பயணத் தடை

அம்மணிக் கெழவிக்கு
எமன் ஓலையனுப்பி
ஏழெட்டு நாளாச்சு
கிளம்பற வழியாயில்ல கெழவி.

ஊர் சுத்தி திரியிற ஒத்த மவன்...
கண்ணாலம் கட்டாத கோயில் காளை
கிழவி தலைமாட்டுல நிக்க
அசலூரில் வாக்கப்பட்ட பெத்த மவள்
சேதி கேட்டு ஓடி வந்து
ஆச்சு மூணு நாளு

கெடக்கற வீட்டு மேல
கெழவிக்குப் பிடிப்போன்னு
ஈசான்ய மூலைய பேர்த்து
தண்ணியில கரைச்சு
ரெண்டு சங்கு புகட்டியாச்சு

நண்டும் சிண்டுமா
புள்ளைங்களோட தவிக்கவிட்டு
கண்ணாலமான அஞ்சாறு வருசத்துல
கண்ணை மூடுன கட்டுனவன் - அந்தக்
‘கட்டையில போனவன்'
அரூபமா கெழவிகிட்ட நின்னு
வலுக்கட்டாயமா இழுக்கறான் தன்னோட...

மசியல கெழவி
‘பாசக்'கயிறு பலமும் கொறைவில்ல
காத்திருந்து காத்திருந்து
ஊரு ஒறவுக்கு அலுத்தும் போச்சு

கெழவியாண்ட வந்த
பங்காளி மவனொருத்தன்
“நாங்க பார்த்துக்கறோம்
உம் புள்ளிங்கள...”
கூவினான் கெழவி காதுல.

வாயடைச்சிருந்த கெழவிக்கு
வார்த்தைங்க கண்ணால கசியுது
“உங்க பவிசு தெரிஞ்சுதானே
தவிக்குது மனசு!”

நன்றி: 'காக்கை சிறகினிலே ' - மே'12
10 கருத்துரைகள்
  1. வாயடைச்சிருந்த கெழவிக்கு
    வார்த்தைங்க கண்ணால கசியுது
    “உங்க பவிசு தெரிஞ்சுதானே
    தவிக்குது மனசு!”

    கடசி வரில மனசு அலண்டு போச்சு..

    ReplyDelete
  2. மனதை தொடும் கவிதை. யதார்த்தம் இப்படி தான் இருக்கிறது.

    ReplyDelete
  3. //வாயடைச்சிருந்த கெழவிக்கு
    வார்த்தைங்க கண்ணால கசியுது
    “உங்க பவிசு தெரிஞ்சுதானே
    தவிக்குது மனசு!”//

    பயணத் தடைக்கான காரணம் இந்த வரிகளில், மிக அருமையாக.
    பாராட்டுக்கள்.

    ReplyDelete
  4. மனசைத் தொடும் கவிதை!

    ReplyDelete
  5. வாயடைச்சிருந்த கெழவிக்கு
    வார்த்தைங்க கண்ணால கசியுது
    “உங்க பவிசு தெரிஞ்சுதானே
    தவிக்குது மனசு!”

    தவிக்குது மனசு!”

    ReplyDelete
  6. நிலைமைகள் இப்படித்தான் இருக்கிறது.யதார்த்தம் சுமந்த கவிதை,

    ReplyDelete
  7. முத்தாய்ப்பான வரி நல்முத்து. எளிமையான வரிகள்.. கனமான களம்.

    ReplyDelete
  8. வாவ்!!!

    உங்கள் கைவண்ணமா நிலா இது? என்ன ஒரு வசீகரக் கிராமத்து வாசம்!! கிராமத்தின் ஆத்மாவைக் கைப்பற்றி விட்டீர்கள்! எங்கே கொடுங்கள் கையை!!

    போறாளே பொண்ணுத்தாயி.... பாட்டு மனசின் பின்னணியில் இசைக்கிறது.

    / வார்த்தைங்க கண்ணால கசியுது /

    மறக்கமுடியாச் சித்திரம்!! சேகரித்து வைத்துக் கொள்கிறேன்.

    ReplyDelete
  9. தாய்மையின் பரிதவிப்பை மற்றொரு கோணத்தில் காண்கிறேன். தடுத்தாட்கொண்ட மழையில் வீடு திரும்பும் பிள்ளைகளை எண்ணி ஒரு தாயின் காத்திருப்பு, பயணத்தடையில் பிள்ளைகளை எண்ணி, வீடு திரும்ப மறுக்கும் ஒரு தாய்க்கான பயணத்தின் காத்திருப்பு. இரண்டிலும் பின்னது அதிவீர்யம். பாராட்டுகள்.

    ReplyDelete
  10. @ரிஷபன்...
    @தீபிகா(Theepika)...
    @ வை.கோபாலகிருஷ்ணன்
    @கே. பி. ஜனா...
    @இராஜராஜேஸ்வரி...
    @விமலன் ...
    @மோகன்ஜி ...
    @மணிமேகலா ...
    @கீதமஞ்சரி ...

    ஒன்ப‌து விருதுக‌ளும் ம‌ன‌ம் நிறைக்கிற‌து! மிக்க‌ ம‌கிழ்வும் நெகிழ்வுமாயிருக்கிற‌து ந‌ண்ப‌ர்க‌ளே... பேசுத‌மிழில் க‌விதைக‌ள் ப‌டைத்து என்னுள் சுவையேற்றிய‌ சுந்த‌ர்ஜிக்கும், சிவ‌குமார‌னுக்கும் ம‌ன‌மார்ந்த‌ ந‌ன்றி கூற‌வேண்டிய‌வ‌ளாகிறேன் நான்.

    ReplyDelete