நிறுவனர்:நிலாமகள். Powered by Blogger.

பறத்தல் - பறத்தல் நிமித்தம்

வகையினம் >

பிரபாகரன் பற்றிய -25 குறிப்புகள்..
.
நிச்சயம் படிப்பவரைச் சிலிர்க்கச் செய்திடும்.

மனதுக்குப் பிடித்த ஒரு புத்தகத்தை எத்தனை முறை வாசித்தாலும் மனம் புதிய உணர்வைப் பெறுவதைப் போலத்தான், பிரபாகரன் பற்றிய நிகழ்வுகளைப் படிப்பதும்.

தமிழனுக்கு வீரத்தின் அர்த்தத்தை தனது வாழ்க்கை மூலம் எடுத்துக் காட்டியவர் அல்லவா... தம்பி எனத் தமிழர்களால் அழைக்கப்படும் அண்ணன். 30 ஆண்டு காலம் இலங்கை அரசுக்குக் கிலியூட்டிய புலிப் படைத் தலைவர். வீரத்தின் விளைநிலமாக தமிழ் ஈழத்தை மாற்றிக்காட்டிய மனிதர்!
.
01.அரிகரன் - இதுதான் அப்பா வேலுப்பிள்ளை முதலில்வைத்த பெயர். ஒரு அண்ணன், இரண்டு அக்காக்களுக்கு அடுத்துப் பிறந்த கடைக்குட்டி என்பதால், துரை என்றுதான் எல்லாரும் கூப்பிடுவார்கள். பிறகு என்ன நினைத்தாரோ, பிரபாகரன் என்று மாற்றுப் பெயர் சூட்டியிருக்கிறார் அப்பா!
.
02.வல்வெட்டித்துறையைச் சேர்ந்த பெரியசோதி, சின்னசோதி, சந்திரன், குட்டிமணி, தங்கத்துரை, சந்திரன், பிரபாகரன் ஆகிய ஏழு பேர் சேர்ந்துதான் விடுதலை இயக்கத்தை முதலில் தொடங்கினார்கள். இதற்குப் பெயர் வைக்கவில்லை. பிரபாகரன்தான் அணியில் இளையவர் என்பதால், ‘தம்பி' என்றார்கள். எல்லார்க்கும் தம்பியானதும் அப்படித்தான்!
.
03.பிரபாகரனுக்கு அரசியல் முன்னோடியாக இருந்தவர் பொ.சத்தியசீலன். "போலீஸ் நிலையங்களைத் தாக்கி ஆயுதங்கள் எடுக்க வேண்டும்" என்று இவரைப் பார்த்து பிரபாகரன் கேட்க, "எடுத்தால் எங்கே வைப்பது" என்று சத்தியசீலன் திருப்பிக் கேட்க... அதன் பிறகுதான் காட்டு வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்!
.
04.பிரபாகரன் அடிக்கடி படித்த நாவல் - அலெக்ஸ் ஹேவியின் ‘ஏழு தலைமுறைகள்'. அதில் ‘இடியும் மின்னலும் இல்லாமல் மழை பொழியாது. போராட்டம் நடத்தாமல் யாரும் எதையும் தர மாட்டார்கள்' என்ற வரிகளை அடிக்கோடு போட்டுவைத்திருந்தார்!
.
05.மிக மிக வேகமாக நடக்கும் பழக்கமுடையவர் பிரபாகரன். பள்ளிக்கூடம் போகும்போது சட்டைப் பையில் இருக்கும் பேனாவை இடது கையால் பிடித்துக்கொள்வாராம். அந்தப் பழக்கம் பிற்காலத்திலும் தொடர்ந்திருக்கிறது!
.
06."ஏன் எப்போதும் சீருடையில் இருக்கிறீர்கள்?" என்று வெளிநாட்டுத் தமிழர் ஒருவர் கேட்டபோது பிரபாகரன் சொன்னது, "யாரும் அணியத் துணியாதது இந்த உடைதான். அதனால்தான் எப்போதும் இதில் இருக்கிறேன்."
.
07."பிரபாகரன் ஒருபோதும் புகைத்தது இல்லை. மது அருந்தியதும் கிடையாது. மற்றவர்களிடமும் இப்பழக்கத்தை அவர் விரும்பவில்லை. விடுதலைப் புலிகள் அமைப்பில் புகைபிடிக்கும் பழக்கம்கொண்ட ஒருவரை பிரபாகரன் சகித்துக்கொண்டார் என்றால், அது பாலசிங்கமாகத்தான் இருக்கும். பாலாவிடம் இருந்து வரும் சிகரெட் நெடி பிரபாகரனுக்குப் பிடிப்பதில்லை. எனவே, பிரபா முன்னிலையில் பாலாவும் சிகரெட் பிடிப்பதில்லை" என்கிறார், பாலசிங்கத்தின் மனைவி அடேல்!
.
08.அக்காவின் திருமணத்தையட்டி தனக்கு அணிவிக்கப்பட்ட மோதிரத்தை விற்றுத்தான் அமைப்புக்கு முதல் துப்பாக்கி வாங்கப் பணம் கொடுத்தார் பிரபாகரன். அதன் பிறகு அவர், நகை அணிவதில்லை!
.
09.எந்த ஆயுதத்தையும் கழற்றி மாட்டிவிடுவார். ஆயுதங்கள் தொடர்பான அனைத்து ஆங்கிலப் புத்தகங்களின் மொழிபெயர்ப்புகளும் அவரிடம் இருந்தன. ‘தொழில்நுட்ப அறிவு இல்லாதவன் முழுமையான போராளியாக முடியாது' என்பது அவரது அறிவுரை!
.
10.ஒவ்வொரு நவம்பர் மாதமும் 25, 26, 27 ஆகிய மூன்று நாட்களும் பிரபாகரன் உண்ணாவிரதம் இருப்பார். 26 அவரது பிறந்த நாள். 27 மாவீரர் நாள். அன்று மாலை மட்டும் தான் திரையில் தோன்றி அனைவருக்குமான உரையை நிகழ்த்துவார்!
.
11.‘இயற்கை எனது நண்பன்; வாழ்க்கை எனது தத்துவாசிரியன்; வரலாறு எனது வழிகாட்டி' என்ற வார்த்தைகளைத்தான் அவர் தனது டைரியில் எழுதிவைத்திருப்பார்!
.
12.போரில் யார் காயமடைந்து பார்க்கப்போனாலும், ‘பொன்னியின் செல்வன்ல வரும் பெரிய பழுவேட்டரையருக்கு 64 வீரத் தழும்புகள் உண்டு' என்று சொல்லித் தைரியம் கொடுப்பாராம் பிரபாகரன்!
.
13.ஆறு கோடியே 43 லட்சம் ரூபாய் பிரபாகரனுக்கு எம்.ஜி.ஆர். கொடுத்திருக்கிறார். பிரபாகரன் கொடுத்த துப்பாக்கி ஒன்றைத் தனது தலையணைக்குக் கீழ் எம்.ஜி.ஆர். வைத்திருந்தார்!
.
14.பேனாவை மூன்று விரல்களால் பிடித்துத்தான் அனைவரும் எழுதுவார்கள். பிரபாகரன் எழுதும்போது ஐந்து விரல்களாலும் பிடித்திருப்பார்!
.
15.பிரபாகரனுக்குப் பிடித்த புராணக் கதாபாத்திரம் கர்ணன். "தன்னிழப்புக்கும் உயிர்த் தியாகத்துக்கும் ஒவ்வொரு மணித்துளியும் தயாராக இருந்தவன் கர்ணன். அவனை எப்போதும் நினைப்பேன்" என்பார்!
.
16.தமிழீழம் கிடைத்த பிறகு எனது பணி காயம்பட்ட போராளிகளைக் கவனிப்பதாகவும் பாதிக்கப்பட்ட மக்களின் முன்னேற்றம் பற்றியதாகவும் மட்டுமே இருக்கும் என்று பிரபாகரன் பகிரங்கமாக அறிவித்திருந்தார்!
.
17.பிரபாகரன் குறித்து தங்களது வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தில் மிக உயர்வாக எழுதிய இந்திய ராணுவத்தின் உயர் அதிகாரிகள் மேஜர் ஜெனரல் ஹர்கிரத் சிங், ஜெனரல் சர்தேஷ் பாண்டே, ஜெனரல் திபேந்திரசிங். இவர்கள் மூவரும் இந்திய அமைதிப் படைக்குத் தலைமை வகித்து பிரபாகரனுடன் மோதியவர்கள்!
.
18.அநாதைக் குழந்தைகள் (போரில் பெற்றோரை இழந்தவர்கள்) மீது அளவுக்கு அதிகமான பாசம் வைத்திருந்தார் பிரபாகரன். அவர்களைப் பராமரிக்க செஞ்சோலை சிறுவர் இல்லம், காந்தரூபன் அறிவுச் சோலை ஆகிய காப்பகங்களை வைத்திருந்தார். பெற்றோர் இல்லாத அநாதையாக அமைப்புக்குள் வந்து பெரிய போராளியாக ஆகி மறைந்தவர் காந்தரூபன்!
.
19.உயிர் பறிக்கும் சயனைட்தான் எங்கள் இயக்கத்தை வேகமாக வளர்த்த உயிர்' என்றார் பிரபாகரன்!
.
20.பிரபாகரனைச் சிலர் குறை சொன்னபோது, அமைப்பில் இருந்து ஒன்றரை ஆண்டுகள் விலகி இருந்தார்!
.
21.பிரபாகரனிடம் நேரடியாக போர்ப் பயிற்சி பெற்ற முதல் டீம்: கிட்டு, சங்கர், செல்லக்கிளி, பொன்னம்மான். இரண்டாவது டீம்: சீலன், புலேந்திரன். மூன்றாவது டீம்: பொட்டு, விக்டர், ரெஜி. இவர்கள்தான் அடுத்து வந்தவர்களுக்குப் பயிற்சி கொடுத்தவர்கள்!
.
22.தன் அருகில் இருப்பவர் குறித்து யாராவது குறை சொன்னால் பிரபாகரன் பதில் இப்படி இருக்குமாம், "நான் தூய்மையாக இருக்கிறேன். இறுதி வரை இருப்பேன். என்னை யாரும் மாற்ற முடியாது. நீங்கள் குறை சொன்னவரை என் வழிக்கு விரைவில் கொண்டுவருவேன்!"
.
23."ஒன்று நான் லட்சியத்தில் வென்றிருக்க வேண்டும். அல்லது போராட்டத்தில் இறந்திருக்க வேண்டும். இரண்டும் செய்யாத என்னை எப்படி மாவீரன் என்று சொல்ல முடியும்?" என்றுஅடக்க மாகச் சொல்வார்!
.
24.மிக நெருக்கடியான போர்ச் சூழல் நேரங்களில் பெட்ரோல் அல்லது ஆசிட்டுடன் ஒருவர் பிரபாகரனுடன் இருப்பாராம். அவருக்கு ஏதாவது ஆனால், உடனேயே உடலை எரித்துவிட உத்தரவிட்டிருந்தார். எதிரியின் கையில் தன் சாம்பல்கூடக் கிடைக்கக் கூடாதுஎன்பதில் தெளிவாக இருந்திருக்கிறார்!
.
25.‘தமிழீழ லட்சியத்தில் இருந்து நான் பின்வாங்கினால் என்னுடைய பாதுகாவலரே என்னைச் சுட்டுக் கொல்லலாம்' என்று பகிரங்கமாக அறிவித்திருந்தவர்...

நன்றி : முகநூல்

Share on:


             “மனிதர்கள் தவித்துக் கொண்டிருக்கும்படி வாழ்க்கை இருக்கிறது. துடிப்பும் உயிர்ப்பும் மிக்கதாகவே அவர்கள் மனம் இருக்கிறது. தூண்டப்பட்ட மனமும் சிறகொடிக்கும் வாழ்வும் மனிதர்களுக்கு. சிக்கல்களின் நெரிசல்களுக்கிடையே மனிதர்கள் சதா நோன்பிருப்பது அன்பெனும் சிறு வரத்துக்காகத் தானே!”  இப்படிச் சொல்ல வண்ணதாசன் அன்றி வேறு யாரால் முடியும்?!

                 விதைகள் முளைக்கவும் மொட்டுக்கள் மலரவும் மலர்கள் கனியவும் உள்மறைந்து துணைநின்று ஊக்குவிக்கும் பிரபஞ்ச சக்தியின் மறுவுருவாய், ஒவ்வொரு பெண்ணும் குடும்ப அமைப்பின் ஆணிவேராய்.

                ஆண் என்னும் பித்தளையோ, குடும்பம் எனும் செப்புக் குடமோ, சமூகம் எனும் வெண்கலமோ எதுவானாலும் பெண் எனும் ஈயம் பூசப்பட்டாலன்றி இவை  யாவும் பயன்படுத்த முடியாமல் உபயோகமற்று விடும் என்கிறார் நம் தோழி ஹுசைனம்மா.

பெண்சாதி....

                மனிதர்கள் ஆண், பெண் என இரு சாதியாகிறார்கள்.  ‘இட்டார் பெரியோர்; இடாதோர் இழிகுலத்தோர்'என்ற முன்னோர் வாக்கும் நினைவில் கொள்ள வேண்டியிருக்கிறது.
                “பெண்ணுக்கு சாதி அமைப்பு வாழ்க்கை முறையில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. பெண் சாதியை ஒரு விஷயமாக எடுத்துக் கொள்வதில்லை. சாதி, தந்தை சார்ந்து வருகிறது. ஆணுடன் தொடர்பு கொண்ட அமைப்பாக இருக்கிறது. அவனுக்கு பெருமையைத் தருகிறது. கெளரவத்துக்காக பெயருக்குப் பின் சாதிப் பெயர் சேர்ப்பவர்களும் ஆண்களே.பெண் ஒடுக்கப்பட்ட சாதியிலும் மிகக் கீழான நிலையிலும் இருக்கிறாள். இங்கே எல்லாவற்றிலும் தாழ்ந்த சாதி பெண் சாதிதான். இந்த ஆழ்மன உளைச்சலால்தானோ துணிந்து கலப்புத் திருமணம் செய்கிறாள்! பெருகி வரும் கலப்புத் திருமணங்களின் அடிப்படை இந்தப் புள்ளியில் தான் துவங்குகிறது.
                தன் ஆதங்கங்களை காது கொடுத்துக் கேட்கவும் ஆளற்றுப் போய்தான் கோயில்களையும் பலவகை தெய்வங்களையும் பரிகாரங்களையும் பிரார்த்தித்து சுமை குறைக்க அலையாய் அலைந்து தவிக்கிறாள். ஓரறிவு ஈரறிவு உயிர்களைவிடவும் சந்தோஷம் குறைந்தவளாகிறாள்.” நண்பர் சண்முகவேல் சொல்வதையும் நாம் சிந்திக்கத் தான் வேண்டியிருக்கிறது.
               
                “இந்த உலகம் ஆண்களுக்கானது. அதில் பெண்களுக்கான இடம் கழிப்பறை போல... அவர்களின் கடன்களைக் கழிக்க...” தன் சிறுகதையொன்றில் பாரதிக்குமார் சொல்லிச் செல்வது நம் சிந்தையை கிள்ளிச் செல்கிறதல்லவா...!

                பெருகி வரும் விவாகரத்து செய்திகள் ‘பெண்கள் முன்பு போலில்லை' என்ற அங்கலாய்ப்பை முதியோரிடம் ஏற்படுத்தியுள்ளது. ஆம்! உண்மைதான்! கணவனிடம் அடியும் உதையும் வாங்கிக்கொண்டு, சாராயம், சிகரெட் நாற்றத்தையும் பொறுத்துக் கொண்டு குழந்தைகளைக் காரணம் காட்டி வாழ்க்கையை தியாகம் செய்யும் பெண்கள் இன்று இல்லைதான்!
                பணியிடங்களில் ஆண்-பெண் நட்பு விபரீதமாகி விடுகிறது பலநேரங்களில். வக்கிர ஆண்களிடம் சரியான விழிப்புணர்வு இன்றி அல்லல் படும் பரிதாபம் பெண்கள் மட்டும் எதிர்கொள்ளும் சிக்கல். ஆணின் ஆசை நிராசையாகி ஏமாற்றப்படும் போது விளைவுகள் பெண்ணுக்கு எதிரானதாகவே முடிகின்றன. அவதூறு தொடங்கி பலாத்காரம் வரை ஏமாற்றத்தை ஈடு செய்ய வக்கிர மனம் பரிதவிக்கிறது.
       பெண் என்பவள் ஆணுக்காகவே படைக்கப் பட்டவள் என்பதும், திருமணம், குடும்பம், குழந்தை பெறுதல் எனும் தளைகளால் பிணைக்கப் பட்டவள் என்பதும், கணவனை இழந்தால் பின்பற்ற வேண்டிய கொடூர சடங்குகளும் சம்பிரதாயங்களும் எந்தளவுக்கு உறுத்தலாய் இருந்திருக்கின்றன? உடன்கட்டையேறியவர்களையெல்லாம் கேள்விப்படும் நாம் படிப்படியாக கட்டுடைத்துக் கொண்டுதான் இருக்கிறோம். வெட்ட வெட்டத் துளிர்க்கும் முருங்கையாய், வேரோடிய அருகு நீர்ப்பசை கண்டதும் துளிர்ப்பதுபோல் கண்ணுக்குப் புலனாக மூக்கணாங்கயிறுகள் கணக்கற்று வெளிக்கிளம்பியபடிதான். மாற்றத்தை ஏற்கிற மனோபாவம் அனைவருள்ளும் உள்ளது. 

     வாழ்க்கை தரும் ஒவ்வொரு வலியும் அந்தந்த நேரத்துக்கான வலியின் ரணம்தான். ஆனால் மிச்சமிருக்கும் வாழ்க்கைக்கான பக்குவம் ஒவ்வொரு வலியிலும் பரிசாகக் கிடைக்கிறது” மேலாண்மை வகுப்புகள் எடுக்கும் மோகன்ஜி  சொல்வதுதான் என் நினைவுக்கு வருகிறது.


                “இன்பங்களை விட துன்பங்களே; செல்வத்தை விட வறுமையே; புகழ்மொழிகளை விட ஏமாற்றங்களே மனித ஆற்றலை வெளிக் கொணர்கின்றன”  சுவாமி விவேகானந்தர் கூட இதைத் தான் சொல்லியிருக்கிறார். மரங்கள் காற்றை சுத்தம் செய்கின்றன. நம்பிக்கை மனசை சுத்தம் செய்கிறது.


      சிறுமை கண்டு பொங்கவும், முதலடி எடுத்து வைக்கவும்  துணிவுதான் வேண்டியிருக்கிறது. பெண்கள் அதிகம் படிக்கிற, அதிகமாக வேலைக்குச் செல்கிற, பொருளாதார ரீதியாக தன்னிச்சையாக வாழ முடிகிற இந்நாட்களில் தான் பெண்களுக்கு எதிரான கொடுமைகள், குற்றவியல் நடவடிக்கைகள் பெருகி வருகின்றன. 
     படிப்பும் வேலையும் பெண்ணுக்கு சுய மதிப்பை வழங்கியிருக்கின்றன. இவ்வளவு காலமும் அப்பாவிப் பெண்களின் தியாகத்தில் தான் குடும்பம் என்ற ஒன்று இருந்ததென உணரும் போது சமூகத்தில் நல்ல மாற்றங்கள் வருகின்றன.

     எந்த ஆடும் வயது முதிர்ந்து நோயுற்று இறப்பதில்லை; எந்தப் பெண்ணும் வாழ்நாளெல்லாம் நிம்மதியுடன் இருப்பதில்லை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாய் ஒவ்வொரு காலகட்டத்தில் சிக்கல்கள். நிதானித்து முடிச்சவிழ்ப்பவர்கள் நினைக்கத் தக்கவர்களாகின்றனர். ‘பெண்ணாகப் பிறந்து விட்டால் மிகப் பீழை இருக்குதடி' எனும் வரிகள் அச்சமூட்டினால், ‘மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா' எனும் வரிகள் பெருமிதம் கொள்ளச் செய்கிறது.



                ஆறாம் அறிவுடன் பிறந்த நாம் நம்மைச் சுற்றி இயங்கிக் கொண்டிருக்கும் மனிதர்களை, நிகழ்வுகளை அவதானித்தபடியே வாழ்கிறோம். வாசிக்கும் பழக்கத்தால் பல செய்திகளும் நம்முள் வசப்படுகிறது. மொழியெனும் பெரும் ஊடகத்தால் சக மனிதர்களுடன் அளவளாவி பலவற்றை அறிந்து கொள்ள புரிந்து கொள்ள வாய்ப்பிருக்கிறது. வாழ்ந்திருக்கும் சொற்ப காலத்தில் உடல் நோயற்றிருக்கவும் மனம் கவலையற்றிருக்கவும் உயிர் பிறருக்கு உதவியாயிருக்கவும் முயலலாம். இதில் ஆணென்ன பெண்ணென்ன? 

      அன்பே அனைவருக்கும் பொது.

# மகளீர்  தின வாழ்த்துக்கள்! 

Share on:

                      
‘கொக்காம் பயிர்’ கவிதைத் தொகுப்புக்கான வாசிப்பனுபவம்

                கட்டுப்பாடற்ற அறிவுத் துறையாகிய இலக்கியத்தில் கவிதை, சிறுகதை, புதினம் போன்ற படைப்பிலக்கியத்தின் ஆதார மூலக்கூறுகளான பேசுபொருள், வடிவம், சமூகப் பயன்பாடு மற்றும் கலாச்சாரப் பின்னணி எப்படியாயினும் படைப்பாளியும் படிப்பாளியும் ஒன்றிணையும் புள்ளியான ஒத்த அனுபவத்தை தர வல்லவை காலத்தால் நிலைக்கின்றன.
                படைப்பின் சொற்கள் வர்ணனைகள் குறியீடுகள் படிமங்கள் போன்றவை மொழியின் வழி கற்பனையைத் தூண்டி நம் ஆழ் மனதைப் பாதிக்க அனுமதிப்பதே இலக்கிய வாசிப்பின் ஆகச்சிறந்த பயன்பாடாகிறது.
                புத்தக வாசிப்பு நம் மனவீட்டின் மேலதிகமான சாளரங்களாகி அறிவு வெளிச்சத்தைத் தர வல்லதாகின்றது. ஒவ்வொரு வரியும் சிந்தனைத் திறப்பாகி பலவித தத்துவார்த்தங்களை உணர்த்தி சக மனிதர்களுடன்- சமூகத்துடன் ஆன பிடிவாதங்கள், வக்கிரங்கள், அடாவடிகள் எல்லாம் தணிந்து மனம் பண்பட, அறிவைத் தெளிவாக்கிட  பெரும் துணையாய்  இருக்கிறன.
      நதிநீர் இணைப்புத் திட்டச் சிக்கல்களைத் தாண்டி காலகாலமாய்   சாத்தியமற்ற சில உறவு இணைப்புகள் உண்டு,  உறவுகள் யாவற்றிலும் கண்ணாடிப் பொருளைக் காட்டிலும் கவனமாகக் கையாள வேண்டியிருப்பது மாமியார் மருமகள் உறவே எனலாம். பாதரசம் போன்று பாதுகாத்துப் பயன்பெறத் தக்கது இவ்விணைப்பு என்றும் கொள்ளலாம்.
       இக்கற்பிதத்தை உடைக்கும் விதமாக, கவிதையுலகில் தன் தாயையும் தாரத்தையும் களமிறக்கியுள்ள தோழர் செந்தில்பாலாவை சற்றும் தடுமாறாமல் பின்னொற்றியுள்ளனர் இருவரும்!
                குடும்ப வாழ்வில் இரு தலைமுறைப் பெண்களின் அனுபவங்களை, வலிகளை, புரிதல்களை, மகிழ்தருணங்களை வெளிச்சமிடுகின்றன தொகுப்பின் கவிதை வரிகள். 
      ‘அம்மா சொன்ன கதை'களில் வட்டார மொழியில் அனாயசமாகக் கவிதைபல தந்தவர், அம்மாவின் கவிதைகளை- அவருக்கிணையான மனைவியின் கவிதைகளை ஒரே தொகுப்பாக்கி நமக்குப் படையலிடுகிறார் ஹேவிளம்பி வருடத்து (2018) தைப்பொங்கலில்! சுவை கூட்டும் நெய்யாக விரவியிருக்கின்ற மெல்லிய நகைச்சுவை  வாசிப்பை ருசியாக்குகிறது.

மாமியார் மெனை:
                விவசாயத்தில் களை எடுப்பது, நடவு நடுவது, புடைப்பது, சலிப்பது இன்ன பிறவற்றை பெரும்பான்மைப் பெண்கள் அனாயசமாக செய்தாலும் அறுவடையில் ஈடுபடுவது சிறுபான்மைப் பெண்களே.
                பாலாவின் அம்மா பொழுதுக்கும் நெல் அறுத்து, வீடு வந்து தினை குத்திப் புடைத்து, உலை கூட்டி பின் முருங்கைக் கீரை ஆய்ந்து சமைத்தவர், சாப்பிடாமல் சோர்ந்து படுத்திருக்கிறார். வயிற்றுப் பசியை விஞ்சிய உடல் அசதி! ‘சாப்பிட்டுப் படு' என்பதில் அவரின் மாமியார் அம்மாவாகிறார். எப்படியிருந்தவர் ...?
                80 வயதிலும் முக்கி முணங்கி தள்ளாமையுடன் சமைத்து மகன் வந்தால் தானே பரிமாறிய மாமியார்!
      புகுந்த வீட்டில் தன் சகிப்புத் தன்மையாலும் தளராத உழைப்பாலும், பொறுமையைக் கவசமாக்கி, கல்லையும் கரைக்கும் வல்லமை கொண்ட மருமகள் மாமியாருக்கு மகளாகிவிடும் சூட்சுமம் காட்டும் கவிதையிது.
                ‘விடும்மா தூங்கட்டும். பசிச்சா சாப்பிடப் போறா' என்ற கணவனின் சொல்லைக் கரிசனமாக எடுத்துக் கொள்வதும் பரிவற்றதாக எடுத்துக் கொள்வதும் வாசிப்பவரின் மனப் பாங்கிற்கு ஏற்ப மாறுபடும். ஏனெனில், பெண் தன் சுய உழைப்பில் கிடைத்த நெல்லை கும்பாபிஷேகத்துக்குக் கொடுக்கும் சுதந்திரம் அற்றவள் என்ற கணவனையும், மகனின் வெள்ளாமையில் கடலை பறித்தாலும் தன் கூலி தனி என்றும் எண்ணம் கொண்ட தந்தையையும்  முந்தைய பக்கங்களில் கடந்ததால்.
                முந்தைய தலைமுறைப் பெண்களின் உடல் ஆரோக்கியத்தைப் பதிவிடும் இதே கவிதையில் பொழுதுக்கும் நெல் அறுத்தாலும் தினை பாதி நெல் பாதியாக சமைத்து உண்ணவேண்டிய பொருளாதார நெருக்கடியும் பதிவாகிறது. அவரது தலைமுறையில் நின்றும் குனிந்தும் அமர்ந்தும் தொடர்ச்சியான வேலைகளுக்கிடையே ஓய்வென்பது மாறுபடும் வேலையாக மட்டுமே இருந்திருக்கிறது.  தலைமுறை இடைவெளியில் இட்டு நிரப்பப் படும் இவ்வாறான பல நுட்பங்களும் கவிதைகளில் புதைந்திருக்கின்றன.
                வெத்தல, பொயல வாங்கப் போய் வெத்தல பாக்கு வாங்கிவிடுவதாய் சிரிப்பூட்டி உலகியலை ரசிக்க வைக்கின்றது. ஆயாவும் பேரனும் அடித்து விளையாடும் கவிதை சிரித்துவிட்டு சிந்திக்கத் தூண்டுகிறது கலைவாணர் நகைச்சுவை போல்.
                உடலளவில் தனித்திருக்கும் பல சமயங்களிலும் மனசில் நிறைந்திருக்கும் நேசம் மிக்கவர்களால் தனிமையின் வெறுமையற்றுப் போவதுண்டு நமக்கும். மகனுக்கும் மகளுக்கும் போன் பேசி மனசுக்குள் அவர்களை மடியில் போட்டு தூங்கப் போகும் கவிதையில் தாயன்பின் நெகிழ்வூட்டும் மகத்துவம் இதமானது.
                இருப்பினும் மாமியார் காலத்து மொத்த வாழ்வும் விரல் விடும் சொற்களில் அடங்கிப்போன இராமாயணம். இன்னும் பல பெண்களின் கதையும் அப்படித்தான். இக்கவிதையை சமர்ப்பணக் கவிதையுடன் கொண்டு கூட்டிப் பொருள் கொண்டால், ஆண்-பெண் இணைந்த வாழ்வியல்,  சமூக வட்டத்துக்குள் பொதிந்து கொள்ளும் சமச்சதுரமாகிறது. அவர்கள் நமக்காக... நாம் அவர்களுக்காக!

மருமகள் மெனை:
                பிறந்த வீட்டுப் பெருமைகளையும் புகுந்த வீட்டுப் புகார்களையும் தாண்டி கடைசியில் வரும் ஒற்றை ரூபாய், காத்திருக்கும் ஆறடி என்றெல்லாம் தத்துவம் பேசுவதில் வயசுக்கு மீறிய பக்குவம் புரிகிறது. இதன் உச்சமாகவே துணியில் ஒட்டியிருக்கும் மிச்ச அழுக்கை மனசுடன் ஒப்பிடுவது.
                பத்திருபது வரிகளில் ஒற்றைச் சொல் கவித்துவமாவதும் மூன்றே வரியில் சொல்லுக்குச் சொல் விளக்க விளக்க விரிவதும் படைப்பியலின் விந்தை.
                தன் தேவைக்குப் பிறரை யாசிப்பதின் வலி சொல்லுமிரு கவிதையின் உள்ளரசியல் பற்றி பேசப் பேச விரியும்.
                ‘கலர் கலராயிருக்கு' என்றதன் நெரிக்கும் எள்ளலும், ‘நீ மட்டும்தான் வந்தாயா?' என்றதன் பின் வெடித்த அழுகையும் அவ்வாறே.
                ‘கல்லிலிருந்து சிலையாக, சிலையிலிருந்து கல்லாக' என்றது ‘அண்டமே பிண்டம்; பிண்டமே அண்டம்’ என்பதன் சுருக்க விளக்கம். மலையுச்சியில் உடைபட்டு உருண்டு வரும் பாறைச் சிதறல் வழுவழுப்பான கூழாங்கல்லாவது போலல்லவா மானுட வாழ்நிலை!
                அக்காவை விட அதிக மதிப்பெண் பெற்ற கவிதையில் தன்னம்பிக்கை, விடாமுயற்சி, வைராக்கியம் இதுவே சாதிக்க வைக்கும் என்ற சிறுகுறிப்பு.
                ‘உயிருள்ளது தான் தூங்கும்' என்ற கவிதை சிறு பிள்ளைக்குப் புரியாமலிருக்கலாம். இலைமறை காயாக இருப்பது உரியவர்களுக்குப் புரிந்தால் போதும்.
                இரு மெனைகளையும் நட்டுக் கரையேறிய சாந்தாம்மாவின் மகனாக, ஆதிலட்சுமியின் கணவனாக 'கொக்காம்பயிர்' போட்ட செந்தில்பாலா அறிமுகப்படுத்தப் படும் நாள்,  நம்மை மகிழ்விக்கும் பெருநாள்!
                                                                                                              


Share on:

செந்தமிழ்ச்சாரலின் சொந்தங்களுக்கு கவிஞர் சக்தி அருளானந்தம்

'நான் படிச்சாச்சு... நீங்க?' பகுதியில் 

#இலகுவானதெல்லாம்_இலேசானதல்ல கவிதைத் தொகுப்பின் நயம் பாராட்டல்....

நெய்வேலியைச் சேர்ந்த நிலாமகள் சௌந்தர சுகன் இதழ் வழி அறிமுகமானவர்.சுகன் இதழின் விழா ஒன்றில் கட்டுரை வாசிக்க மேடையேறியபோது நேரில் அறிமுகம்.பிறகு தனலட்சுமி பாஸ்கரனின் நூல் வெளியீட்டு விழாவுக்கு சேலம் வந்தபோது நட்பு நெருக்கமானது.பறத்தல்,பறத்தல் நிமித்தம் நிலாவின் முதல் கவிதைத் தொகுப்பு. இது இவரின் இரண்டாவது தொகுப்பு.

முதல் தொகுப்பை அணுகும் போதும், இரண்டாம் தொகுப்பை அணுகும் போதும் நாம் கொள்ளும் மன நிலை வேறு வேறு
தவழும் குழந்தை எழுந்து நிற்க முயற்சி செய்வது, ஒன்றிரண்டு அடிகள் எடுத்து வைப்பது நம்மைக் கொண்டாட வைத்துவிடுகிறது.ஆனால் இரண்டாம் தொகுப்பு என்னும் போது ஒரு கவிஞருக்கு ஒருவித எதிர்பார்ப்புச் சுமையை ஏற்றிவிடுகிறது.

"முந்தையதில் பல புரிதல்களும்,தெளிதல்களும்,பக்குவங்களும் சாத்தியமாக்கியிருக்கிறது.இவ்வேளையில்" இது நிலாமகளின் இரண்டாம் தொகுப்பின் முன்னுரையிலிருந்து.எனவே அந்தப் புரிதல்,தெளிதல்,பக்குவம் கவிதைகளிலும் பிரதிபலிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம்.

கவிதையின் வடிவம் எளிமையாக இருந்தாலும் அதன் உள்ளடக்கம்,அது பேசும் விசயம் எளிமையானதல்ல என்கிற புரிதலுக்கு வருகிறோம். அதைப்போல இந்தத் தொகுப்பு 'இலகுவானதெல்லாம் லேசானதல்ல என்கிறது.
'எதிரிலிருக்கிறாய் நீ
ஊர்தியின் எரிபொருளாகவா
பாய்மரத் துடுப்பாகவா
பஞ்ச பூதங்களிலுமா
தேடுமென்னுள்ளேயா?'

நிலாமகள் எதைத் தேடுகிறார்?தேடுவதை அடைந்தாரா?
அவர் தேடல் முடியவில்லை
"இன்னும் இன்னும்
எத்தனை பிரதட்சயம்
இருக்கிறதோ இறைவசம்!!"

கண்ணுக்கெட்டாத தொலைவு செல்லவேண்டியிருக்கிறது இந்தப் பயணிக்கு.பயணியைக் கடந்து செல்கின்றனர் பலர்.
"காற்றாக சிலர்
கல் நெஞ்சினராக சிலர்
நிழலாக சிலர்
பெருவெளியாக சிலர்
கால் இடறும் நெருஞ்சியாக சிலர்..."
சக பயணிகள் எத்தகையவர்களாக இருந்தாலும்,இந்தப் பயணி பலருக்கும் நிழலாக,குடையாக,உயிர்ப்புடன் இருப்பதுடன்
"வழி நெடுக
மரங்களும் கற்களும் இருக்குமென "
நம்பித் தொடர்கிறார் தன் நீள் பயணத்தை.

வாழ்க்கையின் மீதான,சக மனிதர்களின் மீதான நம்பிக்கையை நிலாமகள் இழக்கவில்லை. தாண்டவமாடிய 'தானே' புயலுக்குப் பின்னும்
"எல்லாம் கடந்தும்
எம் தோட்டத்தில்
தப்பிப் பிழைத்த
செம்பருத்திச் செடியின்
ஒக்றைப்பூ"

கவிஞருக்கு பெரும் பெரும் எதிர்பார்ப்புகளின்றி சிறிய விசயங்களே போதுமானதாயிருக்கிறது.அதிலேயே அவரும் நிறைவு கொள்கிறார்.அதை இந்தத் தொகுப்பின் முன்னிலையிலும் வண்ணதாசனின் மேற்கோளை எடுத்தாண்டிருக்கிறார்.
"#இப்படித்_தான்_இருக்கிறேன்_நான்_இப்படி_இருப்பது_போதும்_எனக்கு".
-வண்ணதாசன்.

'வரவேற்பறையை
தன் வாசத்தால் நிரப்பப்
போதுமானதாயிருக்கிறது
தோட்டத்தில் அரும்பிய
ஐந்தாறு மல்லிகைகளுக்கு"

'யாசி'என்றொரு கவிதை .கேளுங்கள் தரப்படும் என்பதற்கேற்ப யார் யார் என்னென்ன கேட்டார்கள்,என்னென்ன பெற்றார்கள் என்று பட்டியலிடுபவர்
'உன் நேசத்தை யாசிக்குமெனக்கு
புறக்கணிப்பை வழங்குகிறாய்'
என்கிறார் புண்பட்ட மனதுடன்.நேசத்தை யாசிக்கும் இவருக்கு வழங்கப்பட்டதோ புறக்கணிப்பு. புறக்கணிப்பை வழங்குபவருக்கு எதிராக இவர் ஏந்தும் ஆயுதம் அன்பு.
'நீ யோசித்ததுண்டா
அன்பெனும் ஆயுதம் பற்றி?!'
இப்படி அன்பை ஆயுதமாக ஏந்துவதற்கான காரணம் மீண்டும் அன்பு மலருமென்ற நம்பிக்கை.
'நினைவுப் பானை புரண்டெழுந்து
வெந்து தணிகிறது
கடந்தகாலத்துப் பிரியங்களின் ஊர்வலம்
துளிர்க்குமொரு காலமென
நம்பிக்கையில் நகர்கிறது காலம்"

பட்டியலிடும் இன்னொரு கவிதையுண்டு.நிலவின் பயன்பாட்டை நிலா இப்படி சொல்கிறார்.
விளையாட்டு பொம்மை,ஆற்றுவிக்கும் மருந்து,இயற்கையின் வெளிச்சம், அபலையின் வழித்துணை, தணிவிக்கும் தண்ணொளி,ஜொலிக்கும் பெருநட்சத்திரம்...முடிப்பு தான் இதை வேறொன்றாக மாற்றிவிடுகிறது.
'நிலவுக்கும் உண்டு
அரிதாரம் தேவையற்ற
பல அவதாரங்கள் '
'நிலவுக்கும்' என்னும் போது வேறு எது எதற்கு என்று மனம் தேடலைத் துவங்குகிறது.

நிலாமகளின் நுட்ப உணர்வு நுணுக்கமான பலவற்றை அனுமானிக்கிறது.
'பள்ளித் தண்டவாளத் துண்டில்
உள்ளுறைந்திருக்கும்
இரயில்களின் தடதடப்பும்
விழுந்து மாய்ந்த உயிர்களின்
இறுதி ஓலமும் கேட்கிறது'

ஒற்றைக் குயிலின் மென் சோகக் குரல் அவர் மனதுக்குள் உறைந்திருக்கும் வன் சோகத்தை
'அடியாழத்தில்
அமிழ்ந்துபோன
பலப்பலத் துயரங்களை அறுத்து அறுத்து
மேலெழப் போதுமானதாயிருக்கிறது'

நிலாமகள் கவிதைகளில் வெளிப்படும் இன்னொரு அம்சம் தாய்மை. கல்வி நிமித்தம் அவரைப் பிரிந்து சென்றிருக்கும் குழந்தைகள் மீதான பரிவு பசித்துக் கிடக்கும் ஊதல் காரனின் பசியை நினைத்து தாயினும் சாலப்பரிந்து உருகுகிறது.
'இன்றிரவு உறங்கலாம்
அவனும்
நிறைந்த வயிறுடன்'
-செவிக்குணவு

மென்மையாய் நகரும் நிலாவின் கவியுலகம்
'தம்மை
தகர்த்தவர்க்கும்
சிதைத்தவர்க்கும்
மிதித்தவர்க்கும்
உறுதுணையாய் இறுதிவரை..
மணலாயிரு'
என்று போதிப்பவர்க்குள்ளும் இருக்கும் வன்மம் வெளிப்படுகிறது.
'திறந்திருந்த உடற்பரப்பில்
சுருக்கென கடித்து-தன்
விடமேற்றிய சிறு குளவி...
ஏற்றிய கடுகடுப்பு குளவி பல்லியிடம் சிக்கியதும் ஏற்படும் குதூகலம்..வன்மம் தவிர்த்த வாழ்வரிதா? என்கிற  கேள்வியை நமக்குள்ளும் கவிஞருக்குள்ளும் எழுப்புகிறது.

வாழ்த்துகள் நிலா.

வெளியீடு
************
ஊருணி வாசகர் வட்டம்,
22/105,பாஸ்கர் காலனி,
3வது தெரு,விருகம்பாக்கம்,
சென்னை-600 092.

பேச:81481 94272
89393 87296

விலை₹70/-

நன்றி :
முகநூல்
கவிஞர் சக்தி அருளானந்தம்
https://m.facebook.com/story.php?story_fbid=618953895103916&id=100009679339172

Share on:
  • ← Previous post
  • Next Post →

  • கால்களை சிறகுகளாக்கும் எத்தனங்கள்.
  • உதிரும் சிறகுகளை சேகரிக்கும் குழந்தைமை.
நிலாமகள்

நிலாமகள்

View My Complete Profile
Facebook Gplus RSS

Followers


Labels
  • அசை (16)
  • அறிந்தும் / அறியாமலும் (10)
  • கவிதை (61)
  • சிறுகதை (9)
  • சுவையான குறிப்புகள் (1)
  • செல்லத்தின் செல்லம் (6)
  • தாய் மடி (2)
  • திருக்குறள் நினைவாற்றல் வழிகாட்டி (4)
  • தொடர் பதிவு (1)
  • நூல் மதிப்புரை (1)
  • நேர்காணல் (3)
  • பகிர்தல் (51)
  • படித்ததில் பிடித்தது (63)
  • மரம் வளர்த்த மனிதனின் கதை... (4)
  • மருத்துவம் (12)
  • வாழ்த்து (14)

Popular Posts

  • வில்வம் ...மருத்துவ குணங்கள்:(பகுதி - 3)
             வில்வம் பற்றிய அறிமுகம்:(அறியாதவர்கள் அடையாளம் காண)         இலையுதிர் மரவகையைச் சார்ந்த வில்வம் எல்லா இடங்களிலும் வளரும் ...
  • பல் வலியா ?
    நம் உடம்பில் ஒன்றுக்கு இரண்டாக கண், காது, கை, கால், சிறுநீரகம், சினைப்பை அல்லது விதைப்பை போன்றவை இருக்க பல்லை மட்டும் 32 ஆக படைத்ததன் ...
  • மலை வேம்பு -சில தகவல்கள்
    மலைவேம்பு (melia dubia)        மலைவேம்பு மிக வேகமாக வளரும் விலை மதிப்பு மிக்க பன்முகப் பலன் தரும் அரிய மரவகைகளில் ஒன்று. ப்ளைவுட்,ரெடிமேட்...
  • அம்மை... சில தகவல்கள்
              பேரச்சம் விளைவித்த அம்மை நோய்க்கு எதிரான ஒரு தடுப்பு நடவடிக்கையாக அம்மை குத்தும் முறையைக் கண்டுபிடித்து உலகெங்கும் பரப்பிய ஆங்கி...
  • சாகசங்கள் மீதான பேராவல்
                 குழந்தைகளை தூங்கச் செய்வது என்பது எந்த நாட்டிலும் பெரும்பான்மையும் அம்மாக்களின் பிரதான கடமையாகவே இருக்கும். பிறந்து சில ம...
  • மரம் வளர்த்த மனிதனின் கதை ... இறுதிப் பகுதி
    தொடக்கம்:  http://nilaamagal.blogspot.in/2013/10/blog-post_29.html பகுதி-1:  http://nilaamagal.blogspot.in/2013/10/1.html பகுதி-2:  htt...
  • பொடுகு எவ்விதம் உருவாகிறது?
           நம் மண்டையில் அன்றாடம் இறக்கும் செல்கள் தோலின் மேற்புறத்தில் உள்ள எபிடெர்மிஸின் (Epidermis) ஆழ் அடுக்கிலிருந்து இடைவிடாது வெளித்தள்ள...
  • ஞிமிறென இன்புறு
           'அந்த காலமெல்லாம்...' என்று பெருமூச்சு விடத்தொடங்கினாலே வயசானவங்க லிஸ்ட்ல சேர்த்துடறாங்க இன்றைய இளைஞர்கள். தன்  குழந்...
  • மரங்களின் மக(ரு)த்துவம்-2 (வேப்பமரம்)
    வேம்பு:  சிவன் கோயில் வில்வ மரம் போல் அம்மன் கோயில்களில் அவசியமிருக்கும் மரம் வேப்பமரம். இயற்கையின் வரப்பிரசாதமான இம்மரத்தின் வேர், பட்டை,...

Blog Archive

  • ▼  2020 (1)
    • ▼  March (1)
      • வானில் சில தாமரைகள்
  • ►  2019 (1)
    • ►  August (1)
  • ►  2018 (9)
    • ►  June (2)
    • ►  May (1)
    • ►  March (2)
    • ►  February (1)
    • ►  January (3)
  • ►  2017 (18)
    • ►  November (2)
    • ►  October (4)
    • ►  September (2)
    • ►  August (2)
    • ►  July (1)
    • ►  March (1)
    • ►  February (6)
  • ►  2016 (9)
    • ►  December (1)
    • ►  November (2)
    • ►  July (3)
    • ►  April (3)
  • ►  2015 (21)
    • ►  October (1)
    • ►  September (2)
    • ►  August (4)
    • ►  July (1)
    • ►  June (2)
    • ►  May (2)
    • ►  April (4)
    • ►  March (2)
    • ►  February (1)
    • ►  January (2)
  • ►  2014 (24)
    • ►  December (3)
    • ►  November (5)
    • ►  October (1)
    • ►  September (3)
    • ►  August (2)
    • ►  May (1)
    • ►  April (2)
    • ►  March (3)
    • ►  February (2)
    • ►  January (2)
  • ►  2013 (36)
    • ►  December (3)
    • ►  November (2)
    • ►  October (4)
    • ►  September (3)
    • ►  August (2)
    • ►  July (7)
    • ►  June (3)
    • ►  May (3)
    • ►  April (4)
    • ►  March (1)
    • ►  February (2)
    • ►  January (2)
  • ►  2012 (35)
    • ►  December (3)
    • ►  November (1)
    • ►  October (3)
    • ►  September (3)
    • ►  August (5)
    • ►  July (2)
    • ►  June (3)
    • ►  May (3)
    • ►  April (2)
    • ►  March (2)
    • ►  February (4)
    • ►  January (4)
  • ►  2011 (49)
    • ►  December (4)
    • ►  November (3)
    • ►  October (4)
    • ►  September (1)
    • ►  August (3)
    • ►  July (8)
    • ►  June (6)
    • ►  May (5)
    • ►  April (5)
    • ►  March (5)
    • ►  February (3)
    • ►  January (2)
  • ►  2010 (37)
    • ►  December (7)
    • ►  November (6)
    • ►  October (6)
    • ►  September (6)
    • ►  August (4)
    • ►  July (5)
    • ►  June (3)

வலைப்பூ உலகில் எங்க குடும்பம்

  • பாரதிக்குமார்
  • மதுமிதா
  • சிபிக்குமார்

போக...வர...

  • அக்ஷ்ய பாத்ரம்
    உலக திருக்குறள் மகாநாடும் விருது விழாவும் 04.09.2026 சிட்னி
    1 week ago
  • கீதமஞ்சரி
    மலைகளுக்கு நடுவில் மனம் மயக்கும் சோலை
    2 months ago
  • CrUcifiXioN
    Vintage collections
    4 months ago
  • முத்துச்சிதறல்
    துபாயில் ஏவுகணைகள்!!
    6 months ago
  • செம்மை வனம் | 'காட்டுக்குள் மான் தேடிப் போனால், மான் தெரியும். மான் மட்டுமே தெரியும்’ -பழங்குடிப் பழமொழி
    Hello world!
    8 months ago
  • சிவகுமாரன் கவிதைகள்
    சீட்டுக்கவி
    1 year ago
  • திண்டுக்கல் தனபாலன்
    அதிகார எழுத்துக்கள் அனைத்தும் குறில் / நெடில் - பகுதி 2
    1 year ago
  • ஹரணி பக்கங்கள்.......
    2 years ago
  • சமவெளி
    டில்லி தமிழ்ச் சங்கம் - 23-02-2017
    6 years ago
  • VAI. GOPALAKRISHNAN
    நினைக்கத் தெரிந்த மனமே ... உனக்கு மறக்கத் தெரியாதா?
    6 years ago
  • Thanjai Kavithai
    8 years ago
  • வண்ணதாசன்
    இயல்பிலே இருக்கிறேன்
    8 years ago
  • அழியாச் சுடர்கள்
    மௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்
    8 years ago
  • வானவில் மனிதன்
    கவிக்கோ அப்துல் ரகுமான்- ஒரு அஞ்சலி
    9 years ago
  • ஊமைக்கனவுகள்
    அட! இப்படியும் எழுதலாமா?
    9 years ago
  • கோவை2தில்லி
    வண்ணங்களின் சங்கமம்!
    9 years ago
  • ரிஷபன்
    பிச்சி
    10 years ago
  • அடர் கருப்பு
    யார் இந்த அயோத்திதாசர் ? 1845-1914
    10 years ago
  • சைக்கிள்
    இருள் வெளிச்சம்
    10 years ago
  • வட்டங்களில் சுழலுது வாழ்க்கை
    இந்திய வாகனப் பதிவெண் இரகசியம்
    11 years ago
  • ∞கைகள் அள்ளிய நீர்∞
    முந்நூறு ஒட்டகங்களும், ஒரு நாயும்.
    12 years ago
  • கலர் சட்டை நாத்திகன்
    கலர் சட்டை: 1
    13 years ago
  • நசிகேத வெண்பா
    நூற்பயன், நன்றி
    14 years ago
  • இன்னுமொரு கோணம்
    எதுக்கு இவ்வளவு Build Up?
    15 years ago
  • வந்தேமாதரம்
தீதும் நன்றும் பிறர்தர வாரா!
புறநானூறு-192

கணியன் பூங்குன்றனார்

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்
குறள்:314 | அறத்துப்பால் | இன்னா செய்யாமை

திருவள்ளுவர்

அண்டத்தி னுள்ளே அளப்பரி தானவள்
பிண்டத்தி னுள்ளே பெருவெளி கண்டவள்
குண்டத்தி னுள்ளே குணம்பல காணினும்
கண்டத்தி னுள்ளே கலப்பறி யார்களே
திருமந்திரப்பாடல்

திருமூலர்

Facebook Gplus

பறத்தல் - பறத்தல் நிமித்தம்

Created By SoraTemplates | Customized By Sibhi Kumar | Distributed By Gooyaabi Templates