எதனால் ???

http://nilaamagal.blogspot.in/2011/03/blog-post_20.html

இப்பதிவெழுதி இரண்டாண்டுகள் கடந்த நிலையில் மறுபடி இரு மரணங்கள் ...
மனம் வருத்தும் நிகழ்வுகள்...

கடந்த மாதம் வீடருகே எண்பதை நெருங்கிய ஒரு திடகாத்திர மனிதரொருவரின் திடீர் மரணம். சர்க்கரை வியாதி, இரத்த அழுத்த நோய் இரண்டுக்கும் சரிவர மாத்திரை எடுக்காத காரணத்தால் மாரடைப்பு என அறிய நேரிட்டது. நெய்வேலி  நிறுவனத்தின் பாதுகாப்புப்பிரிவில்  பணியில் இருந்து ஓய்வு பெற்றவர். தமிழார்வலர். இளமையில் மேடை நாடகங்களில் பங்கேற்றவர். மனைவி, இரு மகன்கள் (நிறுவன ஊழியர்கள்), ஒரு மகள், அனைவருக்கும் பேரக் குழந்தைகள், போதுமான பண வசதி என குறைவற்ற வாழ்வுதான்.

மகன்களும்  தத்தம் மனைவிகளை அவரது கவனிப்பில் எந்த குறையும் வைக்காமல் பராமரிக்கச் செய்திருந்தனர். உடற்பயிற்சியிலும், ருசியாக உண்டு மகிழ்வதிலும் அவருக்கு இருந்த நம்பிக்கை மாத்திரைகளில் இல்லை போலும்.

அடுத்த நாள் கசிந்த தகவலின் படி அவர் தூக்கு போட்டு இறந்திருக்கிறார்!

எதனால்??

ஏதேதோ பரப்புரைகள்.

தன் மனம்போல் வாழ்ந்தவர் தன் மரணத்தையும் தானே தீர்மானித்துக் கொண்டதை  பிடிவாதம் என்பதா? அடாவடி என்பதா? இயலாமையின் முதல் துளிர்ப்பு என்பதா? அகம்பாவத்தின் கடைசி சொட்டு என்பதா?

************

போன வாரம் சொந்த ஊருக்கு கோவில் காரியமாக செல்ல நேர்ந்தது.

எங்கப்பா வீட்டிலிருந்து மூன்று வீடு தள்ளியிருந்த இவரை விவரம் தெரிந்த நாளிலிருந்தே தெரியும் எனக்கு. கடின உழைப்பாளி. சிக்கனமானவரும் கூட. இருக்குமிடம் தெரியாது என்று சொல்வது போல் அமைதியானவர். மகள்கள் மகன்களுக்கு திருமணமாகி எல்லோரும் சுக வாழ்வு. ஒரு மகனிடம் இவரும், ஒரு மகனிடம் மனைவியும் என அடுத்தடுத்த வீட்டில்  வாழ்வு. இவருக்கும் எண்பதைக் கடந்த வயது தான். நடமாட்டத்தில், தன்னாலான உதவிகளை செய்து கொண்டு இருந்தவரே.

என்னதான் பெரிய மருமகள் கவனித்துக் கொண்டாலும், நிற்காத வயிற்றுப் போக்கில்  பக்கத்து வீட்டிலிருந்த மனைவியை  அழைத்தும் வராத மன வேகத்தில் பத்தாயத்தின் மேல் (நெல் குதிர்) இருந்த களைக் கொல்லியை குடித்து விட்டார்.

அடித்து மோதி அழுதென்ன, ஏழு மேளம், அதிர்வேட்டு என அமர்களமென்ன ... இறுதி ஊர்வலம் ஏகப் பிரமாதம்!

**************

பிறப்பு நம் கையிலில்லை. இறப்பும் தான். பிரிவின் தாளாமையாலோ, வறுமை தாங்காமலோ வாழ்வை வெறுத்து மரணம் தேடுபவர்கள் ஒருபுறமிருக்க, நோய்க்கு பயந்து அல்லது தளர்ந்து சக மனிதர்களின் ஆதரவும் அன்பும் வற்றிப் போனதால்  தன்னுயிரை தானே போக்கிக் கொள்ளத் துணியும் இம் முதியவர்கள் போன்றோரை  பார்க்கும் போது மனம் திடுக்கிடவே செய்கிறது.

வாழ்ந்த காலத்தில் எத்தனையோ வலிகளைத் தாங்கி மீண்டெழுந்தவர்களுக்கு பார வண்டியின் அச்சு முறிவதற்கு முன் ஏற்றப் பட்ட கடைசி மயிற் பீலியாய் ஏதேனும் மன வேறுபாடுகள் காரணமாய் அமைந்துவிடுவது துர்ப்பாக்கியமே.

இருவருக்குமே வாழ்க்கைத் துணையிடம் அன்னியோன்யம் இருந்திருக்கவில்லை என்ற செய்தியும் நெருடலுக்குரியது... யோசிக்க வேண்டியது.

****************

http://marabinmaindanmuthiah.blogspot.in/2013/04/blog-post_5.html

திரு.மரபின் மைந்தன் முத்தையாவின் இந்தப் பதிவையும் நினைவு படுத்துகிறது பாழும் மனசு. 
17 கருத்துரைகள்
  1. முதுமையில் தனிமை மிகவும் கொடுமை. ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும் No peace of mind என்று ஞானஒளியில் சிவாஜி கணேசன் பாடுவாரே, அதுதான் ஞாபகம் வருகிறது.

    ReplyDelete
  2. இருவருக்குமே வாழ்க்கைத் துணையிடம் அன்னியோன்யம் இருந்திருக்கவில்லை என்ற செய்தியும் நெருடலுக்குரியது... யோசிக்க வேண்டியது.

    விளிம்பு நிலை மனிதர்கள் !

    ReplyDelete
  3. யோசிக்க வேண்டிய பகிர்வுகள்...!

    ReplyDelete
  4. இளமையில் வறுமை கொடுமை... முதுமையில் எல்லாமே கொடுமை... (சிலருக்கு)

    ReplyDelete

  5. //வாழ்ந்த காலத்தில் எத்தனையோ வலிகளைத் தாங்கி மீண்டெழுந்தவர்களுக்கு பார வண்டியின் அச்சு முறிவதற்கு முன் ஏற்றப் பட்ட கடைசி மயிற் பீலியாய் ஏதேனும் மன வேறுபாடுகள் காரணமாய் அமைந்துவிடுவது துர்ப்பாக்கியமே.//

    மனம் திடுக்கிடவே செய்கிறது. ;(

    ReplyDelete
  6. வாழ்ந்த காலத்தில் எத்தனையோ வலிகளைத் தாங்கி மீண்டெழுந்தவர்களுக்கு பார வண்டியின் அச்சு முறிவதற்கு முன் ஏற்றப் பட்ட கடைசி மயிற் பீலியாய் ஏதேனும் மன வேறுபாடுகள் காரணமாய் அமைந்துவிடுவது துர்ப்பாக்கியமே.

    இருவருக்குமே வாழ்க்கைத் துணையிடம் அன்னியோன்யம் இருந்திருக்கவில்லை என்ற செய்தியும் நெருடலுக்குரியது... யோசிக்க வேண்டியது.//

    கடைசிக்காலத்தில் ஏன் இப்படி யோசிக்க வைக்கிறது.
    மனைவியுடன் என்ன பிணக்கு? இருவரும் பேசிக் கொண்டு இருந்தால் இழப்பு நேரிட்டு இருக்காதோ என நினைக்க தோன்றுகிறது.

    ReplyDelete
  7. பக்கத்து வீட்டிலிருந்த மனைவியை அழைத்தும் வராத மன வேகத்தில்//

    என்னதான் கோபம் இருந்தாலும், கடைசி காலத்தில் இருவரும் அருகருகே பிரிந்து வாழ்ந்தது கொடுமையின் உச்சம்....!

    ReplyDelete
  8. \\தன் மனம்போல் வாழ்ந்தவர் தன் மரணத்தையும் தானே தீர்மானித்துக் கொண்டதை பிடிவாதம் என்பதா? அடாவடி என்பதா? இயலாமையின் முதல் துளிர்ப்பு என்பதா? அகம்பாவத்தின் கடைசி சொட்டு என்பதா?\\

    நீங்கள் சொன்ன அத்தனையுமே சில இடங்களில் பொருந்திவிடவும் கூடும். அகம்பாவத்தின் கடைசிச் சொட்டில் இயலாமை துளிர்விட, அடாவடியான பிடிவாதம் அடுத்த கட்டத்துக்கு அழைத்துப்போய்விடுகிறது. இருந்து வழிகாட்டவேண்டிய முதிய தலைமுறை இப்படியா இறப்பில் வழிதேடுவது?

    மனத்தைக் கனக்கச்செய்யும் நிகழ்வுகள்.

    ReplyDelete
  9. "இருவருக்குமே வாழ்க்கைத் துணையிடம் அன்னியோன்யம் இருந்திருக்கவில்லை என்ற செய்தியும் நெருடலுக்குரியது... யோசிக்க வேண்டியது."

    யோசிக்க வேண்டிய விஷயம். ஆமாம். பெண்மையை சிறுமை படுத்துகிற யாவரும்.

    ReplyDelete
  10. நிறைய தம்பதிகளிடம் கருத்தொற்றுமை என்பது அரிதான ஒன்றாகயிருக்கிறது. ஈகோ பார்க்காமல் இருவரில் ஒருவர் (கணவன் / மனைவி) விட்டுக்கொடுப்பவராக இருந்தாலும், விட்டுக்கொடுப்பவர் தவிர அடுத்தவர் என்பவர் என்னளவில் விட்டுக்கொடுப்பவரை / அனுசரித்துக்கொள்பவரை சர்வாதிகாரம் பண்ணுபவராகிறார் என்றே கொள்கிறேன். அன்னியோன்யம், விட்டுக்கொடுக்கும் மனசு என்பவை தம்பதிகள் இருவரிடமும் இருத்தல் வாழ்வை அழகாக்கும். மேற்சொன்ன மரணங்கள் மனதில் ரணங்களாகின்றன.

    ReplyDelete
  11. அன்புள்ள நிலாமகள்..

    வலியான பதிவுகள்.

    வருத்தங்கள்.

    மனச்சங்கடங்கள்.

    ReplyDelete
  12. அன்புள்ள நிலாமகள்.

    கல்கியில் வாசித்தேன்.

    தங்கள் கணவர் வசனம் எழுதும் வாய்ப்பு.

    மன்னார்வளைகுடா என்கிற படம்.

    மேன்மேலும் நிறைய படங்களுக்கு வசனம் எழுதவேண்டும்.

    மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    நெஞ்சம் நிறை வாழ்த்துக்கள்.

    அவரிடம் தெரிவியுங்கள்.

    நன்றிகள்.

    ReplyDelete
  13. அன்புள்ள நிலாமகள்..

    வலியான பதிவுகள்.

    வருத்தங்கள்.

    மனச்சங்கடங்கள்.

    ReplyDelete
  14. :((

    மனம் ஒரு பெரும் சுரங்கம். அங்கே என்னென்ன இருக்கும் என அவரவரே அறிவார்.

    யார் யாருக்கு என்னென்ன சோகங்களோ?

    வாழ்க்கையில் எப்போதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் இப்படியான தற்கொலை எண்ணங்கள் தோன்றக்கூடும்.(யாருக்காவது இப்படி ஒரு எண்ணம் தோன்றினால் தயவு செய்து யாரோடயாவது கதையுங்கோ அப்பா)யாராவது ஒரு நம்பிக்கையான மனமொத்த நண்பரோடு கதைக்கலாம். அல்லது அச் சோகத்தை ஒரு நகைச்சுவையாக்கி சிரித்துப் பார்க்கலாம்.

    இது எல்லாம் கடந்து போகும் என்ற ஒற்றை வரி போதாதா? இந்த எண்ணத்தை தாண்டிச் செல்ல?

    ReplyDelete
  15. தோழியாரே, வணக்கம். நலமா?
    உங்கள் வலைப்பதிவுக்கு வந்து வெகுநாட்களாகிறது. வயதானவர்களின் திடுக்கிடவைக்கும் மறைவு பற்றி படித்தேன், வேதனையான விஷயம். நம்மால் முடிந்தவரை அனைத்து வயோதிகர்களையும் நமது சொந்த தாய் தந்தையரைப்போல பாவிக்க வேண்டும்.
    உங்களது தமிழ் கையாடலின் ரசிகன் நான். நீங்கள் துளிரையும் கடைசி சொட்டையும் கையாண்டு இருக்கும் விதம், (//இயலாமையின் முதல் துளிர்ப்பு என்பதா? அகம்பாவத்தின் கடைசி சொட்டு என்பதா?//) கண்ணதாசனின் "பிறக்கும் போதும் அழுகின்றான்" பாடலை நினைவூட்டுகிறது.
    உங்களது இடுகையில் உள்ள கருத்தினும் என்னைக்கவர்வது உங்களின் தமிழ். வாழ்க உங்கள் தமிழும் உங்கள் தொண்டும்
    கண்னன், தஞ்சையிலிருந்து

    ReplyDelete
  16. இந்த இரண்டு நிகழ்வுகளிலுமே நிராகரிப்பின் வலி ஏற்படுத்திய ரணமே வாழ்க்கையை நிராகரிக்கும் முடிவிற்குத் தள்ளியது என்று புரிந்து கொள்ள முடிகிறது. இளமையில் இதைத்தாங்க இயலும். முதுமையில் அன்புக்குரியவர்களின் உதாசீனத்தை, நிராகரிப்பைத் தாங்குதல் கடினம்! சும்மாவா சொன்னார்கள், மனசென்னும் மகா சமுத்திரம் என்று! மனசின் ஆழத்தில் எத்தனை வலிகள்!! இத்தனை வயதை, அனுபவங்களைக் கடந்த பின்பும் மரணத்திற்காக காத்திருக்காமல் தானே மரணத்தை தழுவிக்கொள்வதென்பது எத்தனை கொடுமை!! அந்த முகமறியா மனிதர்களுக்காக மனசு கனத்துப் போகிறது!

    ReplyDelete
  17. இறப்பு நம் கையில் வரும் நாள் தொலைவிலில்லை.
    நல்ல கட்டுரை.
    //அச்சு முறிவதற்கு முன் ஏற்றப் பட்ட கடைசி மயிற் பீலியாய்..
    பின்றீங்க.

    ReplyDelete