அரங்கை நிறைத்தது அமைதி
ஜென் தத்துவம் பற்றிய தெளிவுரை
உனக்குள் ஒடுங்கு
மனமற்ற மனம் கொள்
ஒருகை ஓசை உணர்
வெளியேறும் போது
புரிந்தாற்போலொரு உவகை
வீட்டுள் நுழைந்ததும்
வழக்கம் போல
குழந்தைகளுக்குள் பூசல்
ஒருவருக்கொருவர்
சைகையில் சாடினர்
அடங்கு! என
கிளர்ந்த எரிச்சல் தணிந்தது என்னுள்
ஜென் குழந்தைகள்!
அழுகிய தக்காளிகள், காய்கறித் தோல்கள்,
உரித்தெரிந்த தேங்காய் நார்கள்,
விட்டெறிந்த முற்றல்கள், சொத்தைகள்,
வியாபாரிகளின் பசிதின்ற
பஜ்ஜி, போண்டா மடித்த காகிதக் குப்பைகள்
உடைந்து கிடக்கும் பழமடுக்கிய குழித் தட்டுகள்
ஏலம் போன வாழைப்பழங்களின் வெற்றுத் தார்கள்
கிழங்குகளை போர்த்தி வந்த இலைதழைக் குவியல்கள்
சணல் பிய்ந்து துண்டான கோணிகள்
கரும்புச் சக்கைகள்
கருவாட்டு மிச்சங்கள்
நொறுங்கிக் கிடந்த ஓட்டை வளையல்கள்
நகரின் ஒரு வாரத் தேவைக்கு
விலைபோன காய்கறிகள்
குளிர் சாதன பெட்டிகளில்
சவ்வுத் தாள்களுள் சத்தமின்றிப் பதுங்க
சந்தை முடிந்த மறுநாள்
மிச்சம்மீதி எச்சங்களை
கூட்டிப் பெருக்கிக் கொளுத்துகிற
துப்புறவாளனின் பசியாற்றுவதென்னவோ
பழங்கஞ்சியும் உப்பு நாரத்தையும் தான்!
எழுந்தவுடன் பெருக்கி
ஈரத்துணியால் தரை துடைத்து
தெருவடைத்துக் கோலமிட்டு
துவக்கி வைத்தாள் அம்மா காலைப் பொழுதை
தேய்த்து தேய்த்து துடைத்த
தன் காலணிகள் பளபளப்பை
தள்ளி நின்று ரசித்திருந்தார்
இராணுவத்திலிருந்து மீண்டிருந்த அப்பா.
காற்றடித்து எண்ணெய் போட்டு
முன்னும் பின்னுமாக மாய்ந்து மாய்ந்து
துடைத்து வைத்த வாகனம்
காத்திருக்கு வெளிக்கிளம்ப
இவ்வீட்டு வாண்டுப் பையனோடு
கல்லூரிப் பேருந்து
தெருமுனை திரும்பும் வரை
கண்ணாடியே கதியாக
நெளிந்து வளைந்து சீவிக் கலைத்து
ஒப்பனைகள் பலசெய்து
கற்பனையில் மிதந்திருப்பான் பெரியவன்
எட்டாச்சு ஒன்பதாச்சு எல்லாரும் போயாச்சு
பத்தோடும் அழுக்கோடும்
அம்மா மல்லுக்கட்டி நிற்க
திறந்தவுடன் பறந்துவிடும்
எத்தனிப்பில்
சிறகுகளைக் கோதிக்கொண்டிருக்கின்றன
கூண்டுக் கதவருகில் குருவிகள்...