1910-ம் , 2010-ம்

                 ஈடு இணையற்ற மாபெரும் கவிஞர் இரவீந்திரநாத் தாகூர்(1861), இறைத் தத்துவத்தின் மேன்மையை ஆராதனை செய்த கவிதாஞ்சலியாம் கீதாஞ்சலியை 1910-இல் வங்க மொழியில் வெளியிட்டு, 1912-ல் அதிலிருந்து 103 தத்துவங்களை ஆங்கில மொழிபெயர்ப்பாக அளித்தார். 1913-ல், ஆசியாவிலேயே முதன் முறையாக இலக்கியத்துக்கான நோபல் பரிசை இந்நூல் இவருக்குப் பெற்றுத் தந்தது.

            வங்க மொழியில் வெளிவந்து நூறு ஆண்டுகள் நிறைவில் தாகூரின் புலமையை தமிழ்மொழியாம் கண்ணாடியில் பிரதிபலித்துள்ள அருள்நிதிக் கவி.கோ.சுப்ரமணியன், ஓய்வு பெற்ற வங்கியதிகாரி. தமிழுடன் தெலுங்கு, ஆங்கிலம், சமஸ்கிருதத்திலும் வல்லமை பெற்றவர்.
            இம்சைகள் நிறைந்த அகவயத்தில் ஆத்ம விசாரம் பிறக்கிறது. அது எல்லையில்லாத் துயரை உண்டாக்கிப், பிரபஞ்ச வெளி பூராவும் பரப்புகிறது. இறுதியில் பேரொளியில் ஐக்கியமாகும்போது படைப்பின் பாதம் தெரிகிறது.
            ஆண்டவனைத் தேடி அகிலத்தில் அலைகிற ஆத்மாக்கள் இசைக்கிற கீதமே, ஆத்மார்த்த ஏக்கமே கீதாஞ்சலி எனும் இக் கீதை.(அணிந்துரை-இராம.கனகசுப்புரத்தினம்)
             ஆத்மாவே புல்லாங்குழலாகவும், இசையாகவும், கீதமாகவும், கவிதையாகவும், மலராகவும், ஒளியாகவும் உருவகப்படுத்தப்பட்டு, இறைவன் இதில் தலைவனாகவும், நண்பனாகவும், ஆசானாகவும் தாகூரால் ஆராதிக்கப் படுகிறார்.
              தனிமை, இரக்கம், துயரம், இருள், காடு, இசை என நம்மையும் பிரபஞ்சப் பெருவெளிக்கிடையே கைபிடித்து அழைத்துச் செல்கிறார். தாகூருக்கு இரவே இரகசியமாகிறது. உறக்கமே விழிப்புணர்வாகிறது. இறைவன் மட்டுமல்ல... மரணமும் அவருக்கு மிக நெருக்கமான தோழனாகிறார்கள்.(பாராட்டுரை-எஸ்.லக்ஷ்மி நரசிம்மன்)
              மனித மனம் எத்தனை தளர்வுற்றதானாலும், அது எல்லையற்ற தன்மையுடன் படைக்கப் பட்டுள்ளது. அதற்கான விழிப்புணர்வே விடுதலையைத் தரும்.
            விடுதலையென்பது விட்டு விடுதலில் இல்லை. ஆனந்தத்தைப் பூரணமாக அனுபவிப்பதிலிருக்கிறது. பூசை புனஸ்காரங்களில், தியானங்களில் கூட இல்லை. கடும் உழைப்பிலிருக்கிறது.
           உழைத்துக் களைத்த பின் உறக்கத்தையும், விழித்தபின் புத்துணர்வையும் தரவல்ல இறையே, தன் ஆருயிரால் அன்பென்னும் விளக்கைத் தூண்டி, விதைகள் முளைக்கவும், மொட்டுக்கள் மலரவும், மலர்கள் கனியாகவும் உள்மறைந்து துணைநின்று ஊக்குவிக்கிறது.
          அத்வைதம், கர்மயோகம் போன்ற ஆழமான தத்துவங்களையும், பரிபூரணத்திற்கான ஒரே வழியாக சரணாகதித் தத்துவத்தையும், கவிதை, துயரம், இரவு, பெண், ஒளி என நெகிழ்ச்சியான அனுபவமாக்கியுள்ளார் இந்நூலில். 
           இந்த 103 தத்துவங்களும், சிலருக்கு வாசல்கள், சிலருக்கு ஜன்னல்கள், சிலருக்குப் பிரகாரம், சிலருக்குக் கருவறை... அவரவர்க்கு ஏற்ப ஒளியின் பெருக்கம். அவரவர்க்கு ஏற்ப இறைவனின் நெருக்கம்.(வண்ணதாசன், தன் மதிப்பு ரையில்)
            படிப்போர் மனதை ஊடுருவிப் பாயும் இப்பாடல்கள் வான மண்டலம் எங்கும் பரவி, பல வண்ணமிகு கண்ணீர்த் துளிகளாகவும், புன்முறுவல்களாகவும், எச்சரிக்கைகளாகவும், நம்பிக்கைகளாகவும் எதிரொலிக்கின்றன.
            எதிலிருந்து எதுவுமில்லாமல் போக முடியாதோ, எந்த நம்பிக்கை அழியாதோ, எந்த மகிழ்ச்சி குறையாதோ, கண்ணீர்த் துளிகளினூடே தெரியும் எந்த முகத்தை மறைக்காதோ, அந்த நிரந்தரத்தின் எல்லையோரத்துக்கே தான் வந்துவிட்டதாகக் கூறும் தாகூர், இத் தத்துவங்கள் வழி நம்மையும் அந்த நிரந்தரத்தின் எல்லையோரத்துக்கு அழைத்துச் செல்கின்றார்.
நூற்பெயர்:                                கீதாஞ்சலி(தத்துவங்கள்)
மூல மொழி:                              வங்காளம்
மூல நூலாசிரியர்:                இரவீந்திரநாத் தாகூர்
ஆங்கிலம் வழி தமிழில்: கோ.சுப்ரமணியன்
வெளியீடு:                                  மீனா பதிப்பகம், சென்னை
                                                          044-23763434
விலை:                              ரூ. 90/-
12 கருத்துரைகள்
  1. நன்றி.
    வாங்கிப் படிக்கிறேன்.

    ReplyDelete
  2. நல்லதோர் நூல் அறிமுகத்திற்கு நன்றி.

    ReplyDelete
  3. //இவை சிலருக்கு வாசல்கள், சிலருக்கு ஜன்னல்கள், சிலருக்குப் பிரகாரம், சிலருக்குக் கருவறை... அவரவர்க்கு ஏற்ப ஒளியின் பெருக்கம். அவரவர்க்கு ஏற்ப இறைவனின் நெருக்கம்.//

    //எதிலிருந்து எதுவுமில்லாமல் போக முடியாதோ, எந்த நம்பிக்கை அழியாதோ, எந்த மகிழ்ச்சி குறையாதோ, கண்ணீர்த் துளிகளினூடே தெரியும் எந்த முகத்தை மறைக்காதோ, அந்த நிரந்தரத்தின் எல்லையோரத்துக்கே இத் தத்துவங்கள் நம்மை அழைத்துச் செல்கின்றன.//

    அடேயப்பா!உணர்வுப் பூர்வமான அறிமுகம்.உங்கள் வார்த்தைகள் எல்லாம் கவிதை..கவிதை..

    இந்த வரிகளை எழுதும்போது இருந்த உங்களின் மனநிலை சத்தியத்தை எழுத வைத்திருக்கிறது.கடவுள்த்தன்மை குறித்து இவற்றைத் தளமாக வைத்து தனிக் கவிதையாக முயற்சியுங்கள் நிலாமகள்.

    கை கூப்பி வணங்குகிறேன் உங்கள் தமிழை.

    ReplyDelete
  4. தங்கள் பாராட்டுக்கு தற்போது தகுதியற்றவளாயிருக்கிறேன் நான். மன்னிக்கவும் ஜி. அந்த வரிகளை வார்த்தவள் நானல்ல. திருத்தம் செய்திருக்கிறேன். முடிந்தால் மறுமுறை பதிவை வாசிக்கவும். தங்கள் அன்பு நிறை ஆசிகளால் இன்னும் செம்மையடைவேன் என்ற நம்பிக்கையும் உத்வேகமும் உள்ளது. தெளிவற்ற பதிவுக்காய் வருந்துகிறேன்.

    ReplyDelete
  5. @சந்தான கிருஷ்ணன்...

    @வெங்கட் நாகராஜ்...

    வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!

    ReplyDelete
  6. இப்படி பல நூல்களை பற்றி அறிமுகம் செய்து வைக்கும் தங்களுக்கு நன்றி தோழி.

    ReplyDelete
  7. parattugal
    samuga nar sinthai uruvakkuvathu parattukkuriyathu
    polurdhayanithi

    ReplyDelete
  8. தகவலுக்கு நன்றிகள்

    ReplyDelete
  9. @கோவை 2 டெல்லி...
    படிக்கும் போதே குறிப்பெடுக்கும் பழக்கத்தால் பகிர்வும் சுலபமாகிறது தோழி ! தொடர்ந்த கருத்துரை இடல்களுக்கு நன்றியும்...

    ReplyDelete
  10. @ polurdhayanithi...

    @ மகாதேவன்-V.K...

    முதல் வருகைக்கும் கருத்துரைகளுக்கும் நன்றி நண்பர்களே...!!

    ReplyDelete
  11. ஆஹா...அற்புதம்!



    ஆர்.ஆர்.ஆர்.
    http://keerthananjali.blogspot.com/

    ReplyDelete
  12. @ ”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி...

    மிக்க நன்றி ஐயா...! தங்கள் வருகையும் ஊக்குவிப்பும் மகிழ்விக்கிறது என்னை.

    ReplyDelete