கல்வி உளவியல்

(மயிலாடுதுறை-திருவாரூர் பேருந்தில் காலை 7.30 மணிக்குஒரு ஆசிரியர், மாணவரிடையேயான உரையாடல்)

         இந்தக் கல்வியாண்டில் பத்தாம் வகுப்புத் தேர்வெழுதி தேர்ச்சி பெற்ற ஒரு மாணவன் விடுமுறைக்கு தன் உறவினர் வீடு சென்று திரும்புகிறான் தன் சொந்த ஊருக்கு. ஏனெனில் அன்றுதான் மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் நாள். (21.06.2012)

         மூவர் அமரும் இருக்கையின்  சன்னலோர இருக்கையில் அவன் அமர்ந்திருக்க, அருகில் துணைக்கு வந்த உறவுப் பெண்மணி. பேருந்தில் கூட்டம் அதிகரிக்கவும், அருகில் நின்ற ஒருவர் இடம் மாறி அமருமாறு கேட்கிறார்.  பெண்மணி சன்னலோரம் நகர பையன் நடுவில் மாறுகிறான். உட்கார்ந்த மறுநிமிடம், அவர் பேச்சைத் துவக்குகிறார்.

பயணி: என்ன படிக்கிறே தம்பி?

பையன்: பத்தாவது பாஸ் பண்ணியிருக்கேன்.

பயணி: இந்த வருஷமா?

பையன்: ம்...

பயணி: என்ன மார்க்?

பையன்: (தயங்கி, சங்கடத்துடன்) 307 தான்....

பயணி: 500ல் மீதி எங்க போச்சு?

(பையன் குற்ற உணர்வில் நெளிய, “ப்ளஸ் டூ-வில் வாங்கிடுவான் நிறைய” என உறவுப் பெண்மணி சமாளிக்கிறார்.)

பயணி: நானும் திருக்கண்ணபுரத்தில் ஆசிரியரா தான் பணி செய்யறேன்.       மார்க் ஷீட் எழுதத் தான் இப்ப போய்கிட்டிருக்கேன். எல்லோருக்கும் பதிவு பண்ணி கொடுக்க எல்லாப் பள்ளிகளிலும் மதியம் ஆயிடும். வீட்டுக்குப் போயிட்டு நீங்க பொறுமையா பதினொரு பண்ணெண்டு மணிக்கு பள்ளிக்கூடம் போனாப் போதும்.

(தலையாட்டிய பையன் பேசாதிருக்க, பின் இருக்கையில் கல்லூரி மாணவர்களின் அலைபேசியில் சமீபத்திய காதல் பாடல்களின் ஆரவார இறைச்சல். ஆசிரியர் மீண்டும் பேச்சைத் துவங்குகிறார்.)

ஆசிரியர்: என்ன பிரிவு கேட்கலாம்ன்னு இருக்கே, மேற்கொண்டு படிக்க?

பையன்: சி. எஸ். தான்...

ஆசிரியர்: ம்ம்...  தருவாங்களா இந்த மார்க்குக்கு? கேட்கணும், அப்பா அம்மாவை விட்டு தலைமையாசிரியர்கிட்ட விடாப்பிடியா... கேட்டு வாங்கினா மட்டும் போதாது. இன்னும் கடுமையா உழைச்சுப் படிக்கணும். ப்ளஸ் டூவில் 1200க்கு 1170க்கும் மேல மதிப்பெண் எடுக்கணும். வேலைக்குப் போகணும். கை நிறைய சம்பாதிச்சு பெரிய்ய ஆளாகணும். அப்பா, தாத்தாவை விட ...
         பின்னாடி பையன்க பேசிக்கிறாங்க பாரு... ‘அந்த வாத்தி போடவே மாட்டாண்டா... இதுல இன்னும் 30 மார்க்கு எடுத்திருக்கனும்டா'ன்னு... தான் சரியா படிச்சு எழுதாததை மறைச்சு வாத்தியார் மேல குறை சொல்றான் பார். இவன் ஒழுங்கா எழுதியிருந்தா அவர் ஏன் குறைச்சிருக்கப் போறார்? அதனால தான் பி.இ. சேர முடியாம ஐ.டி.ஐ. சேர்ந்திருக்கானுங்க...
          எங்க தலைமையாசிரியர் ஒருத்தர் ரொம்ப அழகாச் சொல்வார், ‘ஆடு மாடுங்களை அவுத்து விட்டா என்ன செய்யுது...? நேரா பச்சை தேடி மேயுது. இராத்திரி பூரா சுவாசிச்சிட்டிருக்கற மரமெல்லாம் சூரியன் உதிச்சதும் என்னா செய்யுது...? ம்... என்ன செய்யுது?

பையன்: ஒளிச்சேர்க்கை செய்யுது.

ஆசிரியர்: ஆங்... சூரியன் இருக்கற வரைக்கும் தனக்கான உணவு தயாரிக்குது. ஆனா மாணவப் பருவத்துல நாம என்ன செய்யறோம்...? டி.வி., கம்ப்யூட்டர், செல், கிரிக்கெட் இப்படி கவனத்தை பலதுலயும் சிதறடிக்கிறோம். அப்பறம் எப்படி அதிக மார்க் எடுக்க முடியும்?
          இந்த ரெண்டு வருஷமும் நீயும் இதெல்லாம் குறைச்சுக்கணும். விளையாட்டு வேணும்தான்... ஒருமணி நேரம் விளையாண்டதும், நான் படிக்கணும் போறேண்டான்னு சினேகிதன் கிட்ட சொல்லிட்டு வீட்டுக்கு வந்துடணும்.
          சி.எஸ். சேரணும்னியே... மேத்ஸ் வருமா உனக்கு?

பையன்: ம்ஹும்... அவ்வளவா வராது.

ஆசிரியர்: அப்புறம்? இப்ப மேத்ஸ்ல என்ன மார்க் எடுத்திருக்கே?

பையன்: 60 தான்...

ஆசிரியர்: 60 வாங்கியிருக்கியா! அப்புறம் வராதுன்னே... 35 வாங்கறவன் தான் வராதுன்னு சொல்லனும். 200க்கு 120 வாங்க முடியும் உன்னால. இன்னும் கொஞ்சம் கஷ்டப்பட்டு படிச்சா இன்னும் கூட வாங்கிடலாமே...
           எம்பொண்ணு ப்ளஸ் டூவில 1164 மார்க்! நாகை மாவட்டத்திலேயே முதலா வந்தவ. பி.இ. முடிச்சிட்டு இப்ப 40,000 சம்பளம் வாங்கறா! பொம்பள புள்ள... அவளாலயே முடியுது... ஆம்பள புள்ள உன்னால முடியாதா?

         (பூந்தோட்டம் வந்துவிட அப்பெண்மணியும் அப்பையனும் எழுந்து இறங்கினர். பெண்மணி இறங்குமுன் சொன்னார்... ‘உங்க வார்த்தைங்களை மனசில் ஏத்தி உணர்ந்தான்னா பின்னாள்ல பெரியாளா ஆகிடுவான் சார். நன்றி!' ‘எடுத்துச் சொல்லுங்கம்மா' என்றபடி அவர்கள் இறங்க கூட்டத்தை விலக்கி வழி ஏற்படுத்திக் கொடுத்தார் அம்மருத்துவர்.)

          ‘நோய்நாடி நோய்முதல் நாடிஅது தணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்'ன்னு வள்ளுவர் மருத்துவருக்கு மட்டுமா சொல்லிச் சென்றார்...?!

ஆச்சார்ய தேவோ பவ!!
9 கருத்துரைகள்
  1. ‘நோய்நாடி நோய்முதல் நாடிஅது தணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்'ன்னு வள்ளுவர் மருத்துவருக்கு மட்டுமா சொல்லிச் சென்றார்...//

    அருமையான பதிவு
    முடிவாகச் சொல்லிய சொற்றொடர் அருமை
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. அந்த ஆசிரியரை போல் அறிவுரை சொல்வோர் மிகக் குறைவு ..அதை பதிவு செய்த விதம் நிறைவு

    ReplyDelete
  3. படித்துப் பாருங்கள்
    http://seenuguru.blogspot.com/2012/06/blog-post_23.html

    ReplyDelete
  4. பிடிக்குமா பிடிக்காதான்னு யோசிக்காமல்.. தானே பெய்யும் மழை போல்.. பேசிப் போன அந்த நல்ல மனதிற்கு என் நமஸ்காரமும்.

    ReplyDelete
  5. நல்ல ஆசிரியர்...

    உழைத்தால் முடியாத விஷயமா.....

    இது போன்ற நல்ல ஆசிரியர்கள் தான் நாட்டிற்கு தற்போதைய தேவை.

    ReplyDelete
  6. நிலாமகள்..

    நல்ல பதிவு. பயனுள்ள பதிவு. இதுபோன்ற எதார்த்தங்கள்தான் வாழ்க்கையைத் தீர்மாணிக்கின்றன உண்மையாக. நன்றாக அவதானித்து எழுதியுள்ள உங்களுக்குப் பாராட்டுக்கள். பிள்ளைகள் எல்லோருமே நன்றாகப் படிப்பவர்கள்தான். மதிப்பெண்கள் எடுப்பதில் பல்வேறு உளவியல் கூறுகள் இயங்குகின்றன.

    ReplyDelete
  7. குற்றவுணர்வில் தத்தளிக்கும் மாணவர்களைக் குறை சொல்லாமல் இப்படிச் செய்தால் இன்னும் நன்றாக இருக்கும், இன்னும் சிறப்பாக இருக்கும் என்று சொல்லி ஊக்குவிக்கக் கூடியோர் ஒரு சிலரே. பெரும்பான்மையோர், நடந்து முடிந்துவிட்ட செயலைப் பற்றிப் பேசிப் பேசியே பாடாய்ப் படுத்துவார்கள். அப்படியல்லாது, தன்னம்பிக்கை ஊட்டும் வகையில் அறிவுரையை தோழமையுடன் வழங்கிய ஆசிரியர் மிகவும் வணங்கத்தக்கவர். அவரிடம் படிக்கும் மாணவர்கள் கொடுத்துவைத்தவர்கள். பகிர்வுக்கு நன்றி நிலாமகள்.

    ReplyDelete
  8. அருமையான பதிவு நிலாமகள்! வழக்கம்போல உங்களின் தமிழ்த்தேனில் நனைந்து தித்திப்புடன் வந்து விழுந்திருக்கின்றன‌ சொற்க‌ள்!

    இடம் பார்த்துப் பொழிவதில்லை மழை, அந்த நல்ல மனிதரைப்போல!
    உள் வாங்கி குளிர்ந்திருக்கும் ஈர மண்ணைப்போல, எத்தனை பிஞ்சு மனங்கள் குளிர்ந்திருக்குமோ அவரின் க‌ருத்து மழையில்!

    ReplyDelete