குளிர்ந்த குடிநீர். அவர் மிகவும் குறைவாகவே பேசினார்.

        தன்னந்தனியாக வாழ்வோர் பலபேர் இப்படித்தான் கொஞ்சமாகப் பேசுவார்கள். தன்னிருப்பைப் பற்றிய நிச்சயத் தன்மையும் தன் வேலையைப் பற்றிய தெளிவும் அவரிடம் இருந்தன. 

        அந்த சிகரத்தின் வெட்ட வெளிகளில் கண்ணில் பட்டதெல்லாம் எனக்கு அதிசயமாகத் தோன்றியது.

       அவர் குடிசையில் அல்ல. நல்ல வீட்டில் குடியிருந்தார். அது கற்களால் கட்டப்பட்ட செளகரியமான வீடு. அவர் கைப்படப் பார்த்துப் பார்த்துக் கட்டியிருந்தது தெரிந்தது.

        ஒருமுறை இடிபாடுகளைச் சரிசெய்திருப்பதும் தெர்¢ந்தது. அவர் வீட்டுக் கூரை இறுக்கமாகவும் உறுதியாகவும் இருந்தது. அந்தக் கூரை மீது காற்று மோதும் போது கடற்கரையில் எழும் அலையின் ஓசையைப் போன்றிருந்தது.

வீட்டின் உள்ளே என்னை அழைத்துச் சென்றார். பாத்திரங்கள் கழுவப்பட்டு, தரை துடைக்கப்பட்டு திரி விளக்குகளில் எண்ணெய் நிரப்பப்பட்டு, தூய்மையும் ஒழுங்கும் ஒருசேர இருந்தன.

அவரது ‘சூப்' அடுப்பில் கொதித்துக் கொண்டிருந்தது.

          அவரைக் கவனித்தேன். பிசிறில்லாமல் மழிக்கப்பட்ட முகம். ஆடைகள் தூய்மையாகவும், பொத்தான்கள் சரியாகத் தைக்கப் பட்டும் அவரது நாகரீக மேனியைப் பறைசாற்றின.

அவர் தனது சூப்பை என்னுடன் பகிர்ந்து கொண்டார். நான் அவரிடம் என் புகையிலைப் பையைக் கொடுத்தேன். தான் புகைப்பதில்லை என்று தவிர்த்து விட்டார்.

        அவரது நாயும் அவரைப் போலவே அமைதியாக இருந்தது. என்னிடம் நட்பாகப் பழகியது. அன்றிரவு அவர் வீட்டில் நான் தங்குவதற்குச் சம்மதித்தார்.

         அருகிலுள்ள கிராமம் இரண்டு நாள் நடைப் பயண தூரத்திலிருந்தது. அந்தப் பகுதியிலிருந்த கிராமங்கள் எண்ணிக்கையில் குறைவாகவும், தொலை தூரத்திலும் இடைவெளி விட்டும் இருந்தன.

         அந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை ஒருவாறு நான் புரிந்து கொண்டேன்.

          நான்கு அல்லது ஐந்து குடும்பங்கள் அந்த மேட்டு நிலப்பகுதியின் சரிவுகளில் குடியிருந்தன.

         அவர்களிடம் மரத்திலான தள்ளு வண்டி இர்ந்தது. அவர்கள் மரங்களை வெட்டி எரித்து கரித்துண்டுகள் தயாரிப்பவர்கள்.

         ஆனாலும் வாழ்க்கையில் ஏழ்மை நிரம்பியவர்கள். கடும் கோடையிலும், மோசமான குளிரிலும் நெருக்கமாக அடைந்து கிடப்பார்கள். வாழ்க்கைக்கான போராட்டத்திலும் தனிமையாலும் முரடர்களாக மாறிப் போயிருந்தார்கள்.

எதிலும் நிறைவில்லை. நிம்மதியில்லை. இதிலிருந்து தப்பிக்க அவர்கள் ஏக்கத்துடன் முயற்சிப்பார்கள். அடைய முடியாத லட்சியம்; நிறைவேறாத கனவுகள்.

        முடிவில்லாமல் அவர்கள் மரக்கரி மூட்டைகளுடன் நகருக்குச் சென்று விற்றுத் திரும்புவார்கள்.

          தொடர்ச்சியான வறுமையின் தாக்கத்தால் மிகவும் நல்லொழுக்க சீலர்களிடம் கூட குணங்கள் விரிசல் கண்டுவிடும்.

          உழைக்கும் பெண்கள் பல்வேறு பிரச்சினைகளால் நிம்மதியற்று குமைந்து கொண்டிருப்பார்கள்.

        எதிலும் எல்லா இடங்களிலும் கோவிலில் கூட உட்கார அமர்விடங்களைப் பிடிப்பதில் போட்டி தான்.

        நல்லவர்களாக இருப்பதிலும் கெட்டவர்களாக இருப்பதிலும் கடும் போட்டி இருக்கும். நல்லவை தீயவைக்கான பெரும் போர் இடைவிடாது தொடர்ந்தபடி இருக்கும்.

        தற்கொலைகளும் மன நோய்களும் அதனால் கொலைகளும் நடந்தபடி இருக்கும்.

         இவைகளின் இடையே தொடர்ந்து வீசும் அந்தக் காற்று நரம்புகளைச் சுண்டி இழுக்கும்.

        புகைப்பிடிக்காத அந்த ஆட்டு இடையர் ஒரு துணிப்பையை எடுத்து வந்தார். மேசையில் வைத்து அதைப் பிரித்தார்.

                                            -வளரும்...
'உலகம் நாளை

உடைந்து சிதறுமென 

அறிய நேர்ந்தாலும் நடுவேன் என் 

ஆப்பிள் மரத்தை.'

-Martin Luther

('Even if I knew that tomorrow the world would

go to pieces, I would still plant my apple tree.')

நன்றி: திரு கே.பி. ஜனா...http://kbjana.blogspot.com/2013/11/22.html

Share on:





















பட்டி மன்றம்

பாட்டி செத்த பத்தாம் வினாடி
பெரிய குழப்பம்
பிணத்தை
எரிப்பதா புதைப்பதா என்று
உள்ளூர்ப் புலவர் ஓடி வந்தார்
பட்டிமன்றம் வைத்துப்
பார்த்தால் என்ன என்று.

நவயுகக் காதல்

உனக்கும் எனக்கும்
ஒரே ஊர்
வாசுதேவநல்லூர்...

நீயும் நானும்
ஒரே மதம்
திருநெல்வேலிச்
சைவப் பிள்ளைமார்
வகுப்பும் கூட...

உன்றன் தந்தையும்
என்றன் தந்தையும்
சொந்த ஊர்க்காரர்கள்
மைத்துனன்மார்கள்

எனவே
செம்புலப் பெயல்நீர்போல
அன்புடை நெஞ்சம் தாம்கலந்தனவே.

இவ்விரண்டு கவிதைகளும் கவிஞர் மீராவை பரவலாக அறிந்தவர்களால் அடையாளப்படுத்தப்படுவது. இக்கவிதைகள் அடங்கிய ‘ஊசிகள்' தொகுப்பில் அடையாளம் காட்டாத பல அரசியல் கவிதைகள் கூட அடங்கியுள்ளன.1974-ல் முதற்பதிப்பு பெற்ற ‘ஊசிகள்' 2008-க்குள் எட்டு பதிப்பை எட்டியிருப்பதைக் காணும்போது இவை பரவலாக வாசிக்கப் பட்டிருக்கின்றன என்பது மட்டும் புரிகிறது.

“சமுதாயத்தின் நோய்க்கிருமிகளைப் பார்க்கும்போது சங்கடப்படுகிறேன். கோபமும் வருகிறது. ஒரு சுகாதாரமான சமுதாய ஆசைதான் இந்த ‘ஊசிகளை' உருவாக்கியது. என்னைப் பொறுத்தவரை இலக்கிய உப்பரிகையில் உலாவுவதை விடச் சமுதாய நடைபாதைகளைச் செப்பனிடுவதையே முக்கியமாகக் கருதுகிறேன்” எனும் மீராவின் விளக்கம் நல்ல துலக்கம் நமக்கெல்லாம்.

இந்நூலை அணிந்துரைத்த எஸ்.ஏ. பெருமாள் சொல்வது போல், கவிஞர் எதைப் பற்றி எழுதினார் என்பதுதான் முக்கியம். கவிதையை ஒரு கைவாளாய் பிரயோகித்தவர்கள் தமிழில் வெகு அபூர்வம். அவர்களில் மீராவுக்கு முக்கிய இடமுண்டு.

        கீழ்வரும் கவிதைகளும் ‘ஊசிகள்' தொகுப்பில் தான் உள்ளன. என்றென்றைக்குமாக.
Share on:
கவிதை அப்பாவுக்கொரு செல்ல மகளின் கவிதாஞ்சலி... 
      மரபுக் கவிதை மயங்கிய பொழுதில் புதுக்கணித சூத்திரமாய் புதுக்கவிதைப் பூங்காவில் பூத்திட்ட புதுமைக் கவி...
        எண்பதுகளில் மட்டுமல்ல, என்றென்றும் நம் நினைவில் இனித்திடும் ‘கனவுகள்+கற்பனைகள்=காகிதங்கள்' படைத்த எழுச்சிக் கவி...
 களம்பல கண்டவர், கவிதைத் திறத்தால் உளம்பல வென்றவர், உயர்வாய்த் தளம்பல கண்டவர், பதிப்புக் கலைக்கு முகமென நின்றவர், சாகாத வானம், சரியாத பேரிமயம், நேர்(மை)க் கோடாய் நின்ற நெருப்பு, சிவகங்கைக் கொரு சிறப்பு... கவிஞர் மீரா!(நன்றி: ‘ஆனந்தஜோதி'-மார்ச்,2012, பேரா. இரா.பாஸ்கரன்)
         
       இப்பூவுலகில் வாழப்பிறந்த அனைவரும் ஏதேனுமொருநாள் புறப்பட்ட இடத்துக்கு போய்ச்சேர வேண்டியுள்ளது உலக நியதி. 2002-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1-ம் தேதி  கவிஞர் மீராவை காலன் களவாண்டு சென்றான். அவரை மைய அச்சாய்க் கொண்டு சுழன்ற இலக்கிய உலகும், இல்லற உறவுகளும் செய்வதறியாமல் பதைத்து பரிதவித்தனர். அழுதும் அரற்றியும், அவர் பெருமைகளைப் பேசிப் புளங்ககித்தும், நினைவெழும்போதெல்லாம் நின்று கலங்கியும் ஆற்றவொண்ணா வேதனையில் ஆழ்ந்தனர்.
         
       எதிரெதிர் துருவங்கள் ஈர்க்கப்படுவது எத்துணை சத்தியமோ அத்தகையதே ஆண் குழந்தைக்கு அம்மா மேல் அதீத பிரியமும் பெண் குழந்தைக்கு அப்பா மேல் அளவற்ற பாசமும் வேர்விட்டிருப்பது.
       
       
கவிஞர் செல்மா தன் கணவர் மற்றும் குழந்தைகளுடன் 

மீராவின் செல்ல மகள் ‘செல்மா' என்று தந்தையால் சீராட்டப்பட்ட கண்மணியும் இதற்கு விதிவிலக்கல்ல.
Share on:
பண்டிகைகளில் வாழ்த்துப் பரிமாற்றம் என்பது பழகிப் போனதொரு சம்பிரதாயம் ஆகிவிட்டது . கிருஷ்ண ஜெயந்திக்கும், விநாயக சதுர்த்திக்கும், விஜய தசமிக்கும் கூட வாழ்த்து சொல்லிக்கொள்ளும் கூத்தும் பார்க்க முடிகிறது.

சமீபத்திய ஓணத்துக்கு ஒருவாரம் முன்பிருந்தே 'சொல்லிடணும், சொல்லிடணும்' என்றிருந்தும் என்னால் ஓணம் முடிந்து மூன்று நாள் கடந்து தான் சொல்ல வாய்த்தது ஒருவருக்கு... அவர்... நம் கிருஷ்ணப்ரியா!!

தொலைபேசி மணி ஒலித்து தேய்ந்தது. சில மணித் துளிகளில் அவரே தொடர்புக்கு வந்தார். 
"ஒரு வாரமா உங்க நினைவுதான்... மகள் கல்லூரியில் ஓணம் கொண்டாட்டம் பற்றி ... மலர்க் கோலமிடுதலில் அவங்க அணி வெற்றி பெற்றது பற்றி, சக தோழிகளின் 'திருவாதிரைக் களி' ஆட்டம் பற்றி எல்லாம் கேள்விப் பட்டபோது, உங்க நூல் வெளியீட்டு விழாவுக்காக உங்க வீட்டுக்கு வந்து தங்கியிருந்த போது உறவினர்களுடன் 'திருவாதிரைக் களி' பாடி ஆடிக் காண்பித்ததெல்லாம் நினைத்துக் கொண்டேன்... 
பண்டிகையெல்லாம் நல்லாப் போச்சா?"

"நீங்க லேட்டா சொல்றதுக்கு வருத்தப் பட வேண்டாம். ரெண்டு மாசத்துக்கு முன்பே சொந்த ஊருக்கு பண்டிகைக்குப் போக ட்ரெய்ன் டிக்கெட் புக் பண்ணியும் நான் மட்டும் நண்பர் ஜே.டி.ஆர். மகள் திருமணத்துக்காக சென்னையும், கணவர், மகன்கள் மட்டும் சொந்த ஊருக்கும் போகும்படி ஆச்சு."

"அடடா... பண்டிகையும் அதுவுமா குடும்பத்தோடு இல்லாம... ஓணச் சாப்பாட்டை வேற மிஸ் பண்ணியிருக்கீங்க "

"கல்யாணப் பொண்ணுக்கு ரொம்ப சந்தோஷம் ... அவ விருப்பத்தை தட்ட முடியாமத் தான், டிக்கெட் கேன்சல் பண்ணாம 'இன்னொரு நாள் கல்யாணம் விசாரிச்சுக்கலாம்' என்ற மனோஜ் கிட்ட 'நான் கல்யாணத்துக்கு போறேன்'ன்னு அறிவிச்சுட்டேன்." 

("தனக்கு சரியென்று பட்டதை சொல்லவும் செய்யவும்  தயங்காதவராச்சே நீங்க...!")

"காலைல கல்யாண வீட்டில் டிபன் சாப்பிட்டு பஸ் ஏறின நான், இரவு  வரை காய்ந்து வந்து சேர்ந்தேன் நிலா. வித்தியாசமான பண்டிகை அனுபவம் இந்தமுறை எனக்கு. ஆனா, வீட்டில் அம்மா எனக்காக அவியல், பாயாசம், மற்ற ஐட்டமெல்லாம் எடுத்து வைத்திருந்தாங்க. எடுத்துட்டு வந்து தனியா எங்க வீட்டில் உட்கார்ந்து இரவு சாப்பிட்டேன்."

"வருஷ பண்டிகை ஆச்சே... சார் சொன்ன மாதிரி சேர்ந்து கொண்டாடி இருக்கலாம் தானே...?"

"பண்டிகை அடுத்த வருஷமும் வரும்... அந்தப் பொண்ணு கல்யாணத்துல இப்பதானே கலந்துக்க முடியும்...?!" 

"அது சரி! உங்க தெளிவு எனக்கு ரொம்பப்  பிடிக்கும் ப்ரியா!"





ஆமா... இந்தப் படத்துல மனோஜ் எங்களுக்கு 'ஹாய்' சொல்றாரா? இல்லை... உங்களுக்கு கொம்பு வைக்கிறாரா?

 ரெண்டு பேரும் இந்தப் படத்தில் 8-10 வயசுக் குழந்தைகளாக இருக்கீங்க... அச்சு அசலா!

உங்க கவிழ்ந்த முகத்தில் இத்தனை வெட்கத்தை, உடல்மொழியின் பெருமிதத்தை ரசிக்கிறேன் ப்ரியா...
                                   


                                 வாழ்க! வளமுடன்.. நலமுடன்!! 
                             விஷ்ணு, விஜய் உடன்!!!

( ப்ரியா... நீங்க சொன்னமாதிரி ஒரு பதிவு தேத்திட்டேனா.... உங்க வீட்டுப் பசுவை எங்க தென்னை மரத்தில் கட்டியாச்சு. ஆனா, நம்ம உரையாடலில் ஒரு நல்ல கதைக்கரு இருக்குப்பா... அது உங்க சாய்ஸ்... ஓகே?!)
Share on:
திருமதி.கோமளா பத்மநாபன் , M .A ., M.Ed.
(எனதினிய ஆசிரியர்களுள் முதன்மையாய்  இவர்.பின்னொரு நாளில் இவர் பற்றிய நினைவுகளை 'அசை' போடுவேன் உங்களுடன்)

குலனரு டெய்வங் கொள்கை மேன்மை

                                 கலைபயி றெளிவு கட்டுரை வன்மை
                                 நிலமலை நிறைகோன் மலர்நிகர் மாட்சியும்
                                 உலகிய லறிவோ டுயர்குண மினையவும்
                                அமைபவ னூலுரை யாசிரி யன்னே. (26)
                                                 
                                                                        -பவணந்தியார், நன்னூல்.
தெளிவுரை: 
       நற்குடிப் பிறப்பு, அருள், இறைவழிபாடு என்ற இவற்றால் அடைந்த மேன்மையும், பல நூல்களில் பழகிய தெளிவும், நூலின் பொருளை மாணாக்கர் எளிதில் உணரும் வண்ணம் எடுத்துச் சொல்லும் வன்மையும், நிலம், மலை, துலாக்கோல், மலர் போன்ற குணங்களும், உலக நடையை அறியும் அறிவும், இவை போன்ற உயர்ந்த குணங்கள் பிறவும் நிரம்ப உடையவர் ஆசிரியர் எனப்படுவர்.

(நிலத்தின் மாண்பு)
தெரிவரும் பெருமையுந் திண்மையும் பொறையும்
பருவ முயற்சி யளவிற் பயத்தலும்
மருவிய நன்னில மாண்பா கும்மே. (27)

தெளிவுரை:
     மற்றவரால் அறியப்படாத வடிவத்தின் பெருமையும், தன் மேல் பொருந்திய சுமையால் கலங்காத வன்மையும், தன்னைச் சார்ந்த மக்கள் தோண்டுவது போன்ற குற்றங்களைச் செய்தாலும் பொறுக்கும் பொறுமையும்,பருவ காலத்தில் உழவர் செய்யும் முயற்சியின் அளவுக்கு ஏற்ப பயனைத் தருதலும் நல்ல நிலத்தின் சிறந்த குணங்களாகும்.

 (மலையின் மாண்பு)
     அளக்க லாகா வளவும் பொருளும்
      துளக்க லாகா நிலையுந் தோற்றமும்
      வறப்பினும் வளந்தரும் வண்மையு மலைக்கே. (28)

தெளிவுரை:
     அளவிட முடியாத வடிவத்தின் அளவும், அளவிட முடியாத பலவகைப் பொருளும், எத்தனை வன்மையுடையவராலும் அசைக்கப்படாத வடிவத்தின் நிலையம், நெடுந்தொலைவில் உள்ளவராலும் காணப்படும் உயர்வும், மழை பெய்யாமல் வறண்ட காலத்திலும் தன்னைச் சேர்ந்த உயிர்களுக்கு நீர் வளத்தைக் கொடுக்கும் கொடையும் மலைக்குப் பொருந்திய குணங்களாகும்.

     (நிறைகோல் மாண்பு)
      ஐயந் தீரப் பொருளை யுணர்த்தலும்
      மெய்ந்நடு நிலையு மிகுநிறை கோற்கே. (29)

தெளிவுரை:
     நிறுக்கப்பட்ட பொருளின் அளவை ஐயம் நீங்கக் காட்டுதல், உண்மை பெற இரு தட்டுகளுக்கும் நடுவாக நிற்றல் ஆகியவை துலாக்கோலின் குணங்களாம்.

      (மலரின் மாண்பு)
       மங்கல மாகி யின்றி யமையா
       தியாவரு மகிழ்ந்து மேற்கொள மெல்கிப்
       பொழுதின் முகமலர் வுடையது பூவே. (30)

தெளிவுரை:
      நல்வினைகளுக்கு உரிய பொருளாகி, ஏதொன்றும் தான் இன்றி முடியாததாகி, கண்டவர் அனைவரும் மகிழ்ந்து தன்னைச் சூடிக் கொள்ள மென்மையான குணம் உடையதாகிப் பூப்பதற்கு உரிய காலத்திலே முகம் விரிதலை உடையது பூவாகும்.

       அகத்தியம், தொல்காப்பியத்துக்கு அடுத்ததாய் எழுந்தது பவனந்தியாரின் நன்னூல். மேலிரண்டினும் எளிமையாய் உள்ளதுமாம்.  800 ஆண்டுகளுக்கு முன் சொன்ன ஆசிரியர் இலக்கணம் பொருந்த நம்மை அறிவேற்றும ஆசிரியர்களை வாழ்த்தி வணங்குவோம்!

Share on:
திருக்குறள் நினைவாற்றல் வழிகாட்டி - 4


     
         1330 குறட்பாக்களும் 71 எழுத்துக்களில் தொடங்குகின்றன; 47 எழுத்துக்களில் முடிகின்றன என கடந்த பதிவில் பார்த்தோம்.

       இதிலும் நுட்பமாக ஆராய்ந்தால், க, கு, கை, சி, சு, தி, தீ, து, பு, ம, வா, வி, வை ஆகிய 13 எழுத்துக்களில் மட்டுமே தொடங்கும் குறட்பாக்களும் முடியும் குறட்பாக்களும் காணக் கிடைக்கிறது.

       அதே போல், ஞா(484), பீ(475), போ(693), மை(838), மோ(90) இவ்வெழுத்தில் தொடங்கும் குறட்பா ஒவ்வொன்று மட்டுமே உள்ளது. அடைப்புக் குறிக்குள் உள்ளது குறளின் வரிசையெண்.

        முதலெழுத்தும் முடிவெழுத்தும் ஒன்றாய் அமைந்த குறட்பாக்கள் 6 உள்ளது. நான்கு பொருட்பாலிலும்(391, 544, 604, 1025), இரண்டு காமத்துப் பாலிலும் (1187, 1218)இடம் பெற்றுள்ளன.

கடைசிச் சீர்:
1330 குறட்பாக்களும் 327 சீர்களில் முடிகின்றன.
உலகு, எனின், வார், மாட்டு, அற்று, விடும், பிற, துணை, இல், உடைத்து, படும், கடை, பெறின், வரும், தவர், இனிது, தரும், சிறப்பு, அன்று, இன்று, பயன், உண்டு, நட்பு, கெடும், விடல், செயின், அறிந்து, கண், பவர், அவர், செருக்கு, அகத்து, எனல், உள, இடத்து, பவர்க்கு, நகும், பலர், சுடும், மிகும் ஆகிய 40 சீர்கள் கடைசிச் சீர்களாக முப்பாலிலும் இடம் பெற்றுள்ளன.

        ஏறு, அரசு, ஒளி, தக, செவி, அரண், இறைக்கு, நூல், நிலை, கயிறு, களிறு, தெளிவு, சோர்வு, நன்கு, வெளிறு, முறை, குடி, கோல், தொக்கு, நேர், வேந்து, பெயல், அரம், ஒற்று, மறை, மற்று, உழை, மேல், அமைச்சு, கடன், பணிந்து, பண்பு, தூது, முகம், செறிவு, இழுக்கு, நாடு, உறுப்பு, ஐந்து, சென்று, படைக்கு, எஃகு, எடுத்து, காப்பு, கொளின், துப்பு, பகைக்கு, செறின், தனக்கு, நணித்து, எளிது, சுளி, சூது, பசித்து, உயர்ந்து, பணிவு, வியந்து, தூண், சால்பு, வழக்கு, ஒப்பு, இருள், பிறர், நிரப்பு, கீழ், கலன், இலர் ஆகிய 67 சீர்கள் கடைசிச் சீர்களாக பொருட்பாலில் மட்டும் இடம் பெற்றுள்ளன.

        கட்டு, துகில், பீடு, தந்து, நீர், குறிப்பு, பறை, மீன், மதி, பழம், இடம், குணம், ஊர், வலி, மடல், புணை, துயர், மருண்டு, இழந்து, புணர்வு, தவறு, வளை, பிரிவு, தீ, உளேன், இலேன், இரா, பசப்பு, கணி, அளி, வரல், நினைந்து, நொந்து, உரைத்து, நுதல், கண்டு, விரல், மார்பு, உப்பு, கதவு ஆகிய 40 சீர்கள் கடைசிச் சீர்களாக காமத்துப் பாலில் மட்டும் இடம் பெற்றுள்ளன.

        ‘இல்' ஈற்றுச் சீராக 44 இடங்களில் வருகிறது.
‘படும்' 42 இடங்களிலும்,
‘தரும்' 37 இடங்களிலும்,
‘கெடும்' 38 இடங்களிலும்,
‘உலகு' 25 இடங்களிலும்,
‘செயல்' 22 இடங்களிலும்,
‘தலை' 21 இடங்களிலும்,
‘கொளல்' 20 இடங்களிலும் ஈற்றுச் சீராக வந்துள்ளன.

நூலாசிரியர் அ.ஆறுமுகம் அவர்களின் குறிப்புப்படி, அவரது இளமைப் பருவத்தில் திருக்குறள் பயிலும் ஆர்வம் இருப்பினும், தனது ஆசிரியர் பணிக்காலத்தில் திருக்குறள் பதின்கவனகர்- நினைவுக்கலையேந்தல் பெ.இராமையா அவர்களது தொடர்பும், பல நிகழ்ச்சிகளுக்கு அவருடன் செல்லும் வாய்ப்புமே பெரும் தூண்டுகோலாக இருந்திருக்கிறது. புறக்கண்ணை இழந்த திரு. இராமையா அவர்கள் இத்தகைய ஆற்றலைப் பெற்றிருக்கும் போது இருகண்களும் உள்ள நாம் இதனைப் பெற முடியாதா என்ற எண்ணமே உறுதிக்கான அடிப்படையாகி இருக்கிறது. திரு. அ.ஆறுமுகம் தனது 40 வயதில் ஐந்து மாதங்களுக்குள் திருக்குறள் முழுமையும் நினைவில் நிறுத்த் வெற்றிபெற்ற பட்டறிவே இந்நூலெழுதத் துணைநின்றிருக்கிறது.

        “எண்ணிய எண்ணியாங் கெய்துப எண்ணியர்
திண்ணிய ராகப் பெறின்” (666)




நூற் பெயர்: திருக்குறள் நினைவாற்றல் வழிகாட்டி
ஆசிரியர்:   அ. ஆறுமுகம்,

வெளியீடு: 
பாவேந்தர் பதிப்பகம், ‘சீரகம்', திருமழபாடி, திருச்சி-621 851.

கொசுறு:




Share on:
http://nilaamagal.blogspot.in/2013/07/blog-post_10.html

http://nilaamagal.blogspot.in/2013/07/blog-post.html

திருக்குறள் நினைவாற்றல் வழிகாட்டி- 3

எட்டாம் படி:
உங்களுடைய திருக்குறள் கையேட்டில் திருக்குறள் முதற்சீரும் இறுதிச் சீரும் எழுதியுள்ளீர்கள். அவற்றிலிருந்து ‘அ' முதல் ஒவ்வொரு எழுத்திலும் தொடங்கும் குறட்பாக்கள் எத்தனை என தனித்தனியே கணக்கிடுங்கள். அவ்வாறே முடியும் எழுத்தையும் கணக்கிடுங்கள். தொடங்கும் எழுத்தும் முடியும் எழுத்தும் ஒன்றாகவே உள்ள குறட்பாக்கள் எத்தனையெனக் கணக்கிடுங்கள்.
திருக்குறள் நூலில் கொடுக்கப்பட்டுள்ள அகரவரிசையைப் பார்க்க வேண்டாம். நம் உழைப்பினால் பெறும் ஆற்றல் தான் எப்போதும் நிலைத்து நிற்கும். எழுத்தை வைத்துக் கணக்கிடுவது போல் சொல்லை வைத்துக் கணக்கிடுவதும் நமது நினைவாற்றலை மிகுதிப் படுத்தும். சான்றாக, ‘உலகு' என முடியும் குறட்பாக்கள், ‘படும்' என முடியும் குறட்பாக்கள் போன்று முடிகின்ற சொற்களை வைத்துக் கணக்கிட்டுக் கொள்ளலாம்.

       1330 குறட்பாக்களும் 71 எழுத்துக்களில் தொடங்குகின்றன. 47 எழுத்துக்களில் முடிகின்றன.

திருக்குறட்பாக்கள் தொடங்கும் எழுத்துக்கள்: 

அ- 157, ஆ- 23, இ- 113, ஈ-8, உ- 81, ஊ- 21, எ- 45, ஏ- 9, ஐ- 4, ஒ-40, ஓ-6

க- 77, கா-28, கு-28, கூ-8, கெ-7, கே-7, கை-3, கொ-18, கோ-2

ச-3, சா-5, சி-18, சீ-4, சு-5, சூ-3, செ-37, சொ-7,

ஞா-1,

த-35, தா-9, தி- 6, தீ- 6, து-21, தூ-4, தெ-9, தே-5, தொ-10, தோ-1,

ந-54, நா-16, நி-18, நீ-4, நு-5, நூ-1, நெ-9, நோ-7,

ப-62, பா-3, பி-15, பீ-1, பு-20, பெ-19, பே-9, பொ-26, போ-1

ம-59, மா-4, மி-4, மு-20, மே-2, மை-1, மோ-1,

யா-10,

வ-28, வா-12, வி-28, வீ-6, வெ-4, வே-12, வை-2

மொத்தம்= 1330

திருக்குறட்பாக்கள் முடியும் எழுத்துக்கள்:

க-1, கு-97, கை-7,  சி-1, சு-20, சை-2,

ட-1, டி-6, டு-39, டை-27,  ணி-3, ணை-13, ண்-29,

தி-3, தீ-1, து-160, பு-58,  ம-1, ம்-181,  ய்-9,

ரா-2, ரி-3, ரு-6, ரை-2, ர்-127,

ல-2, லி-1, லை-25, ல்-152, வா-2, வி-1, வு-31, வை-4,

ழி-10, ழை-4, ழ்-6, ள-6, ளி-5, ளை-2, ள்-24,

ற-12, றி-3, று-101, றை-11, னி-1, னை-10, ன்-115

மொத்தம்=1330

ஒன்பதாம் படி:
இப்படியாக திருக்குறள் முழுவதையும் பல்வேறு வகைகளில் பகுத்து நினைவில் வைத்துக் கொண்டபின், திருக்குறள் வாழ்வியலுரையை அடிப்படையாகக் கொண்டு குறளுக்குரிய பொருளை ஒருமுறை படித்தாலே மனதில் பதிந்து விடும். குறளைக் கூறியவுடன் பொருள் தானே நினைவுக்கு வருமளவு பயிற்சி செய்ய வேண்டும். இப்பயிற்சியினால் பொருள் கூறினால் குறள் கூறவும், குறள் கூறினால் பொருள் கூறவும் இயலும்!

பத்தாம் படி:
பொருளுடன் திருக்குறள் முழுமையும் அறிந்தாயிற்று. இனி, திருக்குறளில் பயின்று வரும் உவமைகள் அணிகள் இவற்றையும் தெரிந்து வைத்திருந்தால் இலக்கண அடிப்படையில் கேட்டாலும் பதில் தரலாம். இதற்கு சென்னைப் பல்கலைக் கழக வெளியீடான “திருக்குறள் அணிநலம்” என்ற நூல் பயனாகும்.
இவ்வாறு பல்லாற்றானும் ஓதி உணர்ந்த திருக்குறள் நெறியை வாழ்வியல் நெறியாக ஏற்றுப் பின்பற்றுதல் மிக நன்று! சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லியை வள்ளுவர் வழியில் நீக்கலாம்! யாதொன்றும் தீமையில்லா வாய்மையினை பின்பற்றலாம்! கசடறக் கற்றபின் அதற்குத் தக நின்று மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாகத் திகழலாம்!

வயது ஒரு தடையில்லை:

        ஒவ்வொரு நாளும் காலை மாலை அரை மணி நேரம் ஒதுக்கினாலே போதும், முறையான பயனைப் பெறலாம். நம் பயண நேரங்களில் மனதுள் உருப்போட்டவற்றை நினைவூட்டி பயிற்சி பெறலாம். இளையோர் மட்டுமின்றி எவ்வயதினரும் முயன்றால் முடியாதது ஏது?!

இதனால் என்ன பயன்?

         வாழ்க்கையில் ஏற்படும் சிக்கல்களையெல்லாம் தீர்க்க திருவள்ளுவர் தோன்றாத் துணையாவார் நமக்கு. மன உறுதியும் நல்லியல்புகளும் வளரும். எத்தகைய கருத்துகளையும் நினைவில் இருத்தும் வலிமை வளர்கிறது. திருக்குறள் வழி நடக்க வேண்டுமென்ற உறுதி ஏற்பட்டு அவ்வாறே செயல்படவும் தூண்டுகிறது. பிற இலக்கியங்களை எளிதில் புரிந்து கொள்ளவும் நினைவில் இருத்திக் கொள்ளவும் துணை புரிகிறது.

(இன்னூலின் எஞ்சிய சிறப்புத் தகவல்கள் அடுத்த பதிவில்)

நூற் பெயர்: திருக்குறள் நினைவாற்றல் வழிகாட்டி
ஆசிரியர்:   அ. ஆறுமுகம்,

வெளியீடு: 
பாவேந்தர் பதிப்பகம், ‘சீரகம்', திருமழபாடி, திருச்சி-621 851.

Share on:
  • ← Previous post
  • Next Post →

  • கால்களை சிறகுகளாக்கும் எத்தனங்கள்.
  • உதிரும் சிறகுகளை சேகரிக்கும் குழந்தைமை.
நிலாமகள்

நிலாமகள்

View My Complete Profile
Facebook Gplus RSS

Followers


Labels
  • அசை (16)
  • அறிந்தும் / அறியாமலும் (10)
  • கவிதை (61)
  • சிறுகதை (9)
  • சுவையான குறிப்புகள் (1)
  • செல்லத்தின் செல்லம் (6)
  • தாய் மடி (2)
  • திருக்குறள் நினைவாற்றல் வழிகாட்டி (4)
  • தொடர் பதிவு (1)
  • நூல் மதிப்புரை (1)
  • நேர்காணல் (3)
  • பகிர்தல் (51)
  • படித்ததில் பிடித்தது (63)
  • மரம் வளர்த்த மனிதனின் கதை... (4)
  • மருத்துவம் (12)
  • வாழ்த்து (14)

Popular Posts

  • வில்வம் ...மருத்துவ குணங்கள்:(பகுதி - 3)
             வில்வம் பற்றிய அறிமுகம்:(அறியாதவர்கள் அடையாளம் காண)         இலையுதிர் மரவகையைச் சார்ந்த வில்வம் எல்லா இடங்களிலும் வளரும் ...
  • பல் வலியா ?
    நம் உடம்பில் ஒன்றுக்கு இரண்டாக கண், காது, கை, கால், சிறுநீரகம், சினைப்பை அல்லது விதைப்பை போன்றவை இருக்க பல்லை மட்டும் 32 ஆக படைத்ததன் ...
  • மலை வேம்பு -சில தகவல்கள்
    மலைவேம்பு (melia dubia)        மலைவேம்பு மிக வேகமாக வளரும் விலை மதிப்பு மிக்க பன்முகப் பலன் தரும் அரிய மரவகைகளில் ஒன்று. ப்ளைவுட்,ரெடிமேட்...
  • அம்மை... சில தகவல்கள்
              பேரச்சம் விளைவித்த அம்மை நோய்க்கு எதிரான ஒரு தடுப்பு நடவடிக்கையாக அம்மை குத்தும் முறையைக் கண்டுபிடித்து உலகெங்கும் பரப்பிய ஆங்கி...
  • சாகசங்கள் மீதான பேராவல்
                 குழந்தைகளை தூங்கச் செய்வது என்பது எந்த நாட்டிலும் பெரும்பான்மையும் அம்மாக்களின் பிரதான கடமையாகவே இருக்கும். பிறந்து சில ம...
  • மரம் வளர்த்த மனிதனின் கதை ... இறுதிப் பகுதி
    தொடக்கம்:  http://nilaamagal.blogspot.in/2013/10/blog-post_29.html பகுதி-1:  http://nilaamagal.blogspot.in/2013/10/1.html பகுதி-2:  htt...
  • பொடுகு எவ்விதம் உருவாகிறது?
           நம் மண்டையில் அன்றாடம் இறக்கும் செல்கள் தோலின் மேற்புறத்தில் உள்ள எபிடெர்மிஸின் (Epidermis) ஆழ் அடுக்கிலிருந்து இடைவிடாது வெளித்தள்ள...
  • ஞிமிறென இன்புறு
           'அந்த காலமெல்லாம்...' என்று பெருமூச்சு விடத்தொடங்கினாலே வயசானவங்க லிஸ்ட்ல சேர்த்துடறாங்க இன்றைய இளைஞர்கள். தன்  குழந்...
  • மரங்களின் மக(ரு)த்துவம்-2 (வேப்பமரம்)
    வேம்பு:  சிவன் கோயில் வில்வ மரம் போல் அம்மன் கோயில்களில் அவசியமிருக்கும் மரம் வேப்பமரம். இயற்கையின் வரப்பிரசாதமான இம்மரத்தின் வேர், பட்டை,...

Blog Archive

  • ►  2020 (1)
    • ►  March (1)
  • ►  2019 (1)
    • ►  August (1)
  • ►  2018 (9)
    • ►  June (2)
    • ►  May (1)
    • ►  March (2)
    • ►  February (1)
    • ►  January (3)
  • ►  2017 (18)
    • ►  November (2)
    • ►  October (4)
    • ►  September (2)
    • ►  August (2)
    • ►  July (1)
    • ►  March (1)
    • ►  February (6)
  • ►  2016 (9)
    • ►  December (1)
    • ►  November (2)
    • ►  July (3)
    • ►  April (3)
  • ►  2015 (21)
    • ►  October (1)
    • ►  September (2)
    • ►  August (4)
    • ►  July (1)
    • ►  June (2)
    • ►  May (2)
    • ►  April (4)
    • ►  March (2)
    • ►  February (1)
    • ►  January (2)
  • ►  2014 (24)
    • ►  December (3)
    • ►  November (5)
    • ►  October (1)
    • ►  September (3)
    • ►  August (2)
    • ►  May (1)
    • ►  April (2)
    • ►  March (3)
    • ►  February (2)
    • ►  January (2)
  • ▼  2013 (36)
    • ▼  December (3)
      • மனிதர்களைக் கற்றுக் கொண்டு போகிறவன்
      • பொடுகு எவ்விதம் உருவாகிறது?
      • இருக்கிற சிக்கல்களில் ‘முடி'யுமா?
    • ►  November (2)
      • நவம்பர் மாத மழையில் ...
      • மரம் வளர்த்த மனிதனின் கதை ... இறுதிப் பகுதி
    • ►  October (4)
      • மரம் வளர்த்த மனிதனின் கதை... பகுதி-2
      • மரம் வளர்த்த மனிதனின் கதை... தொடர்ச்சி...1
      • நம் சந்ததியினருக்கு நம்மாலானது...
      • அன்று சொன்னவை அர்த்தம் உள்ளவை
    • ►  September (3)
      • மீள்வாசிப்பில் ஒரு மறு மதிப்பீடு
      • ஓணப் பூவில் எஞ்சிய நறுமணம்
      • நல்லாசிரியர்!
    • ►  August (2)
      • நமக்கும் கிடைக்கும்
      • தொடக்கமும், முடிவும்...
    • ►  July (7)
    • ►  June (3)
    • ►  May (3)
    • ►  April (4)
    • ►  March (1)
    • ►  February (2)
    • ►  January (2)
  • ►  2012 (35)
    • ►  December (3)
    • ►  November (1)
    • ►  October (3)
    • ►  September (3)
    • ►  August (5)
    • ►  July (2)
    • ►  June (3)
    • ►  May (3)
    • ►  April (2)
    • ►  March (2)
    • ►  February (4)
    • ►  January (4)
  • ►  2011 (49)
    • ►  December (4)
    • ►  November (3)
    • ►  October (4)
    • ►  September (1)
    • ►  August (3)
    • ►  July (8)
    • ►  June (6)
    • ►  May (5)
    • ►  April (5)
    • ►  March (5)
    • ►  February (3)
    • ►  January (2)
  • ►  2010 (37)
    • ►  December (7)
    • ►  November (6)
    • ►  October (6)
    • ►  September (6)
    • ►  August (4)
    • ►  July (5)
    • ►  June (3)

வலைப்பூ உலகில் எங்க குடும்பம்

  • பாரதிக்குமார்
  • மதுமிதா
  • சிபிக்குமார்

போக...வர...

  • சிவகுமாரன் கவிதைகள்
    கபீரும் நானும் 55
    1 month ago
  • கீதமஞ்சரி
    தித்திக்குதே (3) இலுப்பை
    1 month ago
  • அக்ஷ்ய பாத்ரம்
    இலையுதிர்காலத்து வண்ணங்கள்
    1 month ago
  • திண்டுக்கல் தனபாலன்
    அதிகார எழுத்துக்கள் அனைத்தும் குறில் / நெடில் - பகுதி 2
    4 months ago
  • முத்துச்சிதறல்
    குளோபல் வில்லேஜ்-2023-2024!!!
    7 months ago
  • ஹரணி பக்கங்கள்.......
    1 year ago
  • சமவெளி
    டில்லி தமிழ்ச் சங்கம் - 23-02-2017
    5 years ago
  • VAI. GOPALAKRISHNAN
    நினைக்கத் தெரிந்த மனமே ... உனக்கு மறக்கத் தெரியாதா?
    5 years ago
  • CrUcifiXioN
    பூச்சிக்கடி -ஹோமியோபதியில் 100% தீர்வு ! Worm trouble
    5 years ago
  • Thanjai Kavithai
    7 years ago
  • வண்ணதாசன்
    இயல்பிலே இருக்கிறேன்
    7 years ago
  • அழியாச் சுடர்கள்
    மௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்
    7 years ago
  • வானவில் மனிதன்
    கவிக்கோ அப்துல் ரகுமான்- ஒரு அஞ்சலி
    8 years ago
  • ஊமைக்கனவுகள்
    அட! இப்படியும் எழுதலாமா?
    8 years ago
  • கோவை2தில்லி
    வண்ணங்களின் சங்கமம்!
    8 years ago
  • செம்மை வனம் | 'காட்டுக்குள் மான் தேடிப் போனால், மான் தெரியும். மான் மட்டுமே தெரியும்’ -பழங்குடிப் பழமொழி
    சிறுவர்களின் காய்ச்சல் மற்றும் தோல்நோய் குறித்து!
    8 years ago
  • ரிஷபன்
    பிச்சி
    9 years ago
  • அடர் கருப்பு
    யார் இந்த அயோத்திதாசர் ? 1845-1914
    9 years ago
  • சைக்கிள்
    இருள் வெளிச்சம்
    9 years ago
  • வட்டங்களில் சுழலுது வாழ்க்கை
    இந்திய வாகனப் பதிவெண் இரகசியம்
    9 years ago
  • ∞கைகள் அள்ளிய நீர்∞
    முந்நூறு ஒட்டகங்களும், ஒரு நாயும்.
    11 years ago
  • கலர் சட்டை நாத்திகன்
    கலர் சட்டை: 1
    12 years ago
  • நசிகேத வெண்பா
    நூற்பயன், நன்றி
    13 years ago
  • இன்னுமொரு கோணம்
    எதுக்கு இவ்வளவு Build Up?
    14 years ago
  • வந்தேமாதரம்
தீதும் நன்றும் பிறர்தர வாரா!
புறநானூறு-192

கணியன் பூங்குன்றனார்

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்
குறள்:314 | அறத்துப்பால் | இன்னா செய்யாமை

திருவள்ளுவர்

அண்டத்தி னுள்ளே அளப்பரி தானவள்
பிண்டத்தி னுள்ளே பெருவெளி கண்டவள்
குண்டத்தி னுள்ளே குணம்பல காணினும்
கண்டத்தி னுள்ளே கலப்பறி யார்களே
திருமந்திரப்பாடல்

திருமூலர்

Facebook Gplus

பறத்தல் - பறத்தல் நிமித்தம்

Created By SoraTemplates | Customized By Sibhi Kumar | Distributed By Gooyaabi Templates