முன்னோட்டம்

 கதை கேட்டுத் தூங்கிய இரவுகளும்   
       கதைகளால் விழிப்படைந்த பகல்களும்...

       கதை சொல்வது மற்றும் கேட்பதன் ஆதிருசியை உணர்ந்தது அவரவர் தாயின் அரவணைப்போடான தூங்கச் செய்யும் தருணங்களன்றி வேறென்ன...?
       சிலருக்குப் பாட்டி...
      சிலருக்கு அத்தை...
      சிலருக்கு அப்பா... எனக் கதை சொல்லும் உறவுமுறை வேண்டுமானால்     சமயங்களில் மாறுபடலாம்.
      ஆனால், கதை கேட்டுக் கேட்டுத் தூங்கிய ஆழ்மனசில் ‘கதை'யின் மேலான ஈர்ப்பு நிரந்தரமாகிவிடுகிறது.
      ஆக, நம்மில் பலருக்கு சிறுபிராயத்தில் அருகில் படுத்து, முதுகைத் தட்டி, தலையைக் கோதி, கால்களை வருடி தூக்கத் துணையாகும் உறவொன்று  நீங்காமல் நிலைத்திருக்கும் மனசின் ஆழத்தில். வாழ்தலில் நிறைந்துள்ள நல்லது கெட்டதுகளை தான் சொல்லும் கதையுள் பொதிந்து கூறித் தூங்கச் செய்த அவ்வுறவின் உயிர்ப்பு நாம் வாழும் வரை வரும் இரவுகளில் வருடிச் செல்லும் நம்மை.
      எனக்குள் விதைத்தவர்களும் துளிர்த்தபடியே ...
  
                                          * * * * *

      உழவும் விதைப்பும் அறுப்பும் அளப்புமாக நன்செய்-புன்செய் நிலங்களும், மாடு-கன்று, ஆள்-படை, கோயில்-குளம் என கிராமத்து செழிப்பும் ஓங்கியிருக்க, ஆணும் பெண்ணும் ஓய்வற்று உழைத்திருக்க பசுமைக்குப் பஞ்சமில்லா இளமைப் பருவம் எனக்கு . விளையாடிக் களைக்க  பெருந்தோட்டமும், உறவாடிக் களிக்க பெருங்கூட்டமும் உண்டு அன்றைய வாழ்வில்.
      தூக்கம் வரும் நேரம் மட்டும் அம்மாவை ஆக்கிரமித்து விடுவது வழக்கம். கைவேலை கிடப்பில் கிடக்க, என் ஆளுகைக்கு வரும் அம்மா, விதவிதமாய் கதை சொல்ல, விழி மூடிய உறக்கத்தில் வரும் கரடி, சிங்கமெல்லாம். சில நாட்களில் சொல்லும் கதையின் சூட்டில் வந்த உறக்கம் தணிந்துபோக, இன்னொண்ணு, இன்னொண்ணு என்றபடி படுத்திருக்கும் ஜமக்காளத்தின் ஓரத்துப் பிசிறலை நிமிட்டியபடி கேட்டது... இன்றும் தழைத்துக் கிடக்கிறது மனவெளியில்!
       என் குழந்தைகள் மட்டுமல்ல;  சகோதர சகோதரிகளின் குழந்தைகளுக்கும் பாட்டியின் கதைகள் பிரசித்தம்! இன்றும் அவரது பிரபல்யமானதொரு கதையை சொல்வர் அனைவரும்.
      “ஒரு ஊர்ல ஒரு குருவி... அதுக்கு முன்னாடி கொண்டை; பின்னாடி வாலு... நீட்டு கதை. நெனப்பா கேட்கணும்...”
      முகவாயில் கைகளை முட்டுக் கொடுத்துக் கதை கேட்கும் பொடிசுகளுக்கு இவ்வரிகளையே மறுபடி மறுபடி ஏற்ற இறக்கத்துடன், அதிக இடைவெளி விட்டு சொல்லிக் கொண்டிருப்பார் என் அம்மா. இன்னுமிருக்கும் கதையைத் தெரிந்து கொள்ள எதிர்பார்ப்புடன் கேட்கும் குழந்தைகள், சரிந்து, கவிழ்ந்து தூங்கியே விடுவர்.
       வளர்ந்த பின்னும் அவர்கள் பாட்டியிடம் கதைகேட்டதுண்டு. குறிப்பாக குருவிக் கதையை. சளைக்காமல் அம்மா சொல்வார்...
       “ஒரு ஊர்ல... ஒரு குருவி... அதுக்கு... முன்...னாடி கொண்டை; பின்...னாடி வாலு; நீட்ட்ட்ட்ட்டு கதை.... நெனப்....பா கேளு.... ஒரு ஊர்ல...”
      கொண்டை வைத்த வாலுள்ள குருவி என்னாச்சு?
      திரும்ப வராத தூரம் போன அம்மா வந்தால் தான் கேட்கணும். மீதிக் கதையை கனவில் வந்தாவது சொல்வாரா?!
      பூமியில் மரணம் தழுவியவரெல்லாம் வானத்து நட்சத்திரமாகப் பிரகாசிப்பது உண்மையெனில் எனது அம்மா  நிலா! நான் நிலாமகள் !!
   
                                         * * * * *

      சற்று வளர்ந்த நாட்களில் பகலிலும் கதை கேட்க வாய்த்தது எனக்கு. வீட்டு வேலைகளில் அம்மாவின் உதவியாளர் பொன்னம்மா வாயிலாக.
 விடுமுறை நாட்களில் விளையாடி சலித்துப் போனால், “ஒரு கதை சொல்லு பொன்னம்மா”.
      “எதைச் சொல்ல...? நான் பிறந்த கதையையா? வளர்ந்த கதையையா? வாக்கப்பட்ட கதையையா? இப்ப வாழற கதையையா?”
 கிளிசோசியக்காரன் பல சீட்டுகளைப் பரப்பிவிட்டுக் கூண்டைத் திறந்து விட, கிளியோ ஏதோவொன்றை கெளவித் தந்துவிட்டு, ‘வந்த வேலை முடிந்தது' என்பதாய் சன்மானமாக சோசியக்காரனின் விரலிடுக்கு நெல் மணிகளோடு மறுபடி கூண்டுக்குள் நுழைந்து கொள்வதுபோல, அந்தக் கேள்விகளில் ஏதாவதொன்றைத் தேர்ந்தெடுத்தால்  போதும்.
      அப்புறம், ‘உம்' கொட்டும் தொண்டை விக்கித்து, விரியும் கண்கள் பிதுங்கி, இடையிடையே விழுந்து விழுந்து சிரித்ததில் வயிறோடு கால்முட்டியும் வலிக்க-
      தன் கதையுலகை விரித்து அதனுள்  புகைவண்டியில் பயணச்சீட்டெடுக்காத பயணியாய் கேட்போரை உலாத்த வைக்கும் வல்லமை பொன்னம்மாவின் குரலுக்கு இருந்தது.
      கதைக்கிடையே வேலை வந்தால் ‘மீதி அப்புறம்' என்றபடி பறந்துவிடும் பொன்னம்மாவை இரண்டொரு நாள்களில் வேலை ஒழிந்த நேரம் பிடித்து மிச்சம் மீதி கேட்பதற்குள் யூகங்களும் கற்பனைகளும் போட்டி போட்டுத் தவிக்க வைக்கும். ராத்தூக்கத்திலும் நினைவில் தொங்கும் கதை கனவாய் படரும்.
      வாசல் குறட்டிலும், கொல்லைப் படிக்கட்டுகளிலும் அமர்ந்து கன்னத்தில் அதக்கிய புகையிலையோடு காறை படிந்த பற்கள் தெரிய ரத்த சிவப்பு உதடுகளுடன் பொன்னம்மா சொல்லக் கேட்ட ராஜா-ராணி கதைகள் வாயிலாக, ஏழு கடல் ஏழு மலை தாண்டிச் சென்று திருப்பாற்கடலில் ஒளித்து வைத்திருக்கும் கூண்டுக்குள் அடைபட்ட கிளியாய் மாறிச் சிறகசைத்த சிலாகிப்புகள் எனது மனப் பெட்டகத்துள் காலங்காலமாய் பத்திரமாக இருக்கிறது.
    
                                            * * * * *
      தமிழிலக்கியத்தில் சொல்லப்படும் செவிலித்தாய் போல் எனக்கொருவர் உண்டு. என் மேல் அபரிமிதமான பாசமும் அக்கறையும் கொண்டிருந்த ஜீவன்...

('சுழல்' சிறுகதைத் தொகுப்பு நூலுக்கான முன்னுரையில் ஒரு பகுதி... நூல் ... அச்சில் )
11 கருத்துரைகள்
  1. நல்ல பகிர்வு சகோ...

    //பூமியில் மரணம் தழுவியவரெல்லாம் வானத்து நட்சத்திரமாகப் பிரகாசிப்பது உண்மையெனில் எனது அம்மா நிலா! நான் நிலாமகள் !!//

    நல்ல வரிகள்...

    புத்தகம் அச்சில்... வாழ்த்துகள் சகோ.

    ReplyDelete
  2. ('சுழல்' சிறுகதைத் தொகுப்பு நூலுக்கான முன்னுரையில் ஒரு பகுதி... நூல் ... அச்சில் )

    வரவிருக்கும் சிறுகதைத்தொகுப்பு நூலுக்கு வாழ்த்துக்கள்.
    அன்புடன் vgk

    ReplyDelete
  3. //கதை கேட்டுத் தூங்கிய இரவுகளும்
    கதைகளால் விழிப்படைந்த பகல்களும்...//

    இந்தத்தலைப்பு எனக்கு மிகவும் பிடித்துள்ளது.
    நான் குழந்தையாய் இருக்கும் போது கேட்டுள்ள கதைகள் அதிகம்.
    அதே போல நான் குழந்தைகளுக்கு சொல்லியுள்ள கதைகள் மிகமிக அதிகம். குழந்தைகளுடன் பழகி பேசி கதை சொல்லும்போது தானே நாமும் ஒரு குழந்தையாகவே ஆகி விட முடிகிறது!

    அந்த இனிய தருணங்கள் அனுபவித்தால் மட்டுமல்லவோ புரியும்!! ;))) வாழ்த்துக்கள். vgk

    ReplyDelete
  4. சில நிகழ்வுகளை நெகிழ்ச்சியாகச் சொல்லத் தெரியவேண்டும் நிலா.அது கைவந்திருக்கிறது தோழி உங்களுக்கு.வாழ்த்துகள் !

    ReplyDelete
  5. பூமியில் மரணம் தழுவியவரெல்லாம் வானத்து நட்சத்திரமாகப் பிரகாசிப்பது உண்மையெனில் எனது அம்மா நிலா! நான் நிலாமகள் !!

    அதிலென்ன சந்தேகம்!
    ”சுழல்” அச்சில் என்கிற வரியில் எனக்குள் சந்தோஷச் சுழல்.

    ReplyDelete
  6. எனக்கு அத்தை.புராணங்களும் இதிகாசங்களும் அவரால்தான் அறிமுகமானது.புத்தக வெளியீட்டு முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. அவ்வுறவின் உயிர்ப்பு நாம் வாழும் வரை வரும் இரவுகளில் வருடிச் செல்லும் நம்மை.
    எனக்குள் விதைத்தவர்களும் துளிர்த்தபடியே ...

    துளிர்த்த சிறகுகளுக்கு வாழ்த்துகள்..

    ReplyDelete
  8. கதை கேட்பதென்றால் எவ்வளவு சுகம்.
    கூடிய சீக்கிரம் வரவிருக்கும் சிறுகதை தொகுப்புக்கு வாழ்த்துகள் சகோ..

    ReplyDelete
  9. ஆஹா! சிறு கதைத் தொகுப்பு வரவிருக்கிறதா!! வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  10. @ வெங்க‌ட் நாக‌ராஜ்

    @வை. கோ. சார்

    @திண்டுக்க‌ல் த‌ன‌பால‌ன்

    @ ஹேமா

    @ரிஷ‌ப‌ன்

    @ ச‌ண்முக‌வேல் ஐயா

    @ இராஜ‌ராஜேஸ்வ‌ரி

    @ கோவை2டெல்லி

    @ம‌ணிமேக‌லா

    த‌ங்க‌ள் அனைவ‌ரின் ஆசியும் அன்பும் என‌க்கு யானை ப‌ல‌ம். ந‌ன்றி! ந‌ன்றி!

    ReplyDelete