நிறுவனர்:நிலாமகள். Powered by Blogger.

பறத்தல் - பறத்தல் நிமித்தம்

வகையினம் >


 "அரி நமோத்து சிந்தம் !
           அரி ஓம் ; குரு ஓம்!
                நன்றாக... குருவாழ்க!
                     குருவே துணை!!"

    எண்ணாவரத்து வாத்தியார் சொல்ல சொல்ல புதுசா வந்த புள்ள திருப்பிச் சொல்லுது. (அப்பல்லாம் ஊர் பேரை வெச்சுதான் பலபேரையும் சொல்றது.)

 விஜய தசமி அன்னிக்கு புதுசா பள்ளியோடம் வர்ற புள்ளைங்களுக்காக பெரிய வாத்தியாரும் (தலைமை ஆசிரியர்) இவரும் ஒண்ணாம்ப்பு டீச்சரும் கட்டாயம் வந்துடுவாங்க.

  பயந்து முழிச்சிகிட்டும் கண்ணைக் கசக்கிக் கிட்டும் வர்ற புள்ளைங்க கூட வந்தவங்கள கெட்டியா பிடிச்சிகிட்டிருக்கும். சிலது தலைவாசல்லியே கையை உதறிட்டு அலறி அழுதுகிட்டு ஓடும். மல்லுகட்டி  ஊசி போட அழுத்தி பிடிக்கறாப்புல குண்டுகட்டா கொண்டுவர வைக்கும்.(அப்பாம்மா தவிர, வெவரமான உறவோ தெரிஞ்சவங்களோ கூட கொண்டுவந்து சேர்த்துட்டு கார்டியன் கையெழுத்து போட்டுட்டு போறது சகஜம் .) 

 வந்தவங்க தலை மறையும் வரைக்கும் தான் அழுகை ஆர்ப்பாட்டமெல்லாம். அப்புறம் ஒண்ணாம்ப்பு செவந்திப்பூ டீச்சர் மேசைக்கு அடியிலேயிருந்து குச்சியை எடுத்து மேசைமேல டபால் டபால்ன்னு தட்டின உடனே எல்லா சத்தமும் கப்சிப்!

  மஞ்சள் பையிலிருக்கும் புது அரிச்சுவடி, புது சிலேட்டு, புது பலப்பம்  எல்லாத்துக்கும் வேலை வந்துடும். சிலேட்டில் டீச்சர் பெரிசா எழுதித் தந்த  'அ'னா மேல் அழுத்தி அழுத்தி எழுதிட்டே இருக்கணும். அதை அழியாமக் கொண்டுபோய் வீட்டில காட்டுற பூரிப்பு இருக்கே... தம்புள்ள தானவே 'அ'னா போட்டுட்டாப்புல அவாளுக்கும் பெருமை தாங்காது...

  நடுநடுவுல அ -அம்மா, ஆ-ஆடு, இ-இலை, ஈ-ஈ, உ-உரல், ஊ- ஊதல், எ-எலி, ஏ-ஏணி, ஐ-ஐவர், ஒ-ஒட்டகம், ஓ-ஓடம், ஓள-ஓளவை, ஃ -எஃகு  என டீச்சர் சொல்லச் சொல்ல புள்ளைங்க எல்லாம் தொண்டை கிழிய கத்தற சத்தம்  சுத்துபட்டு ஜனங்களுக்கு கிட்ட பள்ளிக்கூடம் நடக்கறதை  சொல்லிகிட்டே இருக்கும். அததுக்கும் அரிச்சுவடியில போட்டிருக்கிற படங்களைப் பார்த்து, எழுத்தின் மேல் விரல் வச்சி தான் சொல்லணும். கும்பலோட கத்திகிட்டு கண்ணும் கையும் வேற வேலையில இருந்தா சுத்தி சுத்தி வர்ற டீச்சர் நங்'குன்னு கொட்டுவாங்க தலையில.

      மதியம் மஞ்சள் பையில அம்மா அனுப்பிய சாப்பாட்டு டப்பாவை காலி பண்ணிட்டு பெல் அடிக்கிற வரை ஆட்டம் தான். ஊஞ்சல், நாலு மூலைக் கிண்ணி, ஓடி பிடிக்கறது, ஒளிஞ்சி பிடிக்கிறது இப்படிப் பலதும். வெயில் உரைத்ததா நினைவே இல்லை. எவ்வளவு வியர்வையும் போட்டிருக்கிற பருத்தி உடைகள் ஈர்த்துக்கும். தொண்டை வறள வறள  வகுப்பிலிருக்கும் பானை தண்ணிதான்.  

ஏழ்மையான புள்ளைங்களுக்கு அரசாங்க இலவச சாப்பாடு கோதுமை உப்புமா வந்திருக்கும்.  தட்டில் போட்ட சாப்பாட்டை எல்லோருமா பிரார்த்தனை சொன்ன பிறகுதான் சாப்பிடுவாங்க. வாடை தான் தள்ளியிருக்கிறவங்க வயிற்றையும் பிசையும். 

     சாயங்காலம் அக்கம்பக்கத்து புள்ளைங்களோட பேசி சிரிச்சிகிட்டு வழியில ஓரம் பாரமா இருக்குற செடிகொடியில பூவை இலைதழையை பறிச்சி பையை நிரப்பிகிட்டு வீடு வரவேண்டியது தான். 


அடுத்து ரெண்டாம்ப்பு... (ஹைய்யா...!) 



Share on:

             இரண்டாண்டுகள் காத்திருப்பும் அயர்வும், வலிக்குப் பின்னான ஒருகணப் பிரசவிப்பு மகிழ்வானது, சிறுகதைத் தொகுப்பை நூல் வடிவில் கையில் வாங்கியபோது (அலமேலு பதிப்பகம், குறிஞ்சிப்பாடி, 04142-258942)


                                           திரு. குறிஞ்சி வேலன் ('திசை எட்டும்')
                   
           "உன் அப்பா வீட்டுக்கு வருவது போல் வந்து போம்மா"
முதன்முதல் வீட்டுக்கு போனபோது இந்த 'வாழும் அப்பா' சொன்ன வார்த்தைகள் ... நேற்றிரவு இவரது முயற்சியால் நூலான 'சுழல்' பிறந்த வீட்டு சீதனமாய்  என் கைகளில் . பெருமிதமும் மகிழ்வுமாய்  பூரிக்கும் இத்தருணத்தில், நன்றி சொல்லி அன்னியப் படுத்தக் கூடாது இவரை நான்.


('இட்டிக்கோரா' மலையாள மூல நாவலின் ஆசிரியர் திரு. T.D. ராமகிருஷ்ணனுடன் தமிழில் மொழிபெயர்த்த (உயிர்மை வெளியீடு) திரு. குறிஞ்சி வேலன், அவரது துணைவியார், தமிழ் மொழிபெயர்ப்பை கணினியில் எழுதாக்கிய நான்.)




        பெற்றவர்கள் கண் பார்க்க பேர் புகழடைவது வரம். அது எல்லோருக்கும் வாய்ப்பதில்லையே. நூலை 'காணிக்கை' ஆக வைத்து வணங்கவே வாய்த்தது எனக்கும்.

     முன்னோட்டமாக முன்னுரையின் பாதியை ஒரு பதிவாக்கினேன். http://nilaamagal.blogspot.in/2011/12/blog-post_09.html

எஞ்சிய மறுபாதியும் உங்களுடன் பகிர்வேன் கிட்டதட்ட எல்லாக் கதைகளையும் வலைப்பூவில் பதிவிட்டு உள்ளேன். தலைப்புக் கதை விரைவில்.

Share on:


பசித்தவன் உணவையும்
படிப்பவன் அறிவையும்
விதைத்தவன் இலாபத்தையும்
வலுத்தவன் பயத்தையும்
கொடுப்பவன் புண்ணியத்தையும்
கொல்பவன் பாவத்தையும்
படைத்தவன் புகழையும்
தடுப்பவன் கீழ்ப்படிதலையும்
சிந்திப்பவன் தெளிவையும்
சிரிப்பவன் மகிழ்வையும்
குடிப்பவன் வியாதியையும்
பகைப்பவன் வெறுப்பையும்
பொறுப்பவன் நன்மையையும்
துறப்பவன் நிம்மதியையும்
யாசித்துப் பெற
உன்
நேசத்தை யாசிக்குமெனக்கு
புறக்கணிப்பை ஆயுதமாக்கும்
நீ யோசித்ததுண்டா
அன்பெனும் ஆயுதம் பற்றி?!

நன்றி: தமிழ்த் தாராமதி ,மார்ச்-2013
Share on:

         பேரச்சம் விளைவித்த அம்மை நோய்க்கு எதிரான ஒரு தடுப்பு நடவடிக்கையாக அம்மை குத்தும் முறையைக் கண்டுபிடித்து உலகெங்கும் பரப்பிய ஆங்கிலேய மருத்துவ அறிஞர் எட்வர்டு ஜென்னர் . இவர் தமது ஆராய்ச்சிகள் மூலமாகவும், பரிசோதனைகள் வாயிலாகவும், மருத்துவத் தொழில் துறையினர் கவனத்தில் எடுத்துக் கொள்ளாமல் புறக்கணித்து வந்த ஒரு பாமர நம்பிக்கையை உலகெங்கும் கோடிக்கணக்கான மக்களின் உயிர்களைக் காப்பாற்றிய ஓர் உயர்தர மருத்துவ சிகிச்சை முறையாக உருமாற்றினார். 

ஜென்னர் கண்டுபிடித்த அம்மை குத்தும் முறையின் பயனாக இன்று உலகிலிருந்து அம்மை நோய் பெரும்பாலும் அடியோடு ஒழிக்கப்பட்டு விட்டது. ஆனால், முந்தைய நூற்றாண்டுகளில் இந்த அம்மை நோய் எத்துணை கோரமாக உயிர்களைக் கொள்ளை கொண்டு வந்தது என்பதை இன்று நாம் மறந்து கொண்டு வருகிறோம். அம்மை நோய் ஒரு பயங்கரத் தொற்று நோயாக இருந்தது. ஐரோப்பாவில் வாழ்ந்த மக்களில் பெரும்பான்மையினர், தங்கள் வாழ்வில் எப்போதாவது ஒரு முறை, இந்தத் தொற்று நோயால் பீடிக்கப்பட்டனர். இந்நோய் கண்டவர்களில் 10% - 20% பேர் மாண்டு போயினர். உயிர் பிழைத்தவர்களில், மேலும் 10% அல்லது 15% பேர் அம்மைத் தழும்புகளால் நிரந்தரமாக விகாரமடைந்தனர். அம்மை நோய்க் கொடுமை ஐரோப்பாவோடு நின்று விடவில்லை. வட அமெரிக்கா முழுவதிலும் இந்தியா, சீனா ஆகிய நாடுகளிலும், உலகின் வேறு பல பகுதிகளிலும் அம்மை நோய் கோரத் தாண்டவமாடியது. எல்லா இடங்களிலும், குழந்தைகளே இந்நோய்க்குப் பெரும்பாலும் பலியானார்.
இக்கொடிய நோயைத் தடுப்பதற்கு நம்பகமானதொரு முறையைக் கண்டுபிடிப்பதற்குப் பல ஆண்டுகளாக உலகெங்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. ஒருமுறை அம்மை நோய் பீடிக்கப்பட்டு உயிர் பிழைத்த ஆளுக்கு அந்நோயிலிருந்து தடைகாப்பு ஏற்பட்டு விடுகிறது என்பதும், அதனால் அவரை இரண்டாம் முறை அம்மை நோய் தாக்காது என்பதும் நீண்ட காலமாகவே அறியப்பட்டிருந்தது. கீழ்த்திசை நாடுகளில், இலேசான அம்மை நோய் கண்டவர்களின் உடலிலிருந்து எடுத்த ஏதாவதொரு பொருளை உடல் நலமுடையவர்களின் உடலில் ஊசி மூலம் செலுத்தும் முறை வழக்கில் இருந்தது. இவ்வாறு ஊசி மூலம் மருந்து செலுத்தப்பட்ட ஆளுக்கு, மிக இலேசான அம்மை நோய் மட்டுமே பற்றும் என்றும், அதிலிருந்து குணமடைந்த பின்பு அவருக்கு அந்நோயிலிருந்த தடைக் காப்பு ஏற்பட்டு விடும் என்றும் நம்பினார்கள்.
இதே முறையை 18 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மேரி ஓர்டே மாண்டேகு சீமாட்டி இங்கிலாந்தில் புகுத்தினார். அங்கு, ஜென்னருக்கு முன்பு பல ஆண்டுகள் இந்த முறை பெருமளவில் வழக்கிலிருந்தது. ஜென்னருக்கே கூட, அவரது எட்டாம் வயதில், அம்மைப் பால் ஊசி போடப்பட்டது. ஆயினும், இந்தப் புதுமையான தடுப்பு முறையில் மிக ஆபத்தானதொரு குறைபாடும் இருந்தது. அவ்வாறு அம்மை நோய்ப் பொருள் ஊசி வழியாகச் செலுத்தப்பட்டவர்களில் கணிசமான எண்ணிக்கையினருக்கு அம்மை லேசாகப் பீடிக்கப்படவில்லை. மாறாக, அவர்களை அம்மை நோய் கடுமையாகப் பீடித்து, அவர்களிடம் மோசமான அம்மைத் தழும்புகளை விட்டுச் சென்றது. உண்மையாகக் கூறின் 2% தேர்வுகளில் இந்த ஊசிப்பாலினாலேயே கடுமையான அம்மை நோய் தாக்கியது. எனவே, இந்நோயைத் தடுப்பதற்கு இதைவிட உயர்ந்ததொரு முறை உடனடியாகத் தேவைப்பட்டது.


பசுக்களின் மடுக் காம்புகளைப் புண்ணாக்கும் "கோ வைசூரி" என்னும் மென்மையான அம்மை நோய் கண்டவர்களுக்கு, அதன்பின்பு அம்மை நோய் வரவே செய்யாது என்று ஜென்னர் வாழ்ந்த வட்டாரத்திலிருந்த பால் பண்ணைப் பெண்களிடையிலும், குடியானவர்களிடையிலும் ஒரு நம்பிக்கை நிலவி வந்தது. இந்தக் கோ வைசூரி நோயை மனிதர்களுக்குப் பீடிக்கும்படி செய்தால், அவர்களை அம்மை நோய் பற்றாது என்ற கருத்தும் நிலவி வந்தது. இந்த நம்பிக்கையை ஜென்னரும் நன்கறிந்தார். (கோ வைசூரியின் அறிகுறிகள், மிக மென்மையான அம்மை நோயின் அறிகுறிகளை ஒத்திருந்தாலும் அந்த நோய் மனிதர்களுக்கு அபாயமானதன்று.) குடியானவர்களின் இந்த நம்பிக்கை சரியானதாக இருக்குமானால் கோ வைசூரி நோய்ப் பாலை மனிதருக்கு ஊசி வழியாகச் செலுத்துவதும் அம்மை நோய்க்கு எதிரான சிறந்த பாதுகாப்பாக அமையும் என ஜென்னர் உணர்ந்தார். அது குறித்து இவர் மிகக் கடினமாக ஆராய்ச்சி நடத்தினார். அது குறித்து இவர் மிகக் கவனமாக ஆராய்ச்சி நடத்தினார். 1796 ஆம் ஆண்டில், அந்த நம்பிக்கை முற்றிலும் சரியானது என்று கண்டறிந்தார். எனவே, அதை நேரடியாகவே பரிசோதித்துப் பார்க்க ஜென்னர் முடிவு செய்தார்.
1796 ஆம் ஆண்டு மே மாதத்தில், ஜேம்ஸ்ஃபிலிப்ஸ் என்ற எட்டு வயதுச் சிறுவனுக்கு, ஒரு பால் பண்ணைப் பெண்ணின் கையிலிருந்த கோ வைசூரியின் கொப்புளத்திலிருந்து எடுத்த பாலை ஊசி மூலம் ஜென்னர் ஏற்றினார். எதிர்பார்த்தது போலவே, அச்சிறுவனுக்கு கோ வைசூரி கண்டது. ஆனால், அவன் விரைவிலேயே குணமடைந்தான். பல வாரங்களுக்குப் பிறகு, அம்மைப் பாலை பிலிப்சுக்கு ஜென்னர் ஊசி வழியாகச் செலுத்தினார். இவர் நம்பியதுபோலவே, அச் சிறுவனுக்கு அம்மை நோயின் அறிகுறிகள் உண்டாகவே இல்லை.
மேலும் பல பரிசோதனைகள் செய்த பின்னர், ஜென்னர் தமது முடிவுகளை "அம்மை நோயின் காரணங்களும் விளைவுகளும் பற்றிய ஓர் ஆய்வு" என்னும் தலைப்பில் ஒரு சிறு நூலில் விவரித்து எழுதி 1798 ஆம் ஆண்டில் வெளியிட்டார். அம்மை குத்தும் முறை உலகெங்கும் விரைவாக மேற்கொள்ளப்பட்டதற்கு இந்த நூலே முக்கிய காரணம். 

சித்த மருத்துவத்தில் அம்மை பற்றி...
 http://polurdhayanithi.blogspot.in/2011/04/chicken-pox.html

அம்மை நோயின் அறிகுறிகள்- 
மூன்று நாட்களுக்கு ஜலதோஷம், இருமல், காய்ச்சல் இதோடு கண்கள் சிவத்தல், கண்கள் கூசுதல், கண்களில் அதிகம் நீர் வருதல் ஆகியவை இருக்கும், சில குழந்தைகளுக்கு நெற்றி மற்றும் காதுகளின் பின்புறம் தடிப்புகள் ஏற்படும். பிறகு 3அல்லது 4 நாட்கள் கழித்து கண்களில் கோழை உண்டாகும், முகம் மற்றும் உடலில் தடிப்புகள் ஏற்படும், பிறகு ஒருவாரம் கழித்து தடிப்புகள் மறையும், தழும்புகள் இருந்த இடத்தில் தோல் உரியத் தொடங்கும்.


அம்மை நோய் தெய்வக் குற்றமா?

கொப்புளிப்பான் / அம்மை வருத்தம் (chicken pox)என்பது ஒரு வைரசினால் ஏற்படுகின்ற நோயாகும். நம்மவர்கள் நினைத்துக் கொள்வது போல இதற்கும் கடவுள் குற்றத்திற்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை.

இது நோயுள்ள ஒருவரில் இருந்து இன்னொருவருக்கு காற்றின்
மூலமும் ,தொடுகை மூலமும் பரவலாம்.

இது தானாக சுகமாகிவிடக் கூடியது என்றாலும் இப்போது உள்ள அசிக்குலோவிர் (Acyclovir)  எனப்படும் மருந்து மூலம் இதன் தீவிரம் அதிகரிப்பதைத் தவிர்க்கலாம். ஆனால் இந்த மருந்து ஆரம்பத்திலேயே எடுக்கப்பட வேண்டும். இந்த மருந்தினை பாவிப்பவர்கள் அதிகளவு நீர் அருந்த வேண்டும்.

இந்த மருந்தை கட்டாயம் எல்லோரும் அருந்த வேண்டியது இல்லை

இது தானாக சுகமாகக் கூடிய நோய் என்றாலும் கர்ப்பிணிகள் ,மிகவும் சிறிய குழந்தைகள், வயதானவர்கள் மற்றும் நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்தவர்களில் இது நிறையப் பாதிப்புக்களை ஏற்படுத்தலாம்.

இப்படியானவர்கள் உடனடியாக வைத்தியரை நாட வேண்டும்.

நோயாளிகள் பிரித்து வைக்கப்பட வேண்டுமா?

கர்ப்பிணிகள் , மிகவும் சிறிய வயதுக் குழந்தைகள் , நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்தவர்கள் இந்த நோயாளிகளிடம் இருந்து தள்ளி இருப்பது உகந்தது.

எவ்வளவு காலத்திற்கு பிரித்து வைக்க வேண்டும்?

கொப்புளங்கள் முற்றாக காய்ந்து உதிர்ந்து விழும்வரை பிரித்து வைத்து வைத்தால் போதுமானது. இது கிட்டத்தட்ட இரண்டு வாரத்திற்குத் தேவைப்படலாம்.அதற்கப்புறம் நீங்கள் வேலைக்கோ பாடசாலைக்கோ செல்ல முடியும்.


நோய் ஏற்பட்டவர்கள் இளம்சூட்டு நீரினால் குளிக்க வேண்டும். குளித்த பின்பு நன்கு துடைத்து கொப்புளங்களை உலர்வாக வைத்திருக்க வேண்டும்.இல்லாவிடில் கொப்புளங்களில் பாக்டீரியாக்கள் சேர்ந்து தொற்றுக்களை ஏற்படுத்தலாம்.

முகத்திலே கொப்புளங்கள் ஏற்படுபவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அவர்களுக்கு  கண்களின் உள்ளே கொப்புளங்கள் ஏற்பட்டால் பெரிய பிரச்சினை ஏற்படலாம்.

நோய் ஏற்பட்டவர்கள் விரும்பிய எல்லாவிதமான சாப்பாடுகளையும் சாப்பிட முடியும்.

மாமிசங்கள் சாப்பிடுவதால் நோயின் தீவிரம் அதிகரிப்பதில்லை. அதையும் தாண்டி சமய ரீதியாக மாமிசங்களைத் தவீர்ப்பவர்கள் போதியளவு சத்துள்ள மரக்கறிகளை உட்கொள்ள வேண்டும்.

நோயுள்ள காலத்தில் அதிகமான நீராகாரம் அருந்துங்கள். சாத்துக்குடி, தர்பூசணி, ஆரஞ்சு, பேயன் வாழை, எருமைத் தயிர், இளநீர்  போன்ற குளிர்ச்சியை அதிகரிப்பவை நிறைய எடுத்துக் கொள்ளலாம்.

குளுக்கோஸ் மற்றும் பிரக்டோஸ் போன்ற சர்க்கரைச் சத்துக்கள் இளநீரில் உள்ளன. இளநீரிலுள்ள குளுக்கோஸ் மற்றும் பிரக்டோஸ் தேங்காய் முதிர்ச்சியடையும்போது சுக்ரோஸாக மாறிவிடுகிறது. இளநீரில் பொட்டாஸியம், சோடியம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, செம்பு, கந்தகம், குளோரைடு போன்ற தாது உப்புக்கள் அதிக அளவில் காணப்படுகின்றன. இவற்றில் பாதிக்கும் மேல் காணப்படுவது பொட்டாஸியம். இளநீரில்
புரதச்சத்து குறைவாகவே உள்ளது. இருப்பினும் இப்புரதச் சத்தின் தரப் பாலில் உள்ள புரதச்சத்தை விட உயர்வானது.

வேர்க்குரு, வேனற்கட்டி,
அம்மை, தட்டம்மையினால் ஏற்படும் தடிப்புக்களைக் குணப்படுத்த இளநீரை உடம்பின் மீது பூசிக்கொள்ளலாம்.
இரத்தத்தில் கலந்துள்ள நச்சுப்பொருளை அகற்றவும் இளநீர் உதவுகிறது.

வேர்க்கடலையில் உள்ள நியாஸின், தோலில் உள்ள புண்கள், கொப்புளங்கள் ஆறவும், இவை வராமல்
முன்கூட்டியே தடுப்பதுடன், பளபளப்பான தோலையும் ஏற்படுத்தித் தருகிறது.


 அம்மை நோயின் போது ஜாதிக்காய், சீரகம், சுக்கு போன்றவற்றை போடி செய்து உணவிற்கு முன் சிறிது எடுத்துக் கொண்டு வந்தால் அம்மைக் கொப்புளங்கள் தணியும் என்று சித்த மருத்துவம் கூறுகிறது. ஜாதிக்காய் அதிகம் சாப்பிட்டால் மலச்சிக்கல் உண்டாகும் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.


சின்ன அம்மை, படுக்கைப் புண்ணுக்கு வாழை இலையில் தேன் தடவி தினமும் சில மணி நேரம் படுக்க வைத்தால் விரைவில் குணமாகும்.

வீட்டில் ஒருவருக்கு அம்மை வந்தால் மற்றவர்களுக்கு பரவாமல் இருக்க தாழம்பூ எசன்ஸ் வாங்கி காலை வெறும் வயிற்றில் கால் டம்ளர் நீரில் பத்து சொட்டு விட்டு மூன்று நாட்கள் அருந்தவும்.

 ஹோமியோபதியில் அம்மைக்கான மருந்துகள்...

நோய வரும் முன்னும் வந்தவுடனும்   அதைத் தடுத்து சீக்கிரம் குணமடையச் செய்ய ஹோமியோபதியில் அற்புதமான மருந்துகள் உண்டு. பல்சட்டிலா 1M  அல்லது வரியோலினம் 200 இதற்கு ஏற்ற மருந்து. பள்ளியிலோ தெருவிலோ யாருக்கேனும் அம்மை கண்டால்  மற்றவர்கள் இம்மருந்தை வாங்கி தினம் மூன்று வேளையாக  மூன்று நாட்கள் எடுக்க வேண்டும்.

இந்நோய் கண்டவர்களுக்கு சுரத்துக்கு பின் வரும் கொப்புளங்கள் நீர் கோர்த்த மாதிரி இருக்கும். அவற்றை உடைய வைக்க ஆண்டிமோனியம் டார்டாரிக்கம்-30, ரஸ் டாக்ஸ்-30 இரண்டையும் மணிக்கு ஒரு முறை மாற்றிக் கொடுத்தால் கொப்புளங்களிலுள்ள நீர் வற்றி விடும்.

இரு தினங்கள் கழித்து புண்களைக் குணப்படுத்த மெர்க்குரியஸ் சொலுபுலிஸ்-30 கொடுத்தால் உலர்ந்து விடும். அம்மை குணமான பின் ஏற்படும் தழும்பு போக காஸ்டிகம்-30 மருந்தை ஒரு நாளுக்கு இருமுறை கொடுத்தால் ஒரே வாரத்தில் அம்மை வந்த இடமே தெரியாமல் தழும்பு மறைந்து விடும்.

பாட்ச் மலர் மருந்தில் 'கிராப் ஆப்பிள்' நோய் கண்டவரின் மனரீதியான அருவருப்பை குறைத்து விரைவாக சரி செய்யும்.

பயோ மருந்தில் கொப்புளங்கள் பழுத்திருக்கும் நிலையில் கல்கேரியா சல்பியூரிக்கம் தரலாம். காலி சல்பியூரிக்கம் என்ற மருந்து கொப்புளங்களை ஆற்றி பற்றுக்களை விழச் செய்து வடுக்களை மறைத்து புதிய சருமம் உண்டாக்கும்.

பாரம்பரிய தடுப்பு நடவடிக்கைகள் 

நோயுற்றவரை தனிமைப் படுத்தி வைக்க வேண்டும். தூய வெண்ணிற துணிகள் விரித்து  படுக்கவும். வேப்பிலைகளை படுக்கையருகே போடவும். உடல் நமைச்சலுக்கு இவ்வேப்பிலையால் மென்மையாக தடவி விடவும்.   வீட்டு வாசலில் வேப்பிலை செருகுவது மற்றவர்களை எச்சரித்து வீட்டினுள் வராமல் தடுக்கும். அரிப்பு அதிகமானால் வேப்பிலையும் மஞ்சளும் அரைத்து இலேசாகத் தடவி விடலாம்.

குளிர்ச்சியானவற்றை அதிகமாக சேர்த்துக் கொள்ளவும். எண்ணெய் பண்டங்கள் முற்றிலும் ஒதுக்கவும்.(கடுகு தாளிப்பது கூட கூடாது. வாணலியில் வதக்குவது, பொரிப்பது தவிர்க்கவும்.) இயன்ற வரை திட ஆகாரங்கள் குறைத்து திரவ ஆகாரமாக தருவது நலம்.

குழந்தைப் பேறு, சாவு வீட்டுக்கு அம்மை கண்டவர் வீட்டினர் செல்வது கூடாது. (கூட்டம் நிரம்பிய எங்கும் சென்று வருவது நோய்த் தொற்றை அதிகரிக்கக் கூடும்.)  பிச்சை இடுவது கூடாது. அக்கம் பக்கத்தினரிடம் ஏதும் தரவோ பெறவோ கூடாது. (இதெல்லாம் அவர்களுக்குத்  தொற்றாமல் இருக்க)மூன்று தண்ணீர் விடும் வரை கோயிலுக்குக் கூட போகக் கூடாது. (நோய் இறங்க நாளானால் அம்மன் கோயிலில் மஞ்சள் அபிஷேக நீரை வாங்கி வந்து சிறிது உள்ளுக்குக் கொடுக்கலாம்.)

அம்மை கண்டவர் தலை வாரக் கூடாது. கண்ணாடி பார்க்கக் கூடாது. பல் விளக்குவது கூட இலேசாக விரலால் தான். (பிரெஷின் ப்ரிசெல்கள் ஈறுகளை காயப் படுத்தி அங்கும் கொப்புளங்கள் வராமல் இருக்க)

நோய்க் கொப்புளங்கள் அமுங்கத் தொடங்கிய பின் ஒற்றைப் படை நாட்களில் (5,7,9...) வாயகன்ற பாத்திரத்தில் நீர் நிரப்பி அதில் வேப்பிலை இலைகளை போட்டு சூரிய ஒளியில் வெதுவெதுப்பு ஆகும் வரை வைத்து மதிய வேளையில்  வேப்பிலை, மஞ்சள், அருகம்புல் அரைத்து நோயுற்றவர் உடலில் தலையில்  பூசி  குளிக்க விடவும். மூன்று குளியலுக்குப் பின்னும் சில நாட்களுக்கு சோப் உபயோகிக்காமல் பாசிப் பருப்பு மாவு தேய்த்து குளிக்கலாம். இயலாவிட்டால் பேபி சோப் உபயோகிக்கவும்.

நோயாளி உபயோகிக்கும் துணிகளை தனியாக துவைத்து வெயிலில் காய விடவும். பொருக்குகள் விழும் சமயம் (தலைக்கு மூன்று தண்ணீர் விட்ட பிறகு) நோயாளியின் தனிப்பட்ட வெள்ளைப் படுக்கையை கவனமாக சுத்தம் செய்து வெயிலில் காய வைக்கவும். (இரவில் தான் பெரும்பாலும் இறந்த தோல் செல்கள் அதில் நிறைந்துள்ள வைரசுடன்  உதிரும். இதுவே மற்றவருக்கு பரவுவதில் முக்கிய காரணமாகிறது)

அக்காலத்தில் மாரியம்மன் தாலாட்டு காலை மாலை நேரத்தில் விளக்கேற்றி வைத்துப் படிப்பார். தேவாரத்தில் கூட சில பாராயணப் பாடல்கள் உள்ளன.

1.சம்பந்தர் பாடிய திருநீற்றுப் பதிகம் (மந்திரமாவது நீறு...)

2. சுந்தரர் திருத்துருத்தியில் பாடிய "மின்னுமா மேகங்கள் பொழிந்திழிந்தருவி" என்ற பாடல்

3. திருநெடுங்களத்தில் பாடப்பட்ட இடர் களையும் பதிகமான "மறையுடையாய் தோலுடையாய்" எனும் பதிகம்


Share on:
  • ← Previous post
  • Next Post →

  • கால்களை சிறகுகளாக்கும் எத்தனங்கள்.
  • உதிரும் சிறகுகளை சேகரிக்கும் குழந்தைமை.
நிலாமகள்

நிலாமகள்

View My Complete Profile
Facebook Gplus RSS

Followers


Labels
  • அசை (16)
  • அறிந்தும் / அறியாமலும் (10)
  • கவிதை (61)
  • சிறுகதை (9)
  • சுவையான குறிப்புகள் (1)
  • செல்லத்தின் செல்லம் (6)
  • தாய் மடி (2)
  • திருக்குறள் நினைவாற்றல் வழிகாட்டி (4)
  • தொடர் பதிவு (1)
  • நூல் மதிப்புரை (1)
  • நேர்காணல் (3)
  • பகிர்தல் (51)
  • படித்ததில் பிடித்தது (63)
  • மரம் வளர்த்த மனிதனின் கதை... (4)
  • மருத்துவம் (12)
  • வாழ்த்து (14)

Popular Posts

  • வில்வம் ...மருத்துவ குணங்கள்:(பகுதி - 3)
             வில்வம் பற்றிய அறிமுகம்:(அறியாதவர்கள் அடையாளம் காண)         இலையுதிர் மரவகையைச் சார்ந்த வில்வம் எல்லா இடங்களிலும் வளரும் ...
  • பல் வலியா ?
    நம் உடம்பில் ஒன்றுக்கு இரண்டாக கண், காது, கை, கால், சிறுநீரகம், சினைப்பை அல்லது விதைப்பை போன்றவை இருக்க பல்லை மட்டும் 32 ஆக படைத்ததன் ...
  • மலை வேம்பு -சில தகவல்கள்
    மலைவேம்பு (melia dubia)        மலைவேம்பு மிக வேகமாக வளரும் விலை மதிப்பு மிக்க பன்முகப் பலன் தரும் அரிய மரவகைகளில் ஒன்று. ப்ளைவுட்,ரெடிமேட்...
  • அம்மை... சில தகவல்கள்
              பேரச்சம் விளைவித்த அம்மை நோய்க்கு எதிரான ஒரு தடுப்பு நடவடிக்கையாக அம்மை குத்தும் முறையைக் கண்டுபிடித்து உலகெங்கும் பரப்பிய ஆங்கி...
  • சாகசங்கள் மீதான பேராவல்
                 குழந்தைகளை தூங்கச் செய்வது என்பது எந்த நாட்டிலும் பெரும்பான்மையும் அம்மாக்களின் பிரதான கடமையாகவே இருக்கும். பிறந்து சில ம...
  • மரம் வளர்த்த மனிதனின் கதை ... இறுதிப் பகுதி
    தொடக்கம்:  http://nilaamagal.blogspot.in/2013/10/blog-post_29.html பகுதி-1:  http://nilaamagal.blogspot.in/2013/10/1.html பகுதி-2:  htt...
  • பொடுகு எவ்விதம் உருவாகிறது?
           நம் மண்டையில் அன்றாடம் இறக்கும் செல்கள் தோலின் மேற்புறத்தில் உள்ள எபிடெர்மிஸின் (Epidermis) ஆழ் அடுக்கிலிருந்து இடைவிடாது வெளித்தள்ள...
  • ஞிமிறென இன்புறு
           'அந்த காலமெல்லாம்...' என்று பெருமூச்சு விடத்தொடங்கினாலே வயசானவங்க லிஸ்ட்ல சேர்த்துடறாங்க இன்றைய இளைஞர்கள். தன்  குழந்...
  • மரங்களின் மக(ரு)த்துவம்-2 (வேப்பமரம்)
    வேம்பு:  சிவன் கோயில் வில்வ மரம் போல் அம்மன் கோயில்களில் அவசியமிருக்கும் மரம் வேப்பமரம். இயற்கையின் வரப்பிரசாதமான இம்மரத்தின் வேர், பட்டை,...

Blog Archive

  • ►  2020 (1)
    • ►  March (1)
  • ►  2019 (1)
    • ►  August (1)
  • ►  2018 (9)
    • ►  June (2)
    • ►  May (1)
    • ►  March (2)
    • ►  February (1)
    • ►  January (3)
  • ►  2017 (18)
    • ►  November (2)
    • ►  October (4)
    • ►  September (2)
    • ►  August (2)
    • ►  July (1)
    • ►  March (1)
    • ►  February (6)
  • ►  2016 (9)
    • ►  December (1)
    • ►  November (2)
    • ►  July (3)
    • ►  April (3)
  • ►  2015 (21)
    • ►  October (1)
    • ►  September (2)
    • ►  August (4)
    • ►  July (1)
    • ►  June (2)
    • ►  May (2)
    • ►  April (4)
    • ►  March (2)
    • ►  February (1)
    • ►  January (2)
  • ►  2014 (24)
    • ►  December (3)
    • ►  November (5)
    • ►  October (1)
    • ►  September (3)
    • ►  August (2)
    • ►  May (1)
    • ►  April (2)
    • ►  March (3)
    • ►  February (2)
    • ►  January (2)
  • ▼  2013 (36)
    • ►  December (3)
    • ►  November (2)
    • ►  October (4)
    • ►  September (3)
    • ►  August (2)
    • ►  July (7)
    • ►  June (3)
    • ►  May (3)
    • ▼  April (4)
      • அந்த நாள் ஞாபகம் ....
      • வந்தாச்சு, வந்தாச்சு....!
      • யாசி
      • அம்மை... சில தகவல்கள்
    • ►  March (1)
    • ►  February (2)
    • ►  January (2)
  • ►  2012 (35)
    • ►  December (3)
    • ►  November (1)
    • ►  October (3)
    • ►  September (3)
    • ►  August (5)
    • ►  July (2)
    • ►  June (3)
    • ►  May (3)
    • ►  April (2)
    • ►  March (2)
    • ►  February (4)
    • ►  January (4)
  • ►  2011 (49)
    • ►  December (4)
    • ►  November (3)
    • ►  October (4)
    • ►  September (1)
    • ►  August (3)
    • ►  July (8)
    • ►  June (6)
    • ►  May (5)
    • ►  April (5)
    • ►  March (5)
    • ►  February (3)
    • ►  January (2)
  • ►  2010 (37)
    • ►  December (7)
    • ►  November (6)
    • ►  October (6)
    • ►  September (6)
    • ►  August (4)
    • ►  July (5)
    • ►  June (3)

வலைப்பூ உலகில் எங்க குடும்பம்

  • பாரதிக்குமார்
  • மதுமிதா
  • சிபிக்குமார்

போக...வர...

  • சிவகுமாரன் கவிதைகள்
    கபீரும் நானும் 55
    1 month ago
  • கீதமஞ்சரி
    தித்திக்குதே (3) இலுப்பை
    1 month ago
  • அக்ஷ்ய பாத்ரம்
    இலையுதிர்காலத்து வண்ணங்கள்
    1 month ago
  • திண்டுக்கல் தனபாலன்
    அதிகார எழுத்துக்கள் அனைத்தும் குறில் / நெடில் - பகுதி 2
    4 months ago
  • முத்துச்சிதறல்
    குளோபல் வில்லேஜ்-2023-2024!!!
    7 months ago
  • ஹரணி பக்கங்கள்.......
    1 year ago
  • சமவெளி
    டில்லி தமிழ்ச் சங்கம் - 23-02-2017
    5 years ago
  • VAI. GOPALAKRISHNAN
    நினைக்கத் தெரிந்த மனமே ... உனக்கு மறக்கத் தெரியாதா?
    5 years ago
  • CrUcifiXioN
    பூச்சிக்கடி -ஹோமியோபதியில் 100% தீர்வு ! Worm trouble
    5 years ago
  • Thanjai Kavithai
    7 years ago
  • வண்ணதாசன்
    இயல்பிலே இருக்கிறேன்
    7 years ago
  • அழியாச் சுடர்கள்
    மௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்
    7 years ago
  • வானவில் மனிதன்
    கவிக்கோ அப்துல் ரகுமான்- ஒரு அஞ்சலி
    8 years ago
  • ஊமைக்கனவுகள்
    அட! இப்படியும் எழுதலாமா?
    8 years ago
  • கோவை2தில்லி
    வண்ணங்களின் சங்கமம்!
    8 years ago
  • செம்மை வனம் | 'காட்டுக்குள் மான் தேடிப் போனால், மான் தெரியும். மான் மட்டுமே தெரியும்’ -பழங்குடிப் பழமொழி
    சிறுவர்களின் காய்ச்சல் மற்றும் தோல்நோய் குறித்து!
    8 years ago
  • ரிஷபன்
    பிச்சி
    9 years ago
  • அடர் கருப்பு
    யார் இந்த அயோத்திதாசர் ? 1845-1914
    9 years ago
  • சைக்கிள்
    இருள் வெளிச்சம்
    9 years ago
  • வட்டங்களில் சுழலுது வாழ்க்கை
    இந்திய வாகனப் பதிவெண் இரகசியம்
    9 years ago
  • ∞கைகள் அள்ளிய நீர்∞
    முந்நூறு ஒட்டகங்களும், ஒரு நாயும்.
    11 years ago
  • கலர் சட்டை நாத்திகன்
    கலர் சட்டை: 1
    12 years ago
  • நசிகேத வெண்பா
    நூற்பயன், நன்றி
    13 years ago
  • இன்னுமொரு கோணம்
    எதுக்கு இவ்வளவு Build Up?
    14 years ago
  • வந்தேமாதரம்
தீதும் நன்றும் பிறர்தர வாரா!
புறநானூறு-192

கணியன் பூங்குன்றனார்

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்
குறள்:314 | அறத்துப்பால் | இன்னா செய்யாமை

திருவள்ளுவர்

அண்டத்தி னுள்ளே அளப்பரி தானவள்
பிண்டத்தி னுள்ளே பெருவெளி கண்டவள்
குண்டத்தி னுள்ளே குணம்பல காணினும்
கண்டத்தி னுள்ளே கலப்பறி யார்களே
திருமந்திரப்பாடல்

திருமூலர்

Facebook Gplus

பறத்தல் - பறத்தல் நிமித்தம்

Created By SoraTemplates | Customized By Sibhi Kumar | Distributed By Gooyaabi Templates