பராக்... பராக்...பராக்!

       கடல் அலைகள் கரை வந்து மோதி மோதிச் செல்வது போல் பேசவும், கேட்கவும் பலப்பல விஷயங்கள் நினைவுகளிலும் உணர்வுகளிலும் வந்து வந்து மோதிச் செல்கின்றன மனதுள்.       
        வாரத்தில் மூன்று நாட்களின் பத்து நிமிட நலவிசாரிப்புகள் பாலைவனத்து ஒட்டகத் திமிலின் தண்ணீர் சேகரிப்பு போலல்லவா இருந்தது!

         போன வாரமே முற்றிய மாங்காய்களைப் பார்த்து வாங்கி பழுக்க வைத்தாயிற்று.

          நான்கு நாட்களுக்கு முன்பே முற்றிய பலாக்காய் பறித்து காம்பை வெட்டி வேப்பங்குச்சி செறுகியாச்சு. (விரைவில் பழுக்கவும் சுவை அதிகரிக்கவும்)

         இரண்டு நாட்களுக்கு முன் சந்தை சென்றவர், காய்கறிகளை விடவும் அதிக அளவில் பிடித்தமான பழங்களை வாங்கிப் பைநிரப்பி வந்தாச்சு.

          அனைவரும் தூங்கியதை உறுதி செய்து கொண்டு சுவரேறிக் குதிக்கும் திருடனின் அவசரத்தோடு இருக்கப் போகிறது வரும் இந்த நாட்களில் எனது வலையுலா.

           காய்ந்தமாடு கம்பங்கொல்லையில் பாய்ந்தாற்போல் விருப்பத்துக்குரியவர்களின் பதிவுகளைப் படித்துவிடுவேன்... கருத்துரைக்கத் தவறினாலும்!

         ஆக்கிரமிப்பை அகற்றும் அவசரத்தோடு அவனறையில் ஏறிக் கொண்ட எங்கள் உடமைகளை அப்புறப்படுத்தி விட வேண்டும் இன்று.

         இன்னும் ஐந்தாறு நாட்கள் எங்கள் வீட்டின் அசையும் அசையாப் பொருட்கள் (நாங்கள் உட்பட) அவனது ஆளுமைக்கு உட்பட்டவர்களாவோம்.

       ஆம்.... சிபி வருகிறான் இன்றிரவு... அவன் சார்ந்த கல்வி நிறுவனம் பெரிய மனதோடு ஹோம்சிக் லீவ் தந்திருக்கிறது ஐந்து நாட்களுக்கு...!

          பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்குமானதாய்.

          தோட்டத்து மரங்கள்  மழைக்குக் காத்திருப்பதைப் போல் நாங்களும்....
11 கருத்துரைகள்
  1. அப்பாடி...எனக்கும் அம்மாவாக ஆசையா இருக்கு நிலா உங்க சந்தோஷத்தைப் பார்க்க.அம்மான்னா இப்பிடித்தானா !

    ReplyDelete
  2. தோட்டத்து மரங்கள் மழைக்குக் காத்திருப்பதைப் போல் நாங்களும்....//

    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. அம்மாவுக்கு சிபியுட இருக்க ஆசைதானே... அதற்கு எதற்கு பாவம் சிபிக்கு ஹோம்சிக் என்ற சாக்கு.... :) இருந்தாலும் மகனுடன் இருக்கப்போகும் உங்களுக்கு வாழ்த்துகள். ஐந்து நாட்களும் ”எஞ்சாய் மாடி”

    ReplyDelete
  4. அருமை அருமை



    வலைசரத்தில் இன்று ...
    கண்ணை நம்பாதே

    ReplyDelete
  5. வாழ்த்துகள்...பகிர்ந்த விஷயம் அருமை நன்றி சகோ!

    ReplyDelete
  6. சிபியுடன் அருமையான பொழுதை கழியுங்கள். பிடித்தமானதை சமைத்துக் கொடுத்து , ஆசை தீர பேசி இன்பமான நாட்களாக மாற வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. சிபி என்றாலே பிசி என்றுதானே பொருள் நிலாமகள்! புரிந்து கொள்கிறோம் உங்களின் தாய் மனதை

    ReplyDelete
  8. நான் விடுதியில் இருந்து வரும்போது எனக்காக அம்மா செய்யும் விஷயங்களும், அதை கிண்டலடிக்கும் அண்ணனும் நினைவுக்கு வருகிறார்கள் - உங்கள் பதிவால். சிபிக்கும், அம்மாவுக்கும், வீட்டுக்கும் ஆன ப்ரேத்யேக நிமிடங்களுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. சுவரேறிக் குதிக்கும் திருடனின் அவசரத்தோடு இருக்கப் போகிறது வரும் இந்த நாட்களில் எனது வலையுலா.
    தாய் மனதுக்கும் எழுத்துக்கும் போட்டி..
    ஜெயிப்பது எப்போதும் நிலாமகள்தான்.

    ReplyDelete
  10. ரிஷபன் கூறியது போல், பாசத்துக்கும், பதிவிற்கும் இடையே ஒரு பனிப் போர்!
    எது ஜெயிக்குமோ?
    படபடவென்ற மனதுடன்,
    ஆர்.ஆர்.ஆர்.

    ReplyDelete
  11. தாய்மையின் தவிப்பு!
    அன்பின் சுவை!
    எதிர்பார்ப்பின் ஏக்கம்!
    கற்பனைகளின் சுகம்!
    நிமிடங்கள் எண்ணும் பதைபதைப்பு!

    எல்லாம் ஒன்றாய் தமிழ் நூலில் கோர்த்து நிலாமகளின் முத்துமாலையாய்.

    நிமிடங்கள் சுமந்து நிற்கிறது நிலாவின் வாழ்வை!

    அவை உங்களுக்கான நாட்கள்.
    வாழ்க்கையை வாழும் பொழுதுகள்.

    வாழ்த்துக்கள் தோழி!!

    ReplyDelete