நடுத்தட்டு மக்கள்
இரவுபகலாக
நடுத் தெருவில் ...
கோடிகளில் வரி ஏய்க்கும்
கொம்பன்கள்
கதகதப்பாய் பஞ்சணையில்.
****************
பாடுபட்டுத் தேடிவந்த
நூறு ரூபாய் நோட்டுகளை
'படக்'கென்று கிழித்துப் போட்ட
ரெண்டு வயசு மகனின்
முதுகு பழுத்தது முதன்முறையாக.
****************
தன் சேமிப்பின் கதியறிய
கேட்கிறான் சிறு பையன்...
"நூறு ரூபாய் நோட்டெல்லாம் செல்லும் தானே?"
'நாளைய செலவுக்கு உண்டியல் இருக்கு'
வரிசை விட்டு வெளியேறுகிறாள் அம்மா.
*******************
அலைந்து திரிந்து ஓய்ந்தவர்களும்
நின்று நின்று கால் கடுத்தவர்களும்
அடுத்த வேளை சோற்றுக்கு உதவாத
கற்றைப் பணத்தை விட்டெறிய முடியாமல்
பட்டினி வயிறு பற்றியெரிய
சட்டென சபிக்கிறார்கள்...
செல்லாக் காசாக தம்மை ஆக்கியவர்களை.
*******************