பசித்த வயிறு... செவிக்குணவு!

அலை - தொலைபேசிகளற்ற
அந்தக் காலப் பிரிவெல்லாம்
கடிதங்களால் ஆற்றியிருந்தன

தகவல் பரிமாறத்
தாமதமானாலும்
தோன்றும் போதெல்லாம்
தடவிப் பார்த்து
படித்துப் படித்து
பழுப்பேறிய அத்தாள்கள்
கடவுளைக் காட்சிப் படுத்தும்
கோயில் சிலைகளாய்
தொலைவிலிருப்போரை
நெருக்கமாக்கியது.

பொருள்வயிற் பிரிந்த
போர்நிமித்தம் பிரிந்த
சங்கத் தலைவர்களை
காவியத் தலைவிகள்
வழிமீது வைத்தவிழி வாங்காமல்
காத்திருந்தனர்
பசலையேறிய மேனியொடு.

பெற்ற பிள்ளைகளை
கண்காணா தூரத்தில்
அறிவுக்கண் திறக்க அனுப்பிவிட்டு
விடுதியின் வரவேற்பறையில்
விரல்விடும் எண்ணிக்கையில்
இருக்கும் தொலைபேசிகளின்
தொடர்பெல்லைக்குள்
நுழைய முயன்று சோரும்
பெற்றோருக்கும்

சாப்பாட்டு இடைவேளையில்
செவிக்குணவாய்
தாய் - தந்தையின் குரலுக்குக்
கால்கடுக்கக் காத்திருக்கும்
பிள்ளைகளுக்கும்
சமர்ப்பணமாகும் இக்கவிதை
சறுக்கிக் கிடக்கிறது
அவர்களின்
கடக்கும் உணவிடைவேளை நேரத்தில்
சிதறிய பருக்கைகளின் பிசுபிசுப்பில்.

விடுதியின்
ஒட்டுமொத்த மாணாக்கருக்கும்
ரட்சகனாகும்
அச் சில இணைப்புகள்
பிரிவின் தகிப்பால்
கொதிகொதித்துக் கிடக்கின்றன
அந்திமுதிர் இரவிலும்...

சமன்படுத்தும் மென்தென்றலாய்
இணைப்பு கிடைத்த மறுகணம்
அலையழித்த கரையோர காலடித் தடங்களாய்
குதூகலம் நிறைந்து கும்மாளிக்கும் மனசில்
மறுநொடியே குற்றவுணர்வெழும்...
காத்திருக்கும், கைசோரும்
பிற பெற்றோரை எண்ணி.

முப்பது நிமிட அல்லாட்டம்
மூன்று நிமிடப் பேச்சாகி
காதில் பரவும் பிள்ளைகுரல்
மனம்தழுவி
பிரிவின் ரணங்களுக்கு மருந்திடும்.

காத்திருக்கும்
இருபக்கப் பேசிகளும்
அடுத்த அழைப்புக்காக!
10 கருத்துரைகள்
  1. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/10/blog-post_7.html) சென்று பார்க்கவும்...

    நன்றி...

    ReplyDelete
  2. முப்பது நிமிட அல்லாட்டம்
    மூன்று நிமிடப் பேச்சாகி
    காதில் பரவும் பிள்ளைகுரல்
    மனம்தழுவி
    பிரிவின் ரணங்களுக்கு மருந்திடும்.

    தவிப்பு அருமையாய் பதிவாகி இருக்கிறது

    ReplyDelete
  3. காத்திருக்கும்
    இருபக்கப் பேசிகளும்
    அடுத்த அழைப்புக்காக!

    நிதர்சன ஏக்கம் !

    ReplyDelete
  4. அருமையான கவிதை.

    ReplyDelete
  5. அனுபவ மனதின் துடிப்பை நானும் அறிந்தவள் , உணர்ந்தவள் என்கிறவகையில் அணுக்கமான அருமையான கவிதை.

    ReplyDelete
  6. செவி வழி வயிற்றுக்குச் சென்று சேர்கிறதோ உணவு? - தாய்மையின் தவிப்பு!!

    ReplyDelete
  7. பிள்ளைகளிடம் பேசத் தவிக்கும் உங்கள் மனசு, அதே போல ஏங்கித் தவிக்கும் பிற பெற்றோருக்காகவும் உருகுகிறதே... பாம்பின் கால் பாம்பறியும் என்பது போல இந்த ஏக்கம் அனுபவித்தவர்களுக்குத் தானே புரியும்?
    ஏக்கங்களையும், அனுபவங்களையும் அழகாய் பதிவிட உங்களிடம் கற்றுக் கொள்ள வேண்டும் நிலா....

    ReplyDelete
  8. காத்திருக்கும்
    இருபக்கப் பேசிகளும்
    அடுத்த அழைப்புக்காக!//

    உண்மைதான்.
    எங்கள் பொழுதுகள் இப்படித்தான் போகிறது.

    ReplyDelete