தாய் மடி தனி சுகம்.

நம் வாழ்வில் பிறப்பும் இறப்பும் ஒரு தடவை மட்டுமே நிகழ்வதில்லை.

தாயின் கருவறையில் இருந்து பிறப்பது மட்டுமே ஒரே தடவை. வாழ்வின் 'கரு'வறைகளில் இருந்து 'வெளி'ச்சத்துக்கு பிரவேசிக்கும் சமயங்களிலும் புதிது புதிதாய் பிறக்கிறோம். ஒவ்வொரு பிறப்பிலும் பிரபஞ்ச ரகசியம் ஒவ்வொன்றாய் புரியத் தொடங்குகிறது நமக்கு.

வயிற்றில் சுமக்க முடியாத மனக்குறையை மாரிலும் தோளிலும் சுமந்து களியேறி நடைபழக்கிய தந்தையும்


கல்வியின் பொருட்டு ஆயத்தப் படுத்திய, நம் கைபிடித்து எழுதப் பழக்கிய ஆசிரியரும்,

பகிர்தலையும் கொண்டாட்டத்தையும் பழக்கிய தோழமையும்

பள்ளிப் பிராயம் நீண்டு கல்லூரிப் பருவம் துளிர்க்க, பரந்து விரியும் உலகியலும் நம்மை அவ்வப்போது புத்துயிர்த்துக் கொண்டே இருக்க,

தொடரும் திருமண பந்தம், குழந்தைப் பேறுகள், அவர்களின் வளர்நிலைகள், பொருளாதார மேம்பாடுகள் என புதுப்புது மகிழ்வுகளை, அனுபவங்களை, அறிதல்களை, தெளிதல்களை உணர்த்த வல்லதாக இத்தகைய பிறப்புகள் உள்ளன.

இறப்புக்கு வருவோம்.

உடல் தளர்ந்து மூப்பு அடைந்து நோயுற்று மூச்சு அடங்குவது மட்டுமே இறப்பல்ல.

நினைத்ததற்கு எதிர்மாறாய் நடக்கும் போது

எதிர்பாரா இடத்தில் எதிர்பாரா சூழலில் அவமானப் படும் போது

வாழ்ந்து கெட்டவன் தாங்காத வறுமையின் போது

நம் பரிபூரண அன்பின்பாற்பட்டவர் திடுதிப்பென நம்மைப் புறக்கணிக்கும் போது

'செத்துட்டேன்'...
'செத்துடலாம் போலிருந்தது'...
'சாவடிச்சுட்டான் (ள் )'...
என்றெல்லாம் சொல்கிறோமே...

அன்னையின் கருவில் உருவான இந்த உடம்பை - இயக்கும் உயிரை - உயிரின் உயிரான ஆன்மாவை செத்து செத்து பிழைக்கும் விளையாட்டுக்கு ஆட்படுத்தாமல் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளம் கூட்டும்படி அமையட்டும் நம் ஒவ்வொரு நாளும்.

கடந்த நவம்பர் -2014-ல்  மரபு வழி மருத்துவ   உலகில் பிரவேசிக்க எனக்கொரு வாய்ப்பு அமைந்தது. எனக்கொரு மறுபிறப்பென்று  சொல்லலாம் அதை.

நம்மைப் படைத்துக் காத்தருளும் பேராற்றல் நமக்களித்த உயிரை திரும்பப் பெறும்வரை குடி புகுந்த இவ்வுடலை பேணிப் பராமரிப்பது அவசியம்.

நமக்கு முன் இயற்கையோடு இயைந்த வாழ்வில் பலப்பல நுட்பங்களை உணர்ந்து நமக்கெல்லாம் பொக்கிஷமாய் விட்டுச் சென்ற ஞானியரும், யோகிகளும் சித்தர்களும்   அரூபமாய் நம்முடன் இருக்கின்றனர்.  அமுதினும் மேலான அவர்களின் வழிகாட்டலை மறுபடி கைப்பற்றுவோம்.

தாய் மடி தனி சுகம்.




15 கருத்துரைகள்
  1. முதியோர் இல்லம் பற்றியெல்லாம் அறியாத, கள்ளங்கபடமற்ற பச்சிளம் குழந்தைகள் எல்லோருக்குமே, தாய் மடி தனி சுகமே.

    //அன்னையின் கருவில் உருவான இந்த உடம்பை - இயக்கும் உயிரை - உயிரின் உயிரான ஆன்மாவை செத்து செத்து பிழைக்கும் விளையாட்டுக்கு ஆட்படுத்தாமல் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளம் கூட்டும்படி அமையட்டும் நம் ஒவ்வொரு நாளும்.//

    அருமையானதோர் பதிவுக்குப் பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  2. புதிய பட்டினத்தி ! ஆழ்ந்த கருத்து...

    ReplyDelete
  3. பேணிப் பராமரிப்பது நமது கடமைகளில் முதன்மையானது...

    ReplyDelete
  4. //அன்னையின் கருவில் உருவான இந்த உடம்பை - இயக்கும் உயிரை - உயிரின் உயிரான ஆன்மாவை செத்து செத்து பிழைக்கும் விளையாட்டுக்கு ஆட்படுத்தாமல் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளம் கூட்டும்படி அமையட்டும் நம் ஒவ்வொரு நாளும்.//

    இப்படி அமைவது நம் கையில்....

    பகிர்ந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  5. \\கடந்த நவம்பர் -2014-ல் மரபு வழி மருத்துவ உலகில் பிரவேசிக்க எனக்கொரு வாய்ப்பு அமைந்தது. எனக்கொரு மறுபிறப்பென்று சொல்லலாம் அதை.\\ நலம்தானே நிலாமகள்?

    ReplyDelete
  6. @வை.கோபாலகிருஷ்ணன்

    உடனடி வருகைக்கும் உற்சாகம் தரும் கருத்துக்கும் நன்றி சார்.

    ReplyDelete
  7. @மோகன்ஜி
    ஒற்றை வரியில் கற்றை விமர்சனம் உங்களால் சாத்தியம் ஜி.

    ReplyDelete
  8. @திண்டுக்கல் தனபாலன்

    ஆம் டிடிண்ணா ...'உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே ' என்று அறிவுறுத்திச் சென்றிருக்கின்றனரே முன்னோர்...!

    ReplyDelete
  9. @வெங்கட் நாகராஜ்

    ஆம் சகோ... நம் நலம் நம் கையில் தான்! பன்னாட்டு மருந்துக் கம்பெனிகளின் நுண் அரசியலில் அல்ல!

    ReplyDelete
  10. @கீத மஞ்சரி

    அக்கறையான விசாரிப்பு தெம்பை அளிக்கிறது. நன்றி தோழி! நோயாளராக பிரவேசித்து, கிடைத்த வாய்ப்பில் மனசின் நீண்ட நாள் தேங்கியிருந்த பெருவிருப்பத்துக்காக அருளப்பட்டது கற்கும் பேறும்.

    அறிந்ததை- புரிந்ததை -உணர்ந்ததை உங்களோடு பகிர இருக்கிறேன் 'தாய் மடி' யில்.

    ReplyDelete
  11. / கடந்த நவம்பர் -2014-ல் மரபு வழி மருத்துவ உலகில் பிரவேசிக்க எனக்கொரு வாய்ப்பு அமைந்தது. எனக்கொரு மறுபிறப்பென்று சொல்லலாம் அதை.//

    எங்கே கன நாட்களாய் காணவில்லை என்று யோசித்தேன். என்னாச்சும்மா? விபரமாய் அறிய ஆவல்.
    ’இருட்டுக்குப் பிறகு இருக்கவே இருக்கிறது வெளிச்சம்.’ வருகிற மாற்றங்களை நாம் மாற்ற முடியாது. ஆனால் அதை எதிர் கொள்ளும் ஆற்றலை நாம் வளர்த்து விடலாம் நிலா.

    ‘ஓர் அனுபவம் சேகரிக்கப்பட்டிருக்கிறது.’ அவ்வளவு தான் நிலா.

    ReplyDelete
  12. ஒவ்வொரு பிறப்பிலும் ஏதோவொரு இறப்பும் கலந்திருப்பதாக நம்புகிறேன்.

    மரபுவழி மருத்துவம் என்றால் என்ன?

    தாய்மடி சொர்க்கம்.

    ReplyDelete
  13. ஒவ்வொரு பிறப்பிலும் ஏதோவொரு இறப்பும் கலந்திருப்பதாக நம்புகிறேன்.

    மரபுவழி மருத்துவம் என்றால் என்ன?

    தாய்மடி சொர்க்கம்.

    ReplyDelete
  14. @மணிமேகலா

    மறுபிறப்பு என்ற சொல்லின் அர்த்தம் நீங்க பயப்படும்படி இல்லை தோழி. பதிவின் முதல் பாதி தெளிவாக இல்லையோ...? மரபு வழி மருத்துவம் பற்றி கேள்வியுற்று அதனைக் கற்றுக் கொள்ளும் வாய்ப்பும் அருளப் பெற்றேன். அறியாமை எனும் இருளகத்திருந்து புதுப்பித்துக் கொண்ட வெளிச்சமான அதுவும் ஒருவிதத்தில் மறுமுறை பிறப்பித்தது என்னை. என்னானதோ என்ற தங்கள் பதற்றம் நம் நட்பின் மீதான பற்றின் தாக்கம் என்பதும் எனக்கொரு இதம் தருவதாகவே.

    ReplyDelete
  15. @Durai A


    உங்க நம்பிக்கை சரிதான் அப்பாஜி. வாழ்வின் படிநிலைகளில் அடுத்தடுத்து செல்லும்போது முந்தையது காலாவதி ஆனது போலல்லாமல் அடித்தளம் போல் சில நேரம் அமைகிறது.

    பிறப்பு எனக் கருதப்படுவது ஒவ்வொன்றும் பிறிதொன்றின் இறப்பே. இறப்பு எல்லாம் மற்றொரு பிறப்பு நோக்கியே.

    மரபு வழி மருத்துவம் பற்றியே தொடரும் 'தாய்மடி' தலைப்பில் பதிவிட எண்ணம்.

    ReplyDelete