வலியின் திரிபு


 

ஒரு வயதில் காது குத்துவது வழக்கம்

அப்பாவைப் பெற்ற தாத்தா போய்ச் சேர்ந்தார்

மூன்றாவது வயதில் குத்துவோமென்று இருந்தனர்.


அம்மாவைப் பெற்ற பாட்டி

சிவபதவியடைய

துளையில்லாக் காதுகளை

அமுக்கும் தோடு அலங்கரித்தது.


புதுவீட்டு கிரகப் பிரவேசத்தோடு

காது குத்தல் சிலாக்கியம் என

மனை தேடித் தேடி அலுத்து

கட்டிய வீடும் அமையாமல்

காரணங்கள் பெருகி

ஒன்பதில் தான் குதிர்ந்தது 

பத்திரிகை அடித்து, மண்டபம் பிடித்து

ரெண்டு வேளை விருந்தொடு

தம்பி பெண் காதணி விழா.


காலை உணவில் பூரி கட்டாயம்

மதிய உணவுக்கு முன் ப்ரெஷ் ஜுஸ் ஜில்லென்று

மதிய விருந்து முடிவில் ஐஸ்க்ரீம் அவசியம்

அப்பாவும் அம்மாவும் திட்டமிட்டனர்.


‘எண்ணெய்ப் பண்டம் செரிக்காது என்பாய்

குளிர்பானம் சளிபிடிக்கும் என்பாய்

ஐஸ்க்ரீம் சாக்லெட் எல்லாம் பல்லுக்கு கேடென்பாய்

வரப்போகும் உறவுக்கும் நட்புக்கும் 

இதெல்லாம் ஒண்ணும் பண்ணாதா?'

நானும் அதெல்லாம் அன்னைக்கு சாப்பிடலாமா?

தொணதொணக்கிறாள் விழா நாயகி.


ஒரு சிணுங்கலில்லை; அழுகையில்லை

முகம் கூட சுருக்கவில்லை

பத்தர் வேலை முடித்தபின்

பட்டுப்பாவாடையுதறி

மாமா மடியிலிருந்து எழுந்தவள்

வந்த விருந்தினர்கள் சூழ

புகைப்படக்காரர் சொன்னபடி 

கேட்டு ஒய்யாரமாக ஒத்துழைத்தாள்.


‘அப்பா, நீ சொன்னபடி அழவேயில்லை நான்'

‘நல்ல பொண்ணு!'

பெருமை பொங்க சொன்ன அப்பா

தழுவி உச்சி  முகர்ந்தார்.


மதிய விருந்து முடியும் வேளையில்

அம்மாவின் தோழி தன்னுடன் செல்ஃபி எடுக்க அழைக்க

கையிலெடுத்த ஐஸ்க்ரீமை வைத்துச் சென்றாள்.

பந்தி முடிந்த அவசரத்தில் 

இலையோடு குப்பைக்குப் போனது அது.


தேடிவந்தவள் தேம்பியழுகிறாள் வெகுநேரம்

மிச்சமிருக்கும் அவளது குழந்தைமை 

கண்ணீராய் பெருகியோடுகிறது...

அதன் உள்நீரோட்டமாய் காதுவலியும் இருக்கலாம்.

ஆற்றவியலாமல் தவிக்கின்றனர் அம்மாவும் அப்பாவும். 


14 கருத்துரைகள்
  1. அடடா..... கிடைக்காத ஐஸ்க்ரீம் அழ வைத்துவிட்டதே....

    கவிதை சிறப்பு. பாராட்டுகள்.

    ReplyDelete
    Replies
    1. மகிழ்வும் நன்றியும் சகோ.

      Delete
  2. Replies
    1. தங்கள் வருகை மகிழ்வு தருகிறது. நலம் தானே சகோ...

      Delete
  3. Replies
    1. மகன் சிபியின் கைவண்ணம். தங்கள் பாராட்டு அவனை ஊக்கப் படுத்தும். நன்றி சகோ.

      Delete
  4. அருமை.

    //தேடிவந்தவள் தேம்பியழுகிறாள் வெகுநேரம்
    மிச்சமிருக்கும் அவளது குழந்தைமை
    கண்ணீராய் பெருகியோடுகிறது...//

    இதுதான் குழந்தை குணம்.

    காதுவலியும் இருக்கலாம் , உண்மை.

    ReplyDelete
    Replies
    1. குழந்தைகள் குழந்தைகளாக இருப்பதுதான் ரசிக்கும் படி இருக்கிறது. வருகையும் கருத்தும் உற்சாகம் தருகிறது. நன்றி தோழி.

      Delete
  5. நிறைய எழுதுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. இனி முயல்வேன். நன்றி!

      Delete
  6. பெரிய பெண் போல எவ்வளவுதான் நடிக்கிறது அம்மா, அப்பாவிடம் நல்ல பேர் வாங்க குழந்தை தன்மை வெளிப்பட்டு விட்டது. (ஐஸ்கீரிம் காணமல் போனதில் , காதுவலியும் நினைவுக்கு வந்து விட்டது)

    ReplyDelete
    Replies
    1. நீங்க சொல்வது சரிதான்.

      Delete
  7. ஐஸ் கிரீம் போன்ற
    ஜில்லென்ற ஆ-க்-க-ம் !

    அந்த ஐஸ் கிரீமை முழுசா அனுபவிக்க
    முடியாத குழந்தையின் ஏ-க்-க-ம் !!

    படித்ததும் நமக்கும் காது வலி ஏற்பட்டது
    போன்றதோர் தா-க்-க-ம் !!!

    கவிதை புனைய நினைப்போருக்குத்
    தாங்கள் தந்துள்ளதோ ஊ-க்-க-ம் !!!!

    சபாஷ் ! பாராட்டுகள். வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. மகிழ்வும் நன்றியும் ஐயா!

      Delete